வலியில்லாமல் சாக இயந்திரம்

தற்கொலை செய்துகொள்வதற்கு என கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி அளித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்ச்கே சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் இந்த 3டி பிரிண்டட் இயந்திரத்தை எக்சிட் இன்டர்நேஷனல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. சவப்பெட்டிப் போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

 

தற்கொலை செய்துக்கொள்ள நினைப்பவர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று படுத்துக்கொள்ள வேண்டுமாம். அவர்களிடம் அந்த இயந்திரம் கேட்கும் இரு கேள்விகளுக்கு பதிலளித்த பிறகு, அதிலிருக்கும் பட்டனை அழுத்த வேண்டுமாம். அவ்வளவு தான் சில நொடிகளில் வலியே இல்லாமல் தற்கொலை செய்துக்கொள்ளலாம். அதாவது, பட்டனை அழுத்தியதும் இயந்திரமானது உட்புறத்தில் நைட்ரஜனை நிரப்புகிறது, ஆக்ஸிஜன் அளவை 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கிறது. உள்ளிருப்பவர் சுயநினைவை இழந்து ஆழ்ந்த கோமாவுக்கு சென்றுவிடுவர். இதெல்லாம் 30 வினாடிகளில் நடந்தேற அடுத்த 5 நிமிடத்தில் உயிர் பிரிந்து விடுகிறது.

 

எந்தவித அச்சமும் இல்லாமல், ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை மூலம் இறப்பை நிகழ்த்துகிறது. இந்த இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அங்கு 1,300 பேர் தற்கொலை செய்துக்கொண்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு முதல் இந்த இயந்திரம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. தற்கொலைக்கு இயந்திரம் கண்டுபிடித்து அதற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதியும் வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Story

வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: UAE

Next Story

இனவெறியை எதிர்த்தவர் மரணம்