-நஜீப்-
(நன்றி ஞாயிறு தினக்குரல்- 13/07/2025)

ரோனரும் சமூக ஊடகமும்!
சமகால உலகில் போர் முறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். எதிரி நாட்டுடன் போர் புரிவதானால் பலமான ஒரு விமானப்படை நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆனால் இன்று அப்படி இல்லை.
ஒரு மேசையில் அமர்ந்து சுக்கானில் விரலை ஓட்டுவதன் மூலம் களத்துக்கு படைகளே போகாமல் ஏவுகணைகள்- ரோனர்களும் பறந்து காரியத்தை முடிக்கின்றன.
ஈரான்-இஸ்ரேல் போரில் நாம் இதனைப் பார்த்தோம். அப்படித்தான் சமூக ஊடகங்களின் ஆதிக்கமும். இதனால் சம்பிரதாய ஊடகங்கள் குப்பையில் என்ற நிலை. இன்று அரசியல் களத்தை மாற்றி அமைப்பதில் தீர்க்கமான பணியை சமூக ஊடகங்கள் செய்து வருகின்றன.
அதனால் பல நாடுகளில் அவ்வப்போது இந்த சமூக ஊடகங்கள் மீது ஆட்சியாளர்கள் கட்டுப்பாடுகளைப் போடுகின்றார்கள். அதே நேரம் இந்த சமூக ஊடகங்கள் அப்பட்டமான பொய்களையும் சொல்லி மக்களைக் குழப்பியடித்துக் கொண்டும் வருவதையும் பார்க்க முடிகின்றது.
ரோனர்கள் போல சமூக ஊடகங்கள் ஒளியின் வேகத்தில் செய்திகளை கடத்திக் கொண்டிருக்கின்றன. இவை இரண்டும் குடிசைக் கைத்தொழில் என்ற அளவுக்கு வந்து விட்டது.
ஆயுள் கம்மியான சபைகள்!

தற்போது பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டு அதில் மூன்றில் இரண்டு சபைகள் ஆளும் என்பிபி. தரப்புக்கு சென்று விட்டது.
அந்தப் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ளவும் அதனை தவிர்த்து எதிரணி வாசமாக்கிக் கொள்ளவும் முயற்சிகள் நடந்தது.
அதில் சில சபைகளை எதிரணியினரும் கைப்பற்றி இருக்கின்றார்கள். எப்படியோ இன்னும் மிகச் சிறு எண்ணிக்கையான சபைகளின் தவிசாளர் தெரிவு நடைபெற வேண்டி இருக்கின்றது. எப்படியும் வருகின்ற நாட்களில் அனைத்து சபைகளும் செயல்படத் துவங்கும்.
என்றாலும் நமக்கு நெருக்கமாக ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவர், சபைகளின் வரவு செலவு வருகின்ற போது எதிரணியில் இருக்கின்ற பல சபைகள் நமது கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்றார்.
எதிரணி அமைத்திருக்கும் பல சபைகளில் ஆட்சிக்குவர ஒத்துழைப்பு வழங்கிய பலர் இப்போது எம்முடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் தகவல் தந்தார்.
என்பிபி. அரசுக்குள் மோதல்!

ஆளும் என்பிபி. அரசுக்குள் மோதல் ஜேவிபி-என்பிபிக்குள் பிளவு. பிரதமர் ஹரினி தூக்கப்படுகின்றார். ஜேவிபி. செயலாளர் நாடாளுமன்றம் வந்து பிரதமராகின்றார் என்று சமூக ஊடகங்களும் சம்பிரதாய ஊடகங்களும் கூட கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தன.
இவை பரபரப்பான செய்திகளாக தெரியலாம். சில வேலை எதிரணிக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்ற தகவலாகவும் இருக்கலாம்.
இது உள்நோக்கங்களை மையமாக வைத்து கசியவிடப்படும் செய்திகள். இப்படிச் சொல்லி இந்த அரசுக்கு ஆயுள் குறைவு என்றும் ஒரு கருத்தை மக்கள் மத்தியில் விதைப்பதுதான் இதன் நோக்கம்.
இதில் எந்த அடிப்படையும் கிடையாது. டில்வி நாடாளுமன்றம் வருகின்றார் என்று செய்திகள் வந்தபோது ஒரு போது அதற்கு வாய்ப்பே கிடையாது என்று நமது வார இதழில் நாம் உறுதிபட சொல்லி இருந்தோம்.
நாம் பிரதான கட்டுரையில் சொல்லி இருப்பது போல இவை விசமத்தனமானவை. மக்களை பிழையாக வழி நடாத்துகின்ற திட்டமிடப்பட்ட முயற்சிகள். எனவே வாசகர்கள் எச்சரிக்கையுடன் செய்திகளை உள்வாங்க வேண்டி இருக்கின்றது.
அபூ ஹிந் விரைவில் வருவார்!

அண்மையில் நடந்த போரில் ஈரானுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது உள்ளே இருந்து செயல்பட்ட உளவாளிகள்தான் என்பது உறுதியானது. இங்கு நடந்த ஈஸ்டர் தாக்குதல் கதையும் இப்போது அப்படித்தான் போய்க் கொண்டிருக்கின்றது.
ஆளும் தரப்பு அமைச்சர்களும் பாதுகாப்புத் தரப்பினரும் கூட அரச உளவுத்துறையில் சிலர்தான் இதனை நெறிப்படுத்தி இருக்கின்றார்கள் என்று பகிரங்கமாகவே கூறிவருகின்றனர்.
நாடாளுமன்ற விவாதத்தில் இதனை நாம் பார்த்தோம். பிள்ளையானும் சில தகவல்களை கசிய விட்டிருக்கின்றாராம்.! ஜனாதிபதி மஹிந்தவின் அம்மபாறை மாவட்ட இணைப்பாளர் இனிய பாரதி கைதும் இதனை உறுதி செய்கின்றது. பிள்ளையின் சகா மௌலானவும் சாட்சி சொல்ல பறந்துவர இருக்கின்றாராம்.
அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில்தான் இந்தப் படுகொலைகள் என்றும் அம்பலம். இப்போது அபூ ஹிந் – பக்கம் அபூ ஹிந்தும் அரங்கிற்கு வரும் நேரம் கனிந்திருக்கின்றது.
அத்தோடு பிரதான சூத்திரதாரயும் சந்திக்கு வருவார்! ஜனாதிபதி குற்றவாளிகளுக்கு மீட்சியே கிடையாது என்று அடித்துக் கூறி வருகின்றார்.





