-நஜீப்-
பிரேரணைகளும் தீர்மானங்களும்!
பொதுவாக உலக அரங்கிலும் உள்நாட்டு விவகாரங்களிலும் பிரேரணைகள் தீர்மானம் என்று ஒன்று நடை முறையில் இருக்கின்றது. அது எட்டுச் சுரைக்காய் போன்றது. இது நாம் அறிந்த கதைதான். ஐ.நா.வில் கூட இப்படி எத்தனையோ பிரேரணைகளும் தீர்மானங்களும் எட்டுச் சுரைக்காய் வடிவில் இருந்து வருகின்றன.
ஜெனிவா விவகாரங்களும் அப்படித்தான். ஈழத் தமிழர் விவகாரத்திலும் இலங்கையிலும் இந்தியாவிலும் உலக அரங்கிலும் எத்தனையோ தீர்மானங்கள் போடப்பட்டிருக்கின்றன. இது அனைத்தும் ஏட்டுச் சுரைய்காய் என்பது இலங்கை ஆட்சியாளர்கள் நன்கு அறிவார்கள்.
ரணில் ஜனாதிபதியாக வந்ததும் இப்படி எத்தனையோ பிரேரணைகள் தீர்மானங்களை எடுத்து தமிழர் தரப்பினரை இந்நாள் வரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது இங்கு வந்திருக்கின்ற மேற்கத்திய தமிழ் தரப்பினர் (டயஸ்போரா) இலங்கை ஆட்சியாளர்களிடம் விடுத்திருக்கின்ற கோரிக்கைகளும் இது போன்ற ஒன்றுதான்.
இதனால் ஆகப் போவது ஏதும் கிடையாது. ரணிலைச் சந்தித்த இவர்கள் அவரது அரசியல் இருப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கு என்பதை முதலில் சிந்தித்திருக்க வேண்டும்.
அப்பன் ஆதரவு மகன் எதிர்ப்பு!
தான் அரசியல் ரீதியில் கடுமையாக நடந்து கொள்ளப்போவதாக கூறி அதற்கு மகன் நாமல் தந்ததை மஹிந்தவிடம் ஆசிர்வாதம் கோட்ட கதையொன்றை நாம் சில வாரங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தோம். அதற்கு தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கில்லி விடும் வகையில் மஹிந்த ராஜபக்ஸ கொடுத்த பதிலையும் அதில் சுட்டிக் காட்டி இருந்தோம்.
அந்தவகையில் ஜனாதிபதி ரணிலின் 2024 ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை விவகாரத்தில் அப்பனும் மகனும் இரு திசைகளில் பயணிப்பதும், அப்பா மஹிந்தவுடன் ஒட்டு மொத்த மொட்டுக் கட்சியினரும் இருப்பதும் இப்போது தெரிய வந்திருக்கின்றது.
தனக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க முடியாது என்று சொன்ன நாமல் மட்டும் வாக்களிபை தவிர்த்திருக்கின்றார். ஆனால் அவருக்கு ஆதரவாக எந்த மொட்டுக் கட்சி உறுப்பினரும் பகிஸ்கரிப்பில் ஈடுபடவில்லை.
இதிலிருந்து அப்பன் ஆதரவு மகன் பகிஸ்கரித்துக் காட்டும் எதிர்ப்பும் வெறும் நாடகம் என்பது இப்போது அனைவருக்கும் தெரிய வந்திருக்கின்றது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நாமலுக்கு அப்பன் மஹிந்த ஆதரவு என்பதால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை என்பது தெளிவு. இது நாடகம் அவ்வளவுதான்.
தேரரை கொல்ல வந்த சிப்பாய்கள்!
புத்த சமயத்தை எடுத்துக் கொண்டு வந்த மஹிந்த தேரர் தேவநம்பிய திஸ்ஸ மன்னனைச் சந்தித்த இடம் மிஹிதலை. இதனால் மிஹிந்தலை விகாரைக்கு பௌத்த வரலாற்றின் முக்கிய இடம். அங்கு தற்போது பீடாதிபதியாக வலவாஹென்குநவெ தம்மரத்ன தேரர் இருக்கின்றார். அரசியல்வாதிகள் மீது குறிப்பாக ஆளும் தரப்பினர் மீது தேரர் கடும் கோபத்தில் இருக்கின்றார்.
அரச அணுமதியுடன் சில நூறு படையினரை வைத்து விகாரையில் அபிவிருத்தி வேலைகளையும் அவர் செய்து வருகின்றார். இந்நிலையில் அங்குள்ள படையினரும் தேரரும் அறியாது இருவர் விகாரையில் உளவு பார்த்திருக்கின்றார்கள். இது தன்னைக் கொலை செய்ய சாகல ரத்நாயக்க அனுப்பி வைத்த உளவாளிகள் என தேரர் அதிரடியாக குற்றம் சாட்டி இருக்கின்றார்.
