நஜீப் பின் கபூர்
நன்றி: 06.09.2026 ஞாயிறு தினக்குரல்

பொதுவாக போர்கள் என்று வரும் போது அதில் தீர்க்கமான கட்டங்கள் வருவதுண்டு. அதுபோலத்தான் அரசியல் செய்யும் போதும் ஆளும் தரப்பும் எதிரணியும் தீர்க்கமான சந்தர்ப்பங்களைக் கடக்க-சந்திக்க வேண்டி வரும். இதற்கான குறிப்புகளை இப்போது தொட்டுச் செல்வோம்.
இரண்டாம் உலகப்போரின் போது மேற்கில் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த அடோல்ப் ஹிட்லர் அதிரடியாக தனது தாக்குதலை கிழக்கு நோக்கி குறிப்பாக ரஸ்யா மீது தனது படைகளை திருப்பினார். அதுதான் ஹிட்லர் முடிவாகவும் அமைந்தது. உள்நாட்டில் ரோஹன விஜேவீர உலப்பனையில் கைதாகி படுகொலை செய்யப்பட்டதுடன் அவரது சகாக்கள் பின்வாங்க வேண்டி வந்தது. முள்ளிவாய்காலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொலையுடன் அந்த விடுதலைப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.
இதிலிருந்து நாம் என்ன செய்தியைச் சொல்ல வருகின்றோம் என்றால் அரசுகளுக்கிடையில் நடக்கின்ற போர்களாக இருந்தாலும் அரசியலில் நடக்கின்ற போராட்டங்களாக இருந்தாலும் தீர்க்கமான சந்தர்ப்பங்கள் வரும்-அமையும். அந்த வகையில் இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் சந்திக்கின்ற ஒரு தீர்க்கமான விவகாரமாக இருபத்திரண்டாம் அரசியல் திருத்தத்தை நாம் பார்க்கின்றோம். இதில் நீதிபதிகளின் வயதை நீடிக்க அரசு பிரேரணையைக் கொண்டு வந்தது. அதனை நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையால் சாதிக்கலாம் என்று எதிர்பார்த்தது. அதே நேரம் இதனை எதிர்க்கின்ற தரப்பினர் இது அரசின் சர்வாதிகாரத்துக்கான துவக்கம் என்று அதனை எதிர்க்கின்றனர். அதனால் விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்தது.

இது தொடர்பாக எதிராகவும் ஆதரவாகவும் என்பத்திரண்டு (82) முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பான விசாரணைகளுக்காக பிரதம நீதிபதி பிரித்தி பதமன் சூரசேன தலைமையில் மேலும் நான்கு பேரைக் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டு உடனடியாக தனது விசாரணைகளைத் துவங்கி இருக்கின்றது. அப்போது இந்த ஐவர் விசாரணைக் குழுவை ஏற்க முடியாது பூரண நீதிபதிகள் இந்த குழுவில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
பூரண குழு என்பது பதின்மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு. ஆனால் இந்த கோரிக்கையை சூரசேன தலைமையிலான குழு நிராகரித்து விட்டது. எனவே ஐவர் அடங்கிய குழுதான் இந்த விவகாரத்தை ஆராய்ந்தது. இன்று இந்த வழக்கு முடிந்து நாட்டு மக்கள் அனைவரின் கவனமும் அதன் தீர்ப்பு மீது இருக்கின்றது.
அரசும் ஏறக்குறைய ஒட்டுமொத்த எதிர்க் கட்சிகளும் இந்த சமரில் எதிரும் புதிருமாக நிற்கின்றன. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் விமர்சனங்கள் தொடரும். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை நாம் ஏற்கத் தயாராக இல்லை என்றும் சில குரல்கள் இப்போதே கேட்கின்றது.
விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற துவக்க நாளிலே நீதிமன்றத்துக்கு முன்னால் சில குழுக்கள் பகிரங்கமாகவே தமது எதிர்ப்பை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன. இன்னும் சிலர் தீர்ப்பு தமக்கு வாய்ப்பாக இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை சுற்றிவளைப்போம் என்று பேசி வருகின்றார்கள். எனவே அவர்கள் தீர்ப்பை ஏற்க்கத் தயாராக இல்லை என்பது தெளிவாகின்றது. இப்போது ஆதரவு எதிர்தரப்பு குழுக்களின் வாய்ப்புக்களைப் பார்ப்போம்.
