-நூருள் அகமட் ஜாபிர் அலி-
இலங்கையின் வீதிகளில் அரசுக்கு எதிராக மக்கள் போராடும் ஒவ்வொரு நிமிடமும் டாலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் மதிப்பு இழந்து வருவதாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது இது அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுத்து இருக்கிறது.
உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.
உணவு, எரிபொருள், மின்சாரம்?
இலங்கையில் பொருளாதார சூழல் மோசமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைக்கவில்லை. பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர். மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
தீவிரமடைந்துள்ள போராட்டங்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கடந்த சில 10 ஆண்டுகளில், தமிழ் – சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் – இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள், தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எரிந்துவிட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி இருக்கின்றனர்.
பல்வேறு துறையினர் போராட்டம்
கடந்த 2 நாட்களுக்கு முன் இலங்கை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு எதிராகவும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மார்வன் அட்டபட்டு உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மகிர்ந்த ராஜபக்ஷே வேண்டுகோள்
இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே இன்று மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இலங்கை மக்கள் அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளார். “இலங்கையின் பொருளாதார நிலையை மேம்படுத்த 24 மணி நேரமும் அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வீதிகளில் போராடிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் டாலருக்கு நிகரான நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.” என்றார்.