குறிப்பிட்ட நபர்களை பிடித்து பொலிசார் விசாரித்த போது இஸ்ரேலியர்களும்-பலஸ்தீனர்களும் மிஹிதலையில் வந்து மோதிக் கொள்வார்கள் என்தால் பாதுகாப்புக்கு வைக்கப்பட்வர்கள் அவர்கள் என்றும் வாக்குமூலம் கொடுக்கபட்டுள்ளது. தனக்கும் இங்கு பணியாற்றிக் கொண்டிருந்த படையினருக்கும் தெரியாது, களவாக இந்த சிப்பாய்கள் இருவரும் இரண்டு வாரங்கள் அங்கு தங்கி இருந்திருக்கின்றார்கள் என்று கூறுகின்றார் தேரர். இப்போது அவர்களை அங்கிருந்து அகற்றி இருக்கின்றார்கள். பலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் இப்போது இங்கு வந்து மோதிக் கொள்ள மாட்டார்களா என்று கேள்வி எழுப்புகின்றார் தேரர்.
மக்கள் அழைத்தால் வருவேன்!
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலின் மக்கள் என்னை வேட்பாளராக வருமாறு அழைப்பு விடுத்தால் நான் நிச்சயமாக ஜனாதிபதி வேட்பாளராக வருவேன். இப்படிக் கூறுபவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்க. மரண வீடுகளுக்கு வந்து போனார் மேடைகளில் மக்களை கற்பணையில் சஞ்சரிக்க கதைகளைச் சொன்னார்.
அவர் அரசியல் பரம்பறையில் வந்தவர் என்று மக்கள் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்தால் இந்த நாட்டுக்கு மீட்சி கிடையாது. துனிவும் முதுகெழும்பும் உள்ள வேட்பாளர்கள் தான் களத்துக்கு வர வேண்டும். நாடாளுமன்றத்திற்கும் இளைஞர்களை மக்கள் அதிகளவில் தெரிவு செய்ய வேண்டும் அப்போதுதான் இந்தக் கள்வர் கூட்டத்தை விரட்ட முடியும் என்றும் பொன்சேக்க ஊடகங்களிடம் பேசும் போது சொன்னார்.
ஆனால் ஏற்கெனவே சஜித் தன்னை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் என்று சொல்லிக் கொண்டு வருகின்றார். அவரது அணியிலுள்ளவர்கள் ஜனவரியில் தமது கட்சி புதிய கூட்டிணியொன்றை அமைத்துத்தான் எந்தத் தேர்தலாக இருந்தாலும் களத்துக்கு வரும் என்று கூறி வருகின்றார்கள். இதனால் அங்கு பாரிய முரண்பாடுகள் தெரிகின்றன.
ரணிலுக்கு கைதூக்கியது வெட்கம்!
ஜனாதிபதியாக ரணிலைக் கொண்டு வருவதற்காக கை தூக்கியது பெரும் வெட்கக் கோடான செயல். அது பெருத்த அவமானம். இப்படி இன்று பேசுகின்ற மனிதன் வேறுயாரும் அல்ல, ரணிலை ஆளும் தரப்பு ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டு வர வேண்டும் என்று ஆரம்ப முதலே சொல்லி வந்தவரும் அதற்காக உழைத்தவரும் ரொசன் ரணசிங்ஹ.
இப்போது ஆளும் மொட்டுக் கட்சி கெபினட் அமைச்சரவையிலிருந்து அவர் தூக்கி எறிப்பட்டிருக்கின்றார். இதனால் இப்போது அவருக்கு ஞானம் பிறந்திருக்கின்றது. உள்ளே இருந்திருந்தால் அவர் இப்படி பேசி இருக்க வாய்ப்புக் கிடையாது.
இன்று அவர் 2024 வரவு செலவு அறிக்கைக்கு எதிராகவும் வாக்களித்திருக்கின்றார். அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் கிடையாது நாமல் கூட வாக்கெடுப்பை பகிஸ்கரித்திருந்தார். அதனால் மொட்டுக் கட்சிக்கு ரணிசிங்ஹ மீது ஒழுக்காற்று எடுக்க வாய்ப்பில்லை.
எதிர் வரும் தேர்தலில் அவர் சஜித் அணியில் சங்கமமாக அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவர் ஜனாதிபத் தேர்தலுக்கு வருவார் என்று சிலர் கூறுகின்றார்கள். அந்தளவுக்கு அவர் முட்டால் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
நன்றி: 17.12.2023 ஞாயிறு தினக்குரல்