பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் காபந்து அரசை வழிநடத்தப் பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில காலமாகவே குழப்பமான சூழலே நிலவி வருகிறது. அங்கு இம்ரான் கானுக்கு பிறகு ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக வந்த நிலையில், அங்குப் பொருளாதார சூழல் மிக மோசமாக இருந்தது.
இது ஒரு பக்கம் இருக்க அந்நாட்டில் 2022 வரை பிரதமராக இருந்த இம்ரான் கானும் சிறையில் அடைக்கப்பட்டார். தோஷகானா வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தான் பாகிஸ்தான் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது அங்கு இப்போது அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவரே தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஒரு பக்கம் அவரது வழக்கறிஞர்கள் இறங்கியுள்ளனர்.
கலைப்பு
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அந்நாட்டின் சட்டப்படி அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதுவரை காபந்து அரசு பதவியில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இம்ரான் சிறையில் இருக்கும் நிலையில், தேர்தலை நடத்தி முடிக்கவே இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே பாகிஸ்தானில் உள்ள காபந்து அரசை வழிநடத்த அந்நாட்டின் எம்.பி அன்வர்-உல்-ஹக் கக்கர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அங்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதையும் அன்வர்-உல்-ஹக் கக்கர் மேற்பார்வையிட உள்ளார்.
காபந்து பிரதமர்
அங்குப் பிரதமராக இருந்த ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ரியாஸ் இடையே புதிய பிரதமரைத் தேர்வு செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காபந்து அரசைத் தேர்தல் வரை அன்வர்-உல்-ஹக் கக்கர் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலை மேற்பார்வையிடும் பொறுப்பும் அன்வர்-உல்-ஹக் கக்கருக்கு இருக்கிறது.
ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இவரைக் காபந்து பிரதமராக நியமிக்க ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானை சேர்ந்த அதிகம் அறியப்படாத அரசியல்வாதி தான் இந்த அன்வர்-உல்-ஹக் கக்கர். இவர் தேர்தல்வரை பாகிஸ்தான் நாட்டை வழிநடத்த ஒரு புதிய கேபினட் அமைச்சரவையைத் தேர்வு செய்ய உள்ளார்.
இவரைப் பிரதமராக நியமித்ததற்கு அந்நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார விஷயங்களில் கொள்கை முடிவுகளை எடுக்கக் காபந்து பிரதமருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது. பாகிஸ்தான் சட்டப்படி 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்..
அதன்படி பார்த்தால் நவ. முதல் வாரத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். இருப்பினும், இப்போது அங்கிருக்கும் பொருளாதார சிக்கலால் தேர்தல் 6 மாதங்கள் வரை தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் காபந்து பிரதமரின் நியமனம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.