அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் தொடரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முடக்கியுள்ளது.
எந்தவொரு கப்பலையும் விட மாட்டோம் என இரு நாடுகளும் மாறி மாறி மிரட்டி வருகிறது. இந்தச் சூழலில், ரஷ்ய கோடீஸ்வரருக்கு சொந்தமான பிரம்மாண்ட சொகுசு கப்பல், கட்டுப்பாடுகள் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியை கடந்திருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
உலக நாடுகளின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நடைபெறும் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி, தற்போது அமெரிக்கா-ஈரான் மோதலால் போர்க்களமாக மாறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, இந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்தை ஈரான் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

ஹார்முஸ்
மறுபுறம் தாக்குதலை நிறுத்தினாலும் கூட அமெரிக்காவும் ஈரானை முற்றுகையிட்டுள்ளது. அதாவது எந்தவொரு கப்பலும் ஹார்முஸை கடந்து ஈரானுக்கு செல்ல விட மாட்டோம் எனச் சொல்லி அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் ஒட்டுமொத்த ஹார்முஸும் பதற்றமாகவே உள்ளது. இதனால் பொதுவாக ஒரு நாளைக்கு 125 முதல் 140 கப்பல்கள் வரை கடந்து செல்லும் இந்த இடத்தில், இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே வணிகக் கப்பல்கள் அனுமதிக்கப்படுகின்றன.
நோர்ட் கப்பல்
இத்தகைய பதற்றமான சூழலில், சுமார் 500 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 13899 கோடி மதிப்புள்ள நோர்ட் என்ற சொகுசு கப்பல் சனிக்கிழமை காலை ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றுள்ளது.
இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் அனைத்தையும் கண்டுகொள்ளாமல் இந்த கப்பல் வந்துள்ளது.
துபாயில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்ட இந்தக் கப்பல், சனிக்கிழமை காலை ஜலசந்தியைக் கடந்து, ஞாயிறு அதிகாலை ஓமனின் மஸ்கட் நகரைச் சென்றடைந்துள்ளது.
ஈரானின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி, இந்த உல்லாசக் கப்பலுக்கு எப்படி அனுமதி கிடைத்தது என்பது இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
யாருக்கு சொந்தமானது
இந்த சொகுசு கப்பல் ரஷ்யாவின் இரும்புத் தொழில் அதிபர் அலெக்ஸி மொர்தாஷோவ் (Alexey Mordashov) என்பவருக்குச் சொந்தமானதாகும். இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கருதப்படுபவர்.
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இவரது நோர்ட் கப்பல் தான் இப்போது ஹார்முஸை கடந்துள்ளது.
142 மீட்டர் (465 அடி) நீளம் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பலில் 20 சொகுசு அறைகள், நீச்சல் குளம், ஹெலிபேட் உள்ளது. உலகின் மிக பெரிய மற்றும் விலையுயர்ந்த சொகுசு கப்பல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
ஈரான்- ரஷ்யா உறவுகள்
ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நீண்டகால நட்பு நாடுகளாக உள்ளன. குறிப்பாக 2025ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது.
இப்போது கூட போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷ்யாவுக்கே சென்றுள்ளார். அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துப் பேசினார்.
இந்த சூழலில் சொகுசு கப்பல் ஜலசந்தியைக் கடந்துள்ளது தற்செயலானது அல்ல என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஈரானின் துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகை இட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் கப்பல், அதுவும் புதினுக்கு நெருக்கமான தொழிலதிபரின் கப்பல் கடந்து செலவது உலகிற்கு அனுப்பப்படும் மெசேஜ் ஆகவே பார்க்கப்படுகிறது.





