திடீர் நில அதிர்வால் குலுங்கிய ஈரான்–பீதியில் பொதுமக்கள்ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் மசந்தரான் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் பதிவானதாக கூறப்படும் நிலையில் ஈரான் அணுகுண்டு சோதனை நடத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் மசந்தரான் மாகாணத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் நேற்று இரவு திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக அவர்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து தஞ்சமடைந்தனர்.

இதனை ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளது. இதுபற்றி ஈரான் ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தியில், ”தலைநகர் டெஹ்ரானில் 4.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி ஈரான் அரசு செய்தி நிறுவனம் ஐஆர்ஐபி கூறுகையில், ”நில அதிர்வு ஏற்பட்டு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய இழப்புகள் எதுவும் பதிவாகவில்லை” என கூறியுள்ளது. ஈரானில் இதுபோன்று அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
முன்னதாக மார்ச் 3ல் தெற்கு ஈரானில் உள்ள கெராஷ் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தற்போது தெஹ்ரான், மசந்தரான், கோம் மாகாணம் மற்றும் அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் அவசரகால குழுக்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டன.
இதற்கிடையே தான் ஈரான் அணுகுண்டு சோதனை நடத்தியதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதற்கு இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதோடு ஈரான் மீது போரை தொடங்கி உள்ளன. அணுஆயுதம் தயாரிப்பதற்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் ஈரான் அதற்கு உடன்படவில்லை.
இதனால் ஈரான் அணுகுண்டு சோதனை ஏதாவது நடத்தியதா? இதனால் தான் நிலஅதிர்வு ஏற்பட்டடதா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.





