ராஜபக்ச குடும்பம்: ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவு!

-ரஞ்சன் அருண் பிரசாத்-

இலங்கை - ராஜபக்ஸ குடும்பம்

மஹிந்த ராஜபக்ஸ

இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத குடும்பமாக வரலாற்றில் இடம்பிடித்த ராஜபக்ச குடும்பத்தினர், ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு ஒர் ஆண்டு நிறைவுப்பெற்றுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஆட்சியில் அமர்ந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில், நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது.

பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பல நாட்களாக மக்கள் வரிசைகளில் காத்திருந்தனர். நாளொன்றில் சுமார் 15 மணிநேரத்திற்கு அதிக மின்வெட்டு அமலாக்கப்பட்டது. எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு என மக்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்திருந்தனர்.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் என தெரிவித்து மக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வீதியில் இறங்கி போராட தொடங்கினர்.

இந்த போராட்டம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தன்னெழுச்சி போராட்டமாக மாற்றம் பெற்று, கடந்த ஆண்டு ஜுலை மாதம் வரை தொடர்ந்தது.

இலங்கை - ராஜபக்ஸ குடும்பம்
இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத குடும்பமாக வரலாற்றில் இடம்பிடித்த ராஜபக்ச குடும்பத்தினர், ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகின்றது

இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக, நாட்டில் பல்வேறு அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஒன்று திரண்ட லட்சக்கணக்கான மக்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் ஆகியவற்றை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக செய்தனர்.

இலங்கையில் 3 தசாப்த காலம் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்ச குடும்பம், நாட்டில் அசைக்க முடியாத ஒரு அரச குடும்பமாக சிங்கள மக்களினால் அவதானிக்கப்பட்டது.

யுத்தம், பௌத்த தேசியவாதம் ஆகியவற்றை மையப்படுத்தி தமது அரசியல் பயணத்தை மேற்கொண்ட ராஜபக்ச குடும்பத்தை, நாட்டிலுள்ள சிங்கள மக்கள் மட்டுமல்ல அனைத்தின மக்களும் ஒன்றிணைந்து ஆட்சியிலிருந்து நீக்கினர்.

இந்த நிலையில், தற்போதைய அரசியல் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தினரின் எதிர்காலம் என்ன, அது எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

இலங்கை - ராஜபக்ஸ குடும்பம்
நிக்ஸன் – மூத்த செய்தியாளர்

ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?

இந்த விடயம் தொடர்பில் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்ஸனிடம், பிபிசி தமிழ் வினவியது.

ராஜபக்ச குடும்பத்தின் தற்போதைய நிலைமை என்ன என்பது தொடர்பில் அவர் தெளிவூட்டினார்.

”ரணிலை களமிறக்கினாலோ அல்லது அவரது (ராஜபக்ச) கட்சியைச் சேர்ந்த ஒருவரை களமிறக்கினாலோ இனி ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை. ஆனால், ராஜபக்ச குடும்பத்திற்கு இன்றும் ஆதரவான தளமாக இனவாத தளமொன்று காணப்படுகின்றது. அந்த இனவாத தளம் ராஜபக்ச குடும்பத்தை பலமான எதிர்கட்சியாக கொண்டுவரும். பௌத்த தேசிய இனவாத வாக்கு இன்னும் மாறவில்லை. ” என அவர் தெளிவூட்டினார்.

இலங்கை - ராஜபக்ஸ குடும்பம்

கோட்டாபய மீண்டும் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ முடியாது

நாட்டு மக்களினால் கடந்த ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்விக்கு நிக்ஸன் பதிலளிக்கையில்,

”கோட்டாபய ராஜபக்ச தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வர முடியும். ஏனென்றால், இனவாத வாக்கு இருக்கின்றது. பௌத்த தேசிய இனவாத வாக்கு பெரியளவில் மாறவில்லை. பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வருவதற்கு இனி அவரால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. அவருக்கு அந்த எண்ணம் இருக்கின்றதா என்பது எனக்கு தெரியாது.

ஆனால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என நினைக்கின்றேன். அப்படியில்லை என்றால், வர போகின்ற புதிய அரசாங்கத்தின் செல்வாக்கை பயன்படுத்தி பெரிய பதவிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. கௌரவமான பதவியொன்றை கொடுக்கலாம்.” என அவர் கூறினார்.

பஷில் ராஜபக்சவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

”நாடாளுமன்ற உறுப்பினராக வரலாம். ஆனால், அவர் ஆட்சிக்குரிய ஆள் இல்லை. அந்த சந்தர்ப்பம் இல்லாது போய்விட்டது. புதிய அரசாங்கமொன்று வரும். ஆனால் அது பலவீனமான அரசாங்கமாக இருக்கும்.” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை - ராஜபக்ஸ குடும்பம்

நமல் ராஜபக்ஸ

“ராஜபக்ஸ குடும்பத்துக்கு வீழ்ச்சிதான்”

ராஜபக்ச குடும்பத்தின் எதிர்கால அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என வினவியபோது, அவர் எதிர்கட்சியில் பலமாக இருப்பார் என்று நிக்சன் பதிலளித்தார்.

