வேரோடு களைதல் காலத்தின் தேவை!

-நஜீப் பின் கபூர்-

நாட்டு நடப்புக்களைப் பார்க்கின்ற போது ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிகுறிகள் ஏதுவுமே நமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே நெருக்கடிகள் மோதல்கள் வன்முறைகள் வறுமை துயரங்கள் என்பன கடலலைபோல தொடர்ந்து ஓயாது அடித்துக் கொண்டிருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரத்தில் இருப்போரின் அட்டகாசங்கள். அடக்கப்படுகின்ற மக்களின் போராட்டங்கள். இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டதால் தெருவுக்குக் கொண்டு வந்தது விடப்பட்டிருக்கின்ற குடிமக்கள். உள்நாட்டில் வாழ்வு சூன்னியமான நிலையில் தமது குடும்பங்களை காப்பாற்ற வெளிநாடுகளுக்கு ஓடுகின்ற உழைப்பாளிகள் படை. வல்லுணர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற  தொந்தரவுகள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு மேற்கு நாடுகளில் குடியேறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள்.

நாம் மேற் சொன்னவைகள் அனைத்தும் நாட்டில் மிகப் பெரிய அழிவுகளின் அறிகுறி என்பது அனைவரும் அறிந்த தகவல்தான். இதுவரை அரசியல் வேறு ஆட்சியாளர்கள் வேறு என்று வாழ்ந்து வந்த மக்கள் இன்று நாம் அனுபவிக்கின்ற இந்த துயரங்கள் எப்படி எங்கிருந்து வந்தது. அவற்றை நமது தலைகளில் கொட்டி விட்டவர்கள் யார் என்று ஆராய முற்பட்டிருக்கின்றார்கள். இது ஒரு ஆரோக்கியமான விடயமாக நாம் பார்க்கின்றோம். இதனால்தான் 75 வருடங்களின் சாபம் என்று ஒரு வார்த்தை நமது அரசியலில் இன்று பரவலாக உச்சரிக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. நாம் வழக்கமாக அடிக்கடி உச்சரிப்பது போல ஆகாயத்தில் இருந்து சோறு. குடி மக்களுக்கு சிங்கப்பூர் வாழ்வு. ஆசியாவின் ஆச்சர்யம், சௌபாக்கிய  என்ற அனைத்தும் இதுவரை வாக்குக் கொள்ளைக்காக மக்களை ஏமாற்ற அரசியல் வியாபாரிகள் பாவித்த மந்திரங்கள் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

இதனால்தான் இன்று மக்கள் மத்தியில் மாபெரும் கருத்தியல் மாற்றங்கள் ஏற்பட்டு அரசியல் போக்கிலும் அது பிரதிபளிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அதிகாரத்தில் இருப்போர் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களை தட்டில் வைத்து கொடுக்க மாட்டார்கள். ஆட்சியாளர்கள் தமது பிடியை மேலும் மேலும் இருக்கிக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் அரசியல் யாப்பை கூடக் கண்டு கொள்ளாமல் தான்தோறித் தனமான தீர்மானங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சட்டம் இது பற்றிக் கேள்வி எழுப்புகின்ற போது நீதிபதிகளின் களுத்தையே ஆட்சியாளர்கள் நசுக்குகின்ற நிலை நாட்டில் காணப்படுகின்றது. நாடாளுமன்றம் நீதியையே கூண்டில் நிறுத்தித் தண்டிக்க முனைகின்றது.

சர்வதேசம் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. பிரதான பௌத்த பீடாதிபதிகள் கூட மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று அரச தலைவர்களிடத்தில் கோரிக்கை விடுத்தாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான சட்ட விரோத நடவடிக்கைகளில்தான் இப்போது ஆர்மாக இருந்து வருகின்றார்கள். இது வரை நாட்டில் பேசு பொருளாக இருந்து வந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற கதை நூலருந்த பட்டம் போல தொலைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இது விடயத்தில் இந்திய ஈழத் தமிழர்களை ஏமாற்றி விட்டது இதன் பின்னரும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதுதான் நமது கருத்து.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கின்ற போது தமிழர்கள் மட்டுமல்ல பேரித்தவர்களும் வஞ்சக அரசியல்வாதிகளினால் இனி இல்லை என்ற அளவுக்கு ஏமாற்றப்பட்டு விட்டனர். ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் கட்டந்த 75 வருடங்கள் நாம் செய்த தவறுகள்தான் இன்றைய அவலங்களுக்குக் காரணம் என்று ஜனாதிபதி ரணிலே சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். அப்படியாக இருந்தால் அப்போது ஆட்சியல் இருந்தவர்களைத்தான் இவர் குற்றம் சாட்டுக்கின்றார். ஆனால் கடந்த கால ஆட்சிகளில் அவரும் அவரது கட்சியினரும் கணிசமான காலத்தில் அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். இதனை மறந்து ஏதோ இன்று பிறந்த பாலகன் போல அவரது கதைகள் இருக்கின்றது. இதை நாம் வழக்கம் போல நகைச்சுவைப் பட்டியலில் தான் சேர்த்து விடுவோம். ஆனாலும் இது அரசியல் நாகரிகம் இல்லாத பேச்சு.

கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி குறுக்கு வழியில் இன்று அதிகாரமிக்க பதவியில் அமர்ந்திருக்கின்றது. அந்தக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் இன்று இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் வஜிர அபேவர்தனதான் இன்று ஆளும் தரப்பு சார்பாக பெரும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். கடந்த 75 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள்தான் நாட்டை பிழையனான வழியில் கொண்டு சென்று விட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் சொல்லும் போது வஜிர ஆபேவர்தன இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் அப்போதுதான் நாட்டைம மீட்டெடுக்க முடியும் என்று புதுக் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்.ரணில் ஐஇது வரை ஐந்து முறை பிரதமர் பதவி வகித்திருக்கின்றார் அந்தக் காலத்தில் அவர் என்னதான் சாதித்தார்? இப்போது ரணில் நாட்டை மீட்பார் என்றால் இதனை மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள்.?

தற்போதய ஜனாதிபதி ரணிலும் மொட்டுக் கட்சியினரும் அரசியல் யாப்பையோ சட்டம் நீதி என்பவற்றையோ மதிக்கத் தயாராக இல்லை. தாம் நினைத்ததுதான் சட்டம் நீதி என்று நிலையில்தான் இப்போது அவர்கள் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அவர்களுக்கு இப்போது அதிகாரத்தில் இருப்பதற்கு பாதுகாப்பு படைத்தரப்பின் உதவிதான் தேவைப்படுகின்றது. ஆனால் படைத்தரப்பில் கூட அவர்களுக்கு விசுவாசமில்ல ஒரு நிலை தற்போது தோன்றி இருப்பதால் ஆட்சியாளர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் தெரிகின்றது. இது தொடர்பான அந்தரங்கக் குறிப்பொன்றை நாம் மற்றுமொரு இடத்தில் பதிந்திருக்கின்றோம்.

தமது அரசியல் இருப்புக்காக ஆட்சியாளர்கள் அரசியல் யாப்பை மதிக்கத் தயாராக இல்லை. நீதிதுறையிடம் இது பற்றி நியாயம் கேட்கப் போனால் நீதியதிகளையே அதிகாரத்தில் இருப்போது விசாரனைக்கு அழைத்து குற்றவாளிகள் கூண்றில் நிருத்துகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு காலத்தில் இதே ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்த போது பதவியில் இருந்த ஜனாதிபதி ஜேஆரின் ஆட்கள் தமக்கு எதிரான நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொன்ன நீதிபதிகளுக்குத் தொந்தரவு செய்து வந்தனர். அவர்கள் வீடுகளுக்குக் கூட குண்டர்களை வைத்து கல்லெறிந்த சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று அதனையும் விஞ்சிய அட்டகாசம்தான் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

மக்களால் விரட்டியடிக்கப்ட்ட ஒரு மனிதன் நாட்டில் அதிகாரம் மிக்க கதிரையில் அமர்கின்றார் என்றால் இந்த நாட்டு அரசியல் யாப்பில் எந்தளவுக்கு பலயீனம் இருந்து வந்திருக்கின்றது என்பது புரிகின்றது. இவ்வாறான சம்பவங்கள் உலக அரசியலில் எங்கும் நாம் இதுவரை பார்த்ததில்லை. எனவே புதியதோர் அரசாங்கம் இலங்கையில் அதிகாரத்துக்கு வருமாக இருந்தால் யாப்பு மாற்றமொன்று காலத்தின் உடனடித் தேவை என்ற இன்று உணரப்பட்டிருக்கின்றது. நாம் மேற்சொன்ன வஜிர அபேவர்தன கதைப்படி இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் ஆட்சி என்றால் இந்த நாட்டில் தேர்தலுக்கே வாய்ப்புக் கிடையாது. அரசியல் யாப்போ நீதியே முக்கியமானதல்ல நாடுதான் முக்கியம் என்ற ரணிலின் வார்த்தை கூட இதற்குக் களம் அமைப்பதாகத்தான் இருக்கின்றது.

