கிழக்கு ஆசிரிய நியமனங்கள்: மீளாய்வு செய்யவும்- இம்ரான்MP

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட கல்விக்கல்லூரி ஆசிரியர் நியமன பாடசாலைகள் குறித்து மீளாய் செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சுச் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்ட கல்விக், கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் பல ஆசிரியர்களின் பெற்றோர்களினால் பல்வேறு குறைபாடுகள் என்னிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அவற்றில் பொதுவாக பின்வரும் விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பதை தங்களது கவனத்திற்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போக்குவரத்துப் பிரச்சினைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இயன்றவரை ஆசிரியர்களின் வசிப்பிடத்திற்கு அண்மையில் உள்ள பாடசாலைகள் வழங்கப்பட வேண்டுமென்பதை கொழும்பு கல்வி அமைச்சு செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனம் பல ஆசிரியர்களுக்கு வசிப்பிடத்திலிருந்து வெகுதூரத்தில் வழங்கப்பட்டுள்ளது. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்து போக்குவரத்தின் மூலமே பாடசாலையை சென்றடையக் கூடியதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பணியாற்றிய காலத்தில் ஆசிரியைகளுக்கு (பெண்களுக்கு) பேருந்து போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் பாடசாலைகள் வழங்கும் நடைமுறை இருந்தது.

எனினும், தற்போது வழங்கப்பட்ட நியமனத்தில் இது கவனத்தில் கொள்ளப்படாமல் ஆசிரியைகள் பஸ்ஸில் இருந்து இறங்கி முச்சக்கர வண்டியில் சில கிலோ மீற்றர்கள் பயணம் செய்து பாடசாலைக்குச் செல்லும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சில பாடங்களுக்கு குறித்த பாடசாலையில் தேவை இல்லாத போதிலும் அங்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சில பிரதேசங்களில் குறித்த பாடத்துக்கு வெற்றிடம் நிலவிய போதிலும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வேறு பிரதேசப் பாடசாலைகளுக்கு நியமிக்கப் பட்டுள்ள அதேவேளை வேறு பிரதேச ஆசிரியர்கள் அவ்வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சில ஆங்கில ஆசிரியர்கள் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலம் கற்பிப்பதாய் இருந்தாலும் விளக்கங்களை சிங்கள மொழியில் செய்ய முடியாத நிலை இந்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சரியாகக் கற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சில பிரதேசங்களில் உள்ள பாட வெற்றிடத்திற்கு அப்பிரதேச ஆசிரியர்கள் இருந்த போதிலும் அவர்களை வேறு பிரதேசத்துக்கு நியமித்து அப்பிரதேச வெற்றிடத்திற்கு வேறு பிரதேச ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

என்னிடம் முறையீடு செய்துள்ள ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ள விடயங்களின் சாரம்சமே இவையாகும். எனவே, இந்த விடயங்கள் குறித்து மீள்பரிசீலனை செய்து குறித்த பிரதேச ஆசிரியர்களை குறித்த வலய வெற்றிடத்துக்கு நியமிக்க முன்னுரிமை கொடுத்து அங்கு வெற்றிடம் இல்லாவிடின் இயன்றவரை அயல் வலய வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையையும், ஆசிரியர்களின் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு இவ்விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுப்பீர்களென பெரிதும் எதிர்பார்க்கிறேன்.” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Previous Story

படை வீரர்களின் விடுமுறை ரத்து! அரசு சிவிலியன்களுடன் போருக்குத் தயாராகின்றதா?

Next Story

யுக்ரேன்-ரஷ்யா போர் : சமீபத்திய 15 தகவல்கள்