”வர போகின்ற பலவீனமான அரசாங்கத்தை பலமான எதிர்கட்சியாக இருந்தவாறு விமர்சித்து அரசியலை முன்னோக்கி கொண்டு செல்வார். உலக நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும், அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய சந்தர்ப்பம் நாமல் ராஜபக்சவிற்கு தற்போது இல்லை. ஆனால், 10 வருடங்களின் பின்னர் அது நடக்கலாம்.

வேறு யாரும் இல்லை என்பதனால், அது நடக்கலாம். பௌத்த தேசியவாதமே அதற்கான காரணமாக இருக்கும். யுத்தம் வெற்றி பெற்றதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சில விடயங்களினால் வெறுப்பு வந்தது. ஆனால், அது எதிர்காலத்தில் மாற்றமடையலாம்.” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை - ராஜபக்ஸ குடும்பம்

ராஜபக்ஸ குடும்பத்துக்கு வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது என்று மூத்த செய்தியாளர் நிக்ஸன் கூறுகிறார்

ராஜபக்ச குடும்பம் நீக்கப்பட்டு, ஒரு வருடம் பூர்த்தியாகும் இந்த காலக்கட்டத்தை எவ்வாறு அவதானிக்கின்றீர்கள் என அ.நிக்ஸனிடம் மேலும் வினவியபோது,

”ராஜபக்ச குடும்பத்திற்கு இந்த ஒரு வருடத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வீழ்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. வேறு கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வந்திருக்கின்றார். அதனால், ராஜபக்சவின் ஆதரவுடன் ஆட்சி தொடர்ந்து பொருளாதாரத்தை சற்று முச்சு விடும் இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். அந்த நிம்மதி மக்களுக்கு தெரிகின்றது.

இந்த ஒரு வருட காலத்தை ராஜபக்சவின் நிலை என்ன என்பதை தேர்தலில்தான் பார்க்க முடியும். ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி ராஜபக்ச குடும்பம் வீழ்ச்சியை நோக்கியே சென்றுள்ளது.

ராஜபக்சவிற்கு எந்தவொரு முன்னேற்றமும் இல்லை ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக தமது ஊழலை மறைத்திருக்கின்றார்கள். நாடாளுமன்றத்தில் இன்று 128 உறுப்பினர்கள் ராஜபக்ச வசம் காணப்படுகின்றனர். ராஜபக்சவின் ஆதரவில் ரணில் இருக்கின்றார். அதற்காக அதனை ராஜபக்சவின் வளர்ச்சி என பார்க்க முடியாது” என பதிலளித்தார்.

மக்கள் குமுறல் எழுச்சியாக மாறியது எப்படி?

இலங்கை பொருளாதார நெருக்கடி

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவரை லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக விரட்டியடித்த சம்பவம் நடந்தேறி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் மாபெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்தது. எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டன. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத்தொடங்கினர்.

இதன் விளைவாக, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸவை லட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி விரட்டியிருந்தனர்.

ஜனாதிபதியை விரட்ட காரணம் என்ன?

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து உள்நாட்டு யுத்தம், குண்டு வெடிப்பு சம்பவங்கள், அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி எதிர்நோக்கியிருந்தது.

இந்த நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக, ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில், உலகம் முழுவதும் 2019ம் ஆண்டு இறுதிக் காலப் பகுதியில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருந்தது.

இலங்கை பொருளாதார நெருக்கடி

கோட்டாபய ராஜபக்ஸ

இந்த கொரோனா தொற்றானது இலங்கையை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி தாக்கியது. இதையடுத்து, மார்ச் மாதம் 19ம் தேதி நாடு முடக்கப்பட்டது.

நாடு இவ்வாறு முடப்பட்டதை அடுத்து நாட்டின் சுற்றுலாத்துறை பூஜ்ஜியமானது. தேயிலை ஏற்றுமதி தடைப்பட்டது. ஆடை உற்பத்தி முழுமையாக தடைப்பட்டது. இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் அனைத்து வழிகளும் முடங்கின. இது இறுதியில் இலங்கை என்றுமே சந்திக்காத ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.

இலங்கையில் முடிய பொருளாதார கொள்கையை கொண்டு வந்த 70ம் ஆண்டு காலப் பகுதியில் வரிசை யுகம் காணப்பட்ட பின்னணியில், அதைவிடவும் பாரிய வரிசை யுகம் 2022ம் ஆண்டு ஏற்பட்டது.

