கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அப்பாவி ஏழைகளின் சிறுநீரகங்களை மோசடி செய்த சம்பவத்தின் முகவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, பொரளை தனியார் மருத்துவமனையொன்றில் ஏழை மக்களை ஏமாற்றி சிறுநீரகங்களைப் பெற்று பாரிய தொகைக்கு வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதாக அண்மைக்காலமாக பரபரப்பான புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ள கொழும்பு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார், சிறுநீரக மோசடி சம்பவத்தின் பிரதான முகவரை கைது செய்திருந்தனர்.
கொழும்பு, மட்டக்குளிய கஜிமா வத்தைப் பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய மொஹம்மத் பஷீர் முஹம்மத் ரஜாப்தீன் அல்லது பாய் என்றழைக்கப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது
இவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கொழும்பில் வைத்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுநீரகமொன்றுக்கு எண்பது லட்சம் தொடக்கம் ஒன்றரைக் கோடி வரை தருவதாக வாக்களித்துவிட்டு வெறும் இரண்டரை லட்சம் ரூபாயைக் கொடுத்து ஏழை மக்களை மோசடி செய்துள்ளதாகவும் , தற்போதைக்கு சுமார் நான்கு நபர்கள் வரை இவர் மோசடி செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு மேலதிக நீதவான் நீதிபதி ரஜிந்திரா ஜயசூரிய முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபரை அடையாள அணிவகுப்பொன்றுக்கு உட்படுத்துமாறும் அதுவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.