சல்லடை போட்டு ஆராய போறாங்களாம்!
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கிரீன் கார்டு வாங்கப் போகிறீர்களா? இனிமேல் உங்களிடம் பண வசதி இருக்கிறதா, குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கிறது, வேலை செய்யும் திறன் இருக்கிறதா என்பதையெல்லாம் அதிகாரிகள் கவனமாக பார்க்கப் போகிறார்களாம்.. இன்று அதாவது செப்டம்பர் 18 முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
உங்களிடம் பண வசதி இருக்கிறதா, குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கிறது, வேலை செய்யும் திறன் இருக்கிறதா என்பதையெல்லாம் அதிகாரிகள் கவனமாக பார்க்க உள்ளனர்..

கிரீன் கார்டு நடைமுறை
இதற்கு காரணம், அமெரிக்காவுக்கு வரும் ஒருவர் அந்நாட்டு அரசின் உதவியை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலைக்கு சென்று விடக்கூடாது என்பதுதான். அதனால் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் நபரின் எதிர்கால நிலை எப்படி இருக்கும் என்பதையும் அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்.
அதற்காக முதலில் அந்த நபரின் வயது, உடல்நிலை, குடும்ப நிலை, பணம் மற்றும் சொத்து வசதி, கல்வி மற்றும் வேலைத்திறன் ஆகியவை பார்க்கப்படும். உதாரணமாக, ஒருவர் எந்த வயதில் இருக்கிறார், அவரது குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள், அவரிடம் எவ்வளவு பணம் அல்லது சொத்து இருக்கிறது, என்ன படித்திருக்கிறார், என்ன வேலை செய்யும் திறன் இருக்கிறது போன்ற விஷயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அமெரிக்க அதிகாரிகள்
அதேபோல், அமெரிக்க அரசிடம் இருந்து கிடைக்கும் சில வகையான நிதியுதவிகளை அந்த நபர் ஏற்கனவே பெற்றிருக்கிறாரா என்பதையும் அதிகாரிகள் பார்க்க வாய்ப்புண்டு… சில அரசு பண உதவிகள், வீட்டு வசதி உதவிகள், உணவு உதவிகள் மற்றும் சில கல்வி தொடர்பான உதவிகள் போன்றவையும் இந்த செக்கிங் லிஸ்ட்டில் வரலாம்.
அதற்காக அரசு உதவி பெற்றால் கிரீன் கார்டு கிடையாது என்று அர்த்தம் இல்லை. ஒரே ஒரு விஷயத்தை வைத்து ஒருவரின் விண்ணப்பத்தை நிராகரிக்கவும் முடியாது. அவருடைய ஒட்டுமொத்த சூழ்நிலையைத்தான் அதிகாரிகள் பார்ப்பார்கள்.
அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் அந்த நபருக்கு நிதி ஆதரவு அளிப்பதாக உறுதி அளிக்கும் குடும்பத்தினர் அல்லது ஆதரவாளரின் ஆவணங்களும் முக்கியமாக பார்க்கப்படும்.. ஏனென்றால், அமெரிக்கா சென்ற பிறகு அந்த நபருக்கு தேவையான பொருளாதார ஆதரவு எப்படி கிடைக்கும் என்பதும் கணக்கில் வரும்.

யார் யாருக்கு இது பொருந்தும்
இந்த புதிய நடைமுறை அனைவருக்கும் பொருந்தாது. குடும்ப உறவுகள் மூலம் கிரீன் கார்டு கேட்பவர்கள், வேலை அடிப்படையில் கிரீன் கார்டு கேட்பவர்கள் உள்ளிட்ட பலருக்கு இது பொருந்தும். அதே நேரத்தில் அகதிகள், புகலிடம் பெற்றவர்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்த விதியில் இருந்து விலக்கு உள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே கிரீன் கார்டு பெற்றவர்களுக்கும் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது… அது என்ன தெரியுமா? அமெரிக்காவில் புதிதாக கிரீன் கார்டு பெறுபவர்களுக்கு பல வருடங்களாக வே ஒரு கைடு புக் அதாவது வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டு வந்தது.
அமெரிக்காவில் புதிதாக குடியேறியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உரிமைகள், கடமைகள், வேலை, வரி, மருத்துவ வசதி, வீடு, வெளிநாடு சென்று திரும்புவதற்கான விதிகள் உள்ளிட்ட எல்லா அடிப்படை தகவல்களும் அந்த புத்தகத்தில்தான் இருக்கும்..|
தபாலில் வராத கைடு – என்னாச்சு
ஆனால் சமீபத்தில் கிரீன் கார்டு பெற்ற சிலருக்கு அந்த புத்தகம் தபாலில் வரவில்லையாம்.. இதனால், கிரீன் கார்டுக்கு ஏதாவது பிரச்சினையா? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி எதுவுமே இல்லை. அந்த புத்தகம் கையில் வராததால் கிரீன் கார்டின் சட்டப்பூர்வ நிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அது கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய குடியேற்ற ஆவணமும் கிடையாது.
அந்த புத்தகத்தில் இருந்த தகவல்கள் வெப்சைட்டில் தொடர்ந்து கிடைக்கும். எனவே புத்தகம் வரவில்லை என்றால் தனியாக கவலைப்பட வேண்டியதில்லை. அச்சு புத்தகத்தை தயாரித்து தபாலில் அனுப்புவதற்கான செலவை குறைக்கும் நோக்கத்திலும் இந்த மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுதான் புத்தகம் வழங்கப்படாததற்கான அதிகாரப்பூர்வ காரணம் என்று அமெரிக்க குடியேற்றத்துறை தெரிவிக்கவில்லை.
2 மாற்றங்கள் என்னென்ன
ஆக, கிரீன் கார்டு தொடர்பாக 2 வேறு மாற்றங்கள் தற்போது நடந்துள்ளன. ஏற்கனவே கிரீன் கார்டு கிடைத்தவர்களுக்கு வழிகாட்டி புத்தகம் கையில் வராமல் இருக்கலாம். அதனால் அவர்களின் கிரீன் கார்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ஆனால் புதிதாக கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் பண வசதி, குடும்ப நிலை, உடல்நிலை, கல்வி, வேலைத்திறன் உள்ளிட்ட விஷயங்களை அதிகாரிகள் இனிமேல் தீவிரமாக பரிசீலிக்கப் போகிறார்கள். இதுதான் இன்று செப்டம்பர் 18 முதல் வந்துள்ள முக்கியமான மாற்றமாகும்…!!!