இனிவரும் காலங்களில் ஆட்சியாளர்கள் படைத்தரப்பினரின் உதவியுடன்தான் தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள். இன்று கூட நாட்டில் அந்த நிலைதான் காணப்படுகின்றது. படைத்தரப்பு நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது கீழ் மட்ட படை வீரர்களில் பெரும்பாலனவர்கள் அரசின் இந்தப் போக்கை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் படைத்தரப்புக்கு கொடுக்கப்படும் தகவல்களை அவர்கள் உடனுக்குடன் வெளியில் காசிய விடுகின்றார்கள். ஆனால் ஆளும் தரப்புக்கு விசுவாசமாக சிறு தெகை அதிகாரிகள் மட்டுமே செலாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிக்கின்றது.

இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தன்னைச் சந்தித்த ஐ.நா அபிவிருத்தி நிகழச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அகசா குபோடாவுடன் நடந்த சந்திப்பின் போது கேட்டுக் கொண்டார். பொதுவாக நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளைப் பற்றித்தான் ஐ.நா கவணம் செலுத்தும் இப்போது நமது நாட்டு உள் நாட்டுப் பிரச்சினையிலும் ஐ.நா தலையிட வேண்டிய அளவுக்கு நிலமை கட்டுமீறிச் சென்றிருக்கின்றது. எனவே சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளின் போது பேரினத்து அரசு எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கும்.

ஆட்சியாளர்களைப் பெருத்துவரை இது மிகவும் ஆபத்தான ஒரு நிலை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பட்டங்களின் போது  இனம் தெரியாத படைவீரர்கள் தடிகளை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் இந்த தடிகள் மின்னேரியக் காட்டில் வெட்டப்பட்டு இனாமலுவ என்ற படை முகாமில் வைத்து லொறிக்கு எற்றுப்பட்டு அது கொழும்பிலுள்ள ஒரு படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட அனைத்து தகவல்களும் சமூக ஊடகங்களில் வெளி வந்தது. ஆனால் அன்றைய தினம் இந்த தடிகளை வைத்திருந்த இராணுவ வீரர்கள் யார் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது அது பற்றித் தாங்களுக்கு எதுவும் தெரியாது என்று இராணுவ ஊடகப் போச்சாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினால் இன்று பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகின்றன. ஆளும் தரப்பு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அண்மையில் நடந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் படுதோல்வி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரம் எதிரணியினரும் நடுநிலை ஊடகங்கள் அதற்கு முற்றிலும் முரணாக செய்திகளில் இது பெரு வெற்றி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனவே மக்கள் எந்தச் செய்திகளைப் பார்க்கின்றார்களோ அந்த வகையில்தான் இது பற்றிய தீர்மானங்களுக்கு வருவார்கள். ஆனால் இது எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது என்பதனை மக்கள் தமது தேவைகளுக்காக அந்த இடங்களுக்குப் போகும் போது புரிந்து கொள்ள முடியுமாக இருந்திருக்கும். அப்போது யார் சொல்வது யதார்த்தம் என்பது புலப்படும்.

கடந்த 15ம் திகதி நடந்த வேலை நிறுத்தம் காரணமாக  4600 கோடி ரூபாய்கள்  இழப்பு என்று நிதி இரஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறி இருக்கின்றார். அப்படியாக இருந்தால் வேலை நிறுத்தம் எப்படி தோற்றுப் போனது என்று கேட்கத் தோன்றுகின்றது.  இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் அடிப்படை உரிமைகளுக்கு குறிப்பாக மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சுதந்திரப் போராட்டம் தேவை என்ற நிலையில்தான் ஆட்சியாளர்கள் செயல்பாடுகள் இன்று மக்களைக் கொண்டு போய் விட்டிருக்கின்றது.

நன்றி: 19.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

டொலர் விலை 200 ரூபா!

Next Story

உக்ரைன் மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின்.!