அரசு தரப்பு குவிந்து கிடக்கின்ற வழக்கு விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்கவும் அதற்கு அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளவே இந்த நீதிபதிகளின் வயதை நீடிப்பதற்காக சொல்கின்றன. இது அவர்களின் பிரதான வாதமாக இருக்கின்றது. மேலும் இதற்குத்தான் நாம் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்றிருக்கின்றோம். எனவே இதனை எதிர்ப்பது எந்த நியாயமும் கிடையாது என்று கூறுகின்றார்கள்.
இது அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்காக சமைக்கின்ற பாதை. எனவே இதனை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் எனவேதான் நாம் இதற்கு எதிராக ஒன்றிணைந்திருக்கின்றோம். இந்த வழக்குகளை நீதிமன்றத்தின் முன்னால் கொண்டு வந்திருக்கின்றோம் என்பது எதிர்ப்போர் வாதமாக இருக்கின்றது. அதே நேரம் நமது ஆட்சி காலத்தில் இது போன்ற தவறுகள் நடந்திருக்கின்றன என்பதனையும் எதிர்ப்போரே ஏற்றுக் கொள்கின்றார்கள்.

எனவே அதிகாரத்தில் இருக்கின்ற போது நீதித்துறையில் தமக்கு வரும் சிக்கல்களை சவால்களை தடுத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றார்கள் என்பது சிராணி பண்டாநாயக்க விவகாரத்தில் நாம் பார்க்க முடிந்தது. அதனை இப்போது நாமலே பகிரங்கமாக மேடைகளில் அப்பன் செய்த பெரும் தவறு என பேசியும் வருகின்றார். ஆளும் தரப்பு இந்த வழக்கை விசாரணை செய்கின்ற குழு மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற தீர்ப்பை எதிர்பார்க்கின்றது.
அதே நேரம் இதனை எதிர்ப்பவர்கள் மூன்றில் இரண்டு போதாது இதற்கு சர்வசன வாக்கெடுப்பும் தேவை என்ற தீர்ப்பை எதிர்பார்க்கின்றார்கள். அதற்காகத்தான் அவர்கள் நீதி மன்றத்துக்கும் போய் இருக்கின்றார்கள். எதிரணி எதிர்பார்ப்பது போல நாடளுமன்ற பெரும்பான்மையுடன் சர்வசன வாக்கெடுப்பும் தேவையென தீர்ப்பு என வைத்துக் கொள்வோம்.
அப்போது அந்த வாக்கெடுப்பில் இவர்கள் எதிர்பார்ப்பது போல இலகுவாக வெற்றி பெற்று விடுவார்களா என்பதனைத் தர்க்க ரீதியில் இப்போது பார்ப்போம். இந்த நீதிபதிகளின் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதை எதிர்ப்போர் அனைவரும்போல ஊழல் மேடிகள் சட்டவிரோத அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு நீதிமன்ற விசாரணையை எதிர்பார்த்து நிற்பவர்கள்.
அதனால் இவர்கள் வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து தண்டனை வழங்குவதை எதிர்க்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.? அந்த வகையில் இவர்களை பொதுமக்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்ற கேள்வி இருக்கின்றது. மேலும் கடந்த காலங்களில் மிகவும் மோசமாக திட்டிக் கொண்டவர்கள் கேலமாக பேசிக் கொண்டவர்கள்தான் இந்த விவகாரத்தில் ஓரணியில் இணைந்திருக்கின்றார்கள். அதனால் சாமர சம்பத் கீரியும் பாம்பும் ஓரணியில் இணைய வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்புக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அதனால் இவர்களை மீது பொது மக்களுக்கு பெருத்த சந்தேகம் இருக்கின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்று நாட்டில் பதினொரு இலட்சம் (1100000) வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. இதில் ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் பாதிக்கப்படுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களின் குடும்பங்கள் இதற்காக செலவு செய்கின்ற பணம் காலம் துன்பங்கள் என்று குறைந்தது ஐந்து தசம் ஐந்து (5.5.) மில்லியன் மக்கள் நேரடியாக இதில் பாதிக்கப்படுகின்றார்கள். இது நமது நாட்டில் இருக்கின்ற மொத்த குடித்தொகையில் இருபது (20) சதவீதம் என்ற அளவில் அமைகின்றது.
