பேஸ்புக்கில் பாகிஸ்தானியருடன் நட்பாகி, அவரைச் சந்திக்க பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவுக்குச் சென்ற இந்தியப் பெண் அஞ்சு தனக்கு பாகிஸ்தானியருடன் திருமணமாகிவிட்டது என்ற செய்தியை மறுக்கிறார்.
பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரியுடன் உரையாடிய அவர், திருமணமாகி விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார். தற்போது இந்தியா திரும்ப தயாராகி வருவதாகவும், புதன்கிழமை லாகூர் சென்றடைவதாகவும் அஞ்சு பிபிசி நிருபரிடம் தெரிவித்தார். மறுநாள் அவள் இந்தியா திரும்பிவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எனது திருமணம் பற்றிய செய்தி ஆதாரமற்றது. இந்தச் செய்திகளால் என் குழந்தைகள் வருத்தமடைந்துள்ளனர். இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்பதை நான் உங்களுக்கு தெளிவாகச் சொல்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
ஆனால் இதை மறுத்துள்ள உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் திருமணம் நடந்துவிட்டதாக உறுதி செய்துள்ளனர்.
செவ்வாயன்று நீதிமன்றத்தில் அஞ்சுவும் நஸ்ருல்லாவும் திருமண விழாவை முடித்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரி நசீர் சத்தி பிபிசியின் அஜிசுல்லா கானிடம் கூறியுள்ளார்.
உள்ளூர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நஸ்ருல்லா திருமணம் செய்து கொண்டதாக தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.
இந்த நிக்காஹ்வின் போது நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக ஒரு காவல் அதிகாரி தெரிவித்தார்.
அஞ்சு இந்தியாவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும், அதன் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொள்ள விசா கிடைத்ததாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
அஞ்சு மற்றும் நஸ்ருல்லா திருமணம் செய்ததாகக் கூறப்படும் ஆவணங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால் இவற்றை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை. இந்த ஆவணங்களில் அவரது பெயர் ஃபாத்திமா என எழுதப்பட்டுள்ளது.
நட்பு மலர்ந்தது எப்படி?
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் மான் பாலா மாவட்டத்தில் வசிக்கும் 29 வயதான நஸ்ருல்லா, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண்ணுடன் சமூக ஊடக வாயிலாகத் தொடர்புகொண்டு நட்பாகப் பழகியிருக்கிறார்.
தொடர்ந்து இந்த உறவு அவர்களுக்குள் மிகவும் ஆழமான உறவாக மாறியது. இதற்கிடையே, அண்மையில் நஸ்ருலாவை காண அஞ்சு பாகிஸ்தானுக்குச் சென்றார். அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள மான் பாலாவை அடைந்த அஞ்சு பிபிசியிடம் பேசினார்.
அப்போது அவர், “திருமணத்திற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறுவதில் தமக்கு எந்த அழுத்தமும் இல்லை,” என்று கூறினார். அதேவேளையில் அவருக்கும் திருமணத்திற்காக மதம் மாறுவதற்கு தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை என்பது அவரது உரையாடலில் தெரிய வந்தது.
விசாவுக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்த அஞ்சு
பொதுவாக, இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பர குடிமக்கள் விசா வழங்கும்போது மிகக் குறைந்த நகரங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கின்றன.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அஞ்சுவுக்கு மிகுந்த சிரமத்துக்குப் பிறகே விசா கிடைத்திருக்கிறது.
ஒருபுறம், அஞ்சு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு நடையாய் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் நஸ்ருல்லா பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அலுவலகங்களுக்குச் சென்று அஞ்சுவுக்கு விசா கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
“அஞ்சு அங்குள்ள அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிப்பது, அவர்களுக்கு விளக்குவது உள்ளிட்ட வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.
விசா பெறுவது அஞ்சுவின் உரிமை என்றும், நாங்கள் இருவரும் சந்திக்க விரும்பினால், எங்களுக்கு அதற்கான அனுமதியை அளிக்கவேண்டும் என்றும் நான் இங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து அனுமதி கேட்டு, அதைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன்,” என்கிறார் நஸ்ருல்லா.
இறுதியில், இருவரின் முயற்சியும் வெற்றிபெற்றது. ஆனால் அதிகாரிகளைச் சமாதானம் செய்வதற்கு மட்டுமே இரண்டு ஆண்டுகள் ஆனது. அதன் பிறகு அஞ்சு பாகிஸ்தானுக்கு செல்ல விசா கிடைத்ததுடன், மான் பாலாவுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டார்.
அஞ்சு பாகிஸ்தானை அடைவதற்கும், மான் பாலாவிற்கும் செல்வதற்கும் அனைத்து சட்டத் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்ததாக நஸ்ருல்லா கூறுகிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “நானும் அஞ்சுவும் விசா பெற பல்லாயிரக் கணக்கான ரூபாய்களை செலவு செய்துள்ளோம். இப்போது விசா நடைமுறையில் இருப்பதால், இனி எந்த பிரச்னையும் இருக்காது,” என்றார்.