ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவராக விளங்கிய அயதுல்லா அலி காமெனி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் உயிரிழந்து பல வாரங்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் அவரது உடலை ஈரான் அடக்கம் செய்யவில்லையாம்.
ஒரு காலத்தில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டித் தனது பலத்தைக் காட்டிய ஈரான், இப்போது இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலை ஆரம்பித்து இருந்தது.
அதுவே பிறகு ஒரு மாதம் நீடித்த போராக மாறியது. ஒரு மாதமாக இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. அதன் பிறகே தற்காலிக போர் நிறுத்தம் போடப்பட்டது. இப்போதும் கூட அங்குப் பதற்றமான ஒரே சூழலே இருக்கிறது. எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கும் என்ற நிலையே இருக்கிறது.
கமேனி இந்த யுத்தத்தின் முதல் நாளே, அதாவது பிப்ரவரி 28 தாக்குதலின் போத, 86 வயதான அப்போதைய ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். பொதுவாக இஸ்லாமிய முறைப்படி உடல் உடனடியாக அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், கமேனி உடல் தற்போது வரை ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாம்.
இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பயந்தே இதுபோல ரகசிய இடத்தில் கமேனி சடலத்தை ஈரான் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அடக்கம் செய்யப்படவில்லை: அலி கமேனி பல ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்தவர். எனவே, அவரது இறுதிச் சடங்கை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடத்துவதில் ஈரானுக்கு விருப்பமில்லை. அதேநேரம் பல லட்சம் மக்களை ஒன்றுகூட வைத்து இறுதிச் சடங்கு நடத்துவதும் ஆபத்தானது.
ஏனென்றால், இதர முக்கிய தலைவர்கள், மக்கள் கூடும் இறுதி ஊர்வலத்தின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தினால், அது ஈரான் ஆட்சியையே வேரோடு சாய்த்துவிடும் எனக் கவலைப்படுகிறார்கள் அந்நாட்டு அதிகாரிகள்.
தற்போது எந்தவொரு ரிஸ்க்கையும் எடுக்கும் நிலையில் ஈரான் அரசு இல்லை.. ஈரான் மிகவும் பலவீனமாக இருப்பதால் கவனமாகவே ஒவ்வொரு நடவடிக்கையையும் செய்ய வேண்டி இருக்கிறது.
அஞ்சும் ஈரான்: 1989-ல் ஈரானின் முதல் உச்ச தலைவராக இருந்த ருஹோல்லா கமேனி மறைந்தபோது, சுமார் ஒரு கோடி மக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆனால், அதன் பிறகு அத்தகைய மக்கள் எழுச்சி தென்படவில்லை.
மாறாக, மக்கள் கிளர்ச்சி செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஈரான் அரசு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஈரான் அரசு குழப்பத்தில் இருக்கிறதாம்.
மேலும், அலி கமேனி உடலை நீண்ட நாட்களே இப்படியே வைத்திருக்கவும் முடியாது. இதனால் கமேனியின் சொந்த ஊரான ‘மஷாத்’ நகரில் ரகசியமாகவோ அல்லது பலத்த பாதுகாப்புடனோ அடக்கம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
ஒரு நாட்டின் உச்ச தலைவர் இறந்து வாரங்களாகியும் அவரை முறையாக அடக்கம் செய்ய முடியாத நிலை, அந்த நாட்டின் அதிகார மட்டம் எவ்வளவு குழப்பத்தில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏப்ரல் 8-ல் போடப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. அதற்குள் இறுதிச் சடங்கை நடத்தத் தவறினால், மீண்டும் போர் வெடிக்கும்.. இது நிலைமையை மேலும் மோசமானதாகவே மாற்றும்.




