ராஜபக்ச குடும்பத்தினர் அடுத்த பிறவியில் காகம், நாய், பூனை போன்ற விலங்குகளாகவே பிறப்பார்கள் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்ளுக்கு இவ்வாறு நேரும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு மிகவும் நெருக்கமாக செயல்பட்ட மூன்று பேரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொலை செய்வதற்காக கடத்திச் சென்றபோது, மகிந்த ராஜபக்சவின் ஊடாக அவர்கள் கொலை செய்யயப்படுவதனை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
குடும்ப நலன்களுக்கே முக்கியத்துவம்
பசில் ராஜபக்ச ஓர் பாரிய திருடன் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எந்த விதமான சொத்துக்களும் இன்றி இருந்தவர்கள் இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாரியளவு சொத்துக்களுடன் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் போரின் பின்னர் தனது குடும்ப நலன்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் கூறுவதாகவும், பிரபாகரன் இறந்து விட்டது பற்றி தெரியாது எனக் கூறுவதாகவும் மேர்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றில் வழக்கு தொடர முடியும்
தான் கூறும் தகவல்கள் பொய்யாக இருந்தால் நீதிமன்றில் வழக்கு தொடர முடியும் என மேர்வின் சில்வா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஒரு கோழை எனவும் தாக்கும்போது பின் கதவால் சென்றவர் எனவும், அவரை தாம் ஒரு சந்தர்ப்பத்தில் காப்பாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவிற்கு இன்று போவதற்கு நாடு ஒன்று இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் அது அவர் செய்த வினைகளின் பயன் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.