பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென பிஸியான சாலையில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதனால் அங்கு மோசமான தீவிபத்தும் ஏற்பட்டது.
பிஸியான சாலையில் விமானம் மோதி, தீ பயங்கரமாக எரிந்த சூழலில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக விமானங்களில் உச்சபட்ச பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும். இதன் காரணமாகவே பெரும்பாலும் விமானங்களில் விபத்துகள் எதுவும் ஏற்படாது. மேலும், உலகில் பாதுகாப்பான போக்குவரத்து முறையாக விமானங்கள் உள்ளன.

விமான விபத்து:
இருப்பினும், அதையும் தாண்டி சில நேரங்களில் விமானத்தில் பிரச்சினைகள் எதிர்பாராத நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
பிரேசில் நாட்டில் விமானம் திடீரென பிஸியான சாலையில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் சாவ் பாலோ என்ற நகரில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் பறந்து கொண்டிருந்த சிறிய விமானம் கட்டுப்பாட்டை இழந்ததில் திடீரென பிஸியான சாலையில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இந்த சிறிய விமானம் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள பர்ரா ஃபண்டா பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது..
பிஸியான சாலையில் விமானம் மோதிய நிலையில், அங்குச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றிலும் விமானம் மோதியுள்ளது.
பெரும் பரபரப்பு:
இதில் விமான பாகம் மோதியதில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்தார். விமானத்தின் மற்றொரு பகுதி அங்கு டூவீலரில் சென்று கொண்டிருந்த நபரைத் தாக்கியுள்ளது.
மேலும், விமானம் மோதியதில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் சாலை முழுக்க போர்க்களம் போல காட்சியளித்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விமான விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தினர். ஒரு பக்கம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் கவனம் செலுத்தினர்.
அதேநேரம் மற்றொருபுறம் காயமடைந்தோர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆபத்து:
இது தொடர்பான வீடியோக்களை உள்ளூர் டிவி சேனல் டிரோன் மூலம் படம் பிடித்துள்ளது. அதில் விமானம் மோதியதால் எந்தளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
சிறிய விமானமாக இருந்தாலும் அது எந்தளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதைக் காட்டுவதாக அது இருக்கிறது.
பிஸியான சாலையில் திடீரென விமானம் நொறுங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் விபத்துகள்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகிலேயே விமான விபத்து ஏற்பட்டது.
தரையிறங்கிக் கொண்டு இருந்த விமானத்தின் மீது ராணுவ ஹெலிகாப்டர் மோதியது. இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அது நடந்து சில நாட்களில் மீண்டும் அதேபோன்ற ஒரு விபத்து இப்போது ஏற்பட்டுள்ளது. விமான விபத்துகள் தொடரும் நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.