எரிபொருள், எரிவாயு, அத்தியவாசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் பல நாட்கள் காத்திருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாளாந்தம் 15 மணித்தியாலங்களையும் தாண்டிய மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து முடங்கியது. மருத்துவமனைகளின் செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இவ்வாறு மக்கள் நாளாந்தம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்திருந்தார்கள்.

நூற்றுக்கணக்கானோருடன் தொடங்கிய போராட்டம்

இவ்வாறு நெருக்கடிகளை சந்தித்த மக்கள், தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, நுகேகொடை – மிரிஹான பகுதியிலுள்ள அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த போராட்டம் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வரை அதிகரித்து பாரிய போராட்டமாக உருவெடுத்தது.

இந்த போராட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாதுகாப்பு பிரிவினரால் கண்ணீர் புகை பிரயோகங்கள் நடத்தப்பட்டன. தடியடி பிரயோகம் நடத்தப்பட்டது. நீர்தாரை பிரயோகம் நடத்தப்பட்டன. எனினும், போராட்டக்காரர்கள் மீண்டும் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட முயற்சித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்த ஆரம்பித்தனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி

நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த போராட்டம் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வரை அதிகரித்து பாரிய போராட்டமாக உருவெடுத்தது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்ததுடன், நீர்தாரை பிரயோகம், தடியடி, கண்ணீர் புகை பிரயோகங்களில் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. கல் பிரயோகங்களினால் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டன. கோடிக்கணக்கான ரூபா சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு உடன் அமலுக்கு வரும் வகையில் போலீஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மார்ச் மாதம் 31ம் தேதி மாலை ஆரம்பமான போராட்டம், அடுத்த நாள் அதிகாலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பாக வேறொரு இடத்தில் தங்க வைக்கப்பட்டார்.

வன்முறையாக உருவெடுத்த போராட்டம்

இந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி பாரிய தன்னெழுச்சி போராட்டமாக மாற்றம் பெற்றது.

கொழும்பு – காலி முகத்திடலில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள், கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு இரவிரவாக அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மே மாதம் 9ம் தேதி பாரிய வன்முறையாக உருவெடுத்தது.

பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றை அடுத்து, அங்கிருந்து வெளியில் வந்த ராஜபக்ஸ ஆதரவாளர்கள் காலி முகத்திடலை நோக்கி படையெடுத்தனர்.

காலி முகத்திடலுக்கு வருகைத் தந்த ராஜபக்ஸ ஆதரவாளர்கள், காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்திருந்தனர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை உடைத்து, அவற்றிற்கு தீ வைத்த ராஜபக்ஸ ஆதரவாளர்கள், காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் வன்முறைகள் உருவாகியிருந்தன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ராஜபக்ஸ ஆதரவாளர்களின் வீடுகள், சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பாரிய சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன.

இந்த வன்முறைகள் காரணமாக பத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.

அடுத்த நாள் வரை தொடர்ந்த போராட்டம், பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை பொருளாதார நெருக்கடி

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ராஜபக்ஸ ஆதரவாளர்களின் வீடுகள், சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.

பதவி விலகிய மஜிந்த, கோட்டாபய ராஜபக்ஸ்

இந்த வன்முறைகளை அடுத்து, பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதன் ஊடாக, முழு அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.

இவ்வாறு தொடர் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், ஜுலை மாதம் 9ம் தேதி லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகருக்குள் படையெடுத்து, போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இதன்போது, ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தையும், ஜனாதிபதி செயலகத்தையும் போராட்டக்காரர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

அதேபோன்று, பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரிமாளிகை ஆகியவற்றையும் போராட்டக்காரர்கள் தமது பொறுப்பிற்கு எடுத்தார்கள்.

இந்த நிலையில், தலைமறைவான கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குடும்பத்தினர், விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் மாலைதீவு நோக்கி பயணித்து, அங்கிருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றிருந்தனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி

ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தையும், ஜனாதிபதி செயலகத்தையும் போராட்டக்காரர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.

ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க

இவ்வாறு சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து தமது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதையடுத்து, ஜுலை மாதம் 15ம் தேதி பதில் ஜனாதிபதியாக, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக, அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.

ஜனாதிபதியாக பதவியேற்றத்தை தொடர்ந்து, காலி முகத்திடல் போராட்டத்தை கலைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

இரவோடு இரவாக பாதுகாப்பு பிரிவினரை, காலி முகத்திடலுக்கு அனுப்பி, போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டார்கள்.

இதையடுத்து, போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அனைத்து அரச கட்டிடங்களும் மீள தமது பொறுப்பிற்கு எடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதையடுத்து படிப்படியாக நிலைமையை வழமைக்கு கொண்டு வர