சின்னவர் பெரியவரை விவாதத்துக்கு அல்லது வம்புக்கு அழைத்திருக்கின்றார். அனேகமாக தலைவர் அந்த விவாதத்தில் கலந்த கொள்ள மாட்டார். அதற்கு இப்படி ஒரு நியாயம் இருக்கின்றது.
நான் தலைவர்களுடன் மட்டும்தானே பேச முடியும். இந்த நெத்தலிகளுடன் எனக்கு என்ன விவாதம் என்று அவர் வழக்கமான மொழியில் அதனைத் தவிர்க்க அதிகளவு இடமிருக்கின்றது.
கண்டியில் அரசியல் செய்யும் போது ஹலீமுடன் பலப்பரீட்சை வருகின்ற நேரங்களில் இந்த நெத்தலிக் கதையைத்தானே தலைவர் மேடைகளில் பேசி வந்தார். கண்டியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்களுக்கு பெரிய மனசு.
எனவேதான் அவருக்கு வழக்கமாக அள்ளிப் கொட்டுகின்றார்கள். கண்டி மாவட்டத்தில் ஒரு 10 ஆயிரம் மு.கா. வாக்குகளை வைத்துக் கொண்டு தலைவர் வழக்கமாகக் கெத்துக் காட்டுக்கின்றார். அது பெரிய மனசா மாற்றுக் கட்சியினரின் இலிச்சதனமா?
சமகால மற்றும் கடந்தகால விவகாரங்கள் தொடர்பில் சமூகத்துக்கு தௌிவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீமை, பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாவது,
நடந்தவற்றை உரியவாறு சமூகத்திடம் ஒப்புவிக்கும் பொறுப்பிலிருந்து நாமிருவரும் நழுவிவிட முடியாது. இதில், யார் குற்றவாளி அல்லது சுத்தவாளி என்பதையும் எவரது பொறுப்புக்கள் சமூகக் கடமைகளிலிருந்து நழுவியது என்பதையும் சமூகமே தீர்மானிக்க வேண்டும். இதற்காக ஒரு பகிரங்க விவாதம் நமக்குள் தேவைப்படுகிறது.
அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு நான் உட்பட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ்,பைசல் காசிம், தௌபீக் ஆகியோர் ஆதரவளித்த பின்னணியுள்ள பின்புலம், நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அவை இடம்பெற்ற இடங்கள் இன்னும் எழுமாந்தமான கதைகளாகவே உள்ளன.
இதன் உண்மைத்தன்மையை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உங்களுக்கும் எனக்கும் இருக்கும் என நம்புகிறேன். அதுமட்டுமின்றி ஆதாரபூர்வமாகவும் முழு ஆவணங்களுடனும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது.
எனவே, இவ்வாறான விடயங்கள் நடப்பதற்கு ஏதுவான காரணிகள் ஏன் ஏற்பட்டது? என்பதை புலப்படுத்துவதும் நமது இருவரது பொறுப்புக்களில் உள்ளன.
ஆகவே, தன்னுடன் பகிரங்கமானதும், வௌிப்படையானதுமான விவாதத்துக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
இந்த அழைப்பை நிராகரிப்பதற்கான எந்த நியாயங்களும் அவரிடம் இருக்காது என, தான் நம்புவதாகவும் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.