முக்கிய மசோதா அமெரிக்க
நாடாளுமன்றத்தில் தாக்கல்
ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் காலங்காலமாக பஞ்சாயத்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500% வரியை விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு செனட் அவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் இந்தியா இந்த வரியை எதிர்கொள்ளும். அமெரிக்காவின் பொருட்களுக்கு உலக நாடுகள் வரியை விதிக்கின்றன. அதேபோல உலக நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவும் வரியை விதிக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சரி சமமாக இல்லை. எனவே இதனை சமன்படுத்தும் முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டிருக்கிறார்.
எனவே ஆகஸ்ட் 1 முதல் பல நாடுகளுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக 14 நாடுகளுக்கு டிரம்ப் கடிதங்களை அனுப்பியிருக்கிறார். லிஸ்ட்டில் உள்ள 14 நாடுகளுக்கு 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இந்தியாவுக்கு இப்படி எந்த கடிதமும் இதுவரை வரவில்லை.
அப்படியெனில் வரி விஷயத்தில் இந்தியா இன்னும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது பாக்கி இருக்கிறது என அர்த்தம். இந்திய அதிகாரிகள் அமெரிக்கா சென்று, வாகன உதிரி பாகங்கள், எஃகு மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிக்க இருக்கின்றனர்.
நிலைமை இப்படி இருக்கையில் வரி விஷயத்தில் அமெரிக்கா புதிய குண்டை தூக்கி போட்டிருக்கிறது. அதாவது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களை வாங்கும் நாடுகளை தண்டிக்கும் நோக்கில் “ரஷ்யாவுக்குத் தடை விதிக்கும் சட்டம் 2025” என்ற மசோதா, அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த மசோதா இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை குறிவைக்கிறது. இந்த நாடுகளுக்கு 500% வரி விதிக்கப்படும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்த மசோதா இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில், இது இந்தியாவில் புதிய கவலைகளை உருவாக்கியுள்ளது. டிரம்ப் கூறுகையில், “வரி விவகாரம் முற்றிலும் என்னுடைய விருப்பப்படி நடக்க வேண்டும். நான் இதை தீவிரமாகக் கவனித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். இதனை ப்ளூம்பெர்க் உறுதி செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இந்தியா அமெரிக்காவின் புதிய வரிகளிலிருந்து சலுகைகளை பெறும். ஒருவேளை ஒப்பந்தம் போடப்படாமல் போனால் அது இந்தியாவில் பெரிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்தியாவின் ஏற்றுமதி துறைகள் அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியுள்ளன. ரத்தினங்கள், மருந்துகள், மின்னணுவியல் மற்றும் எஃகு போன்ற துறைகள் அதிக இழப்புகளை சந்திக்க நேரிடலாம் என்று பொருளாதார நிபுணர் சங்கநாத் பந்தோபாத்யாய் எச்சரித்தார்.
“7-10 பில்லியன் டாலர் வரை இழப்புகள் ஏற்படலாம்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா தாராளமான சலுகைகளை முன்மொழிந்துள்ளது. அமெரிக்க இறக்குமதியில் 60% க்கு பூஜ்ய வரி மற்றும் 90% பொருட்களுக்கு முன்னுரிமை அணுகல் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
வரி விஷயத்தில் அமெரிக்கா கொஞ்சம் ஓவராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பாரக்க வேண்டும்.