எனவே நாட்டில் இருக்கின்ற இருபது சதவீதமான குடிமக்கள் இந்த வழக்கு துரிதமாக நடைபெறுவதற்கு ஆதரவான மனநிலையில் இருப்பதுதான் யதார்த்தமாக இருக்க முடியும். எனவே தனிமனிதர்கள் என்ற வகையில் இதன் ஆதிக்கம் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டி இருக்கின்றது.

இந்த வழக்குகளில் சம்பந்தபடுகின்ற சட்டதரணிகளை எப்போதும் தமக்கு நிறைய வழக்குகள் இருப்பது வருவது அவர்களின் வருமானத்துக்கான ஊற்றாக இருக்கும். அதுதான் அவர்கள் பிழைப்பாகவும் தங்கச் சுரங்கமாகவும் (வழக்குகள்) இருப்பதால் வழக்குகள் துரிதமாக விசாரிக்கப்படுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்று நாம் சிந்திக்கலாம் – வாதிடலாம். தீர்ப்பு, கருத்துக் கணிப்பை கட்டாயப்படுத்தினால் மேற்சொன்ன விடயம் நேரடியாகவும் மறைமுகவாகவும் இதில் தாக்கம் செலுத்தும்.
பொதுத் தேர்தல் நடந்து இன்னும் இரண்டு வருடங்கள் கூட பூர்த்தியடையாமல் இருக்கின்றது அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் பதவிக்கு வந்திருக்கின்ற அரசின் செல்வாக்கும் இங்கு ஆளும் தரப்புக்கு துணையாக வரும். அதனால் ஆளும் தரப்பு கருத்துக் கணிப்பு பரப்புரை மேடைகளில் கனரக ஆயுதங்களுடன் வருவார்கள். எதிரணி அல்லது எதிர்ப்போர் பலயீனமாகவே இருக்கின்றார்கள். அவர்கள் கத்தி பொல்லு காட்டுத் துப்பாகிகளுடன்தான் இதனை சந்திக்கின்ற ஒரு நிலை களத்தில் இருக்கின்றது.
எதிரணியினர் தாங்களுடைய வழக்கை தாங்களே எப்படி விசாரிக்க முடியும் என்று கேட்பது நியாயமான வாதமாக இருந்தாலும் அதுவும் அரசியல் யாப்புக்கு இசைவாகத்தான் நடக்கின்றது என்பதற்கு நல்ல சான்றுதான் முழு நீதிபதிகளும் இந்த விசாரணையில் இணைக்கப்பட வேண்டும் என்று கேட்ட போது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை எதிரணிகள் ஏற்றுக் கொண்டது.
இதிலிருந்து ஜனாதிபதி அனுர நியமித்த குழு அங்கிகாரம் பெற்றிருக்கின்றது. தமது தனிப்பட்ட நிலைப்பாடு கருத்துக் கணிப்பு என்பது தீர்ப்பாக அமைய வேண்டும் என்பதாக இருக்கின்றது. காரணம் ஆளும் தரப்பு தனது எஞ்சி இருக்கின்ற காலத்தை தொந்தரவுகள் இன்றி முன்னெடுக்க அது ஆட்சியாளர்களுக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பு. நீதி அமைச்சர் அர்ஷன நாணயக்கார கூட கருத்துக் கணிப்புத்தான் தீர்ப்பாக வந்தாலும் அதனை நாம் சந்திக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்று கூறி இருந்தார்.
வழக்குகள் தாமதம் என்ற காரணத்துக்கு நீதிபதிகளின் பற்றாக்குறை மட்டும் காரணமாக இல்லை. புதிதாக அறுபது வரையிலான உயர் நீதிபதிகளை நியமனம் செய்ய அரசு எதிர்பார்த்தாலும் அதற்கு முப்பதுவரையிலானவர்கள் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். இதற்கிடையில் ஜனாதிபதி நிருவாக மாவட்டத்துக்குக் குறைந்தது ஒரு உயர் நீதிமன்றம் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.
இது குடிமக்களுக்கு சாதகமான விவகாரமாக இருந்தாலும் அதனையும் நீதிபதிகள் வயதை நீடிக்கக் கூடாது என்போர் எதிர்க்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறுகின்ற காரணம் இது உயர் நீதிபதிகள் மற்றும் நீதி மன்றங்களை அவகௌரவப்படுத்தும் நடவடிக்கை என்று வாதிடுகின்றார்கள். ஜனாதிபதி சொன்னது நல்ல தீர்வாக இருந்தாலும் அதற்கான அங்கிகாரம் கிடைத்தாலும் அதன் அறுவடை கிடைப்பதற்கு குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களாவது செல்லும்.
மேலும் நீதிமன்றங்களின் வழக்குகள் தாமதத்துக்கு முக்கிய காரணம் ஊழியர்கள் பற்றக்குறை. இதில் இரசாயனப் பகுப்பாய்வு ஊழியர்கள் மேலும் வழக்குகளை பதிகின்ற தேர்ச்சி பெற்ற ஊழியர்கள் பற்றாக்குறை முக்கியமான குறைபாடாக இருக்கின்றது. அதற்காக பதவியில் இருக்கின்ற அரசை குறை கூற முடியாது.

இது கடந்த ஆட்சியாளர்கள் விட்ட தவறுகள். இதை ஏதாவது ஓர் இடத்தில் சரி செய்ய வேண்டும். அதற்காக ஒரு முயற்சியைத்தான் இந்த அரசு இன்று மேற்கொண்டிருக்கின்றது என்று நாம் பார்க்கின்றோம். ஆனால் இதனை எதிர்ப்போர் பீடாதிபதிகள் எதிர்க்கின்றனர் ஐ.நா.வும் இதற்கு விளக்கத்தை கோரி இருக்கின்றது. பெரும்பாலான சட்டத்தரணிகளும் பல தொழிற் சங்கங்களும் வயது நீடிப்பை எதிர்க்கின்றன என்றும் நியாயம் கூறுகின்றனர்.
ஆளும்தரப்பு இன்று நாட்டில் மனிதர்களின் ஆயுள் ஆண்கள் வயது 77. பெண்கள் 81. இந்த பழைய சட்டம் கொண்டு வரப்பட்ட போது (1978) ஆயுள் ஆண் 67 பெண் 69 என்றும் நாடு சுதந்திரம் பெறும்போது ஆயுள்; ஆண் 48 பெண் 55 என்றும் இருந்தது. மேலும் அமெரிக்காவில் நீதிபதிகளின் வயது மரணம் வரையிலும் என்று இருக்கின்றது. பிரித்தானியாவில் 75 வரையிலும் நீடிக்கப்பட்டிருக்கின்றது.
அப்படி இருக்க இரு வருட அதிகரிப்பு என்பது மிகவும் நியாயமானது. அனுபவம் வாய்ந்தவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது நாட்டுக்கும் குடிகளுக்கும் நன்மை பயக்கும் என்று அரச தரப்பினர் மேலும் நியாயம் கூறுகின்றார்கள்.
இந்தப் பின்னணியில் கருத்துக் கணிப்பு தீர்ப்பாக அமைந்தால் களம் யாருக்கு வாய்ப்பாக இருக்க முடியும்.? எதிரணியினர் என்னதான் நியாயமான கோஷங்களை முன்வைத்தாலும் அதனை மக்கள் மத்தியில் நம்பகத் தன்மையுடன் பரப்புரை செய்ய விசுவாசமான அல்லது ஆளுமையான தலைமைகள் அவர்கள் மத்தியில் கிடையாது என்பது நமது கருத்து. இது ஆளும் தரப்புக்கு சாதகமாக அமையலாம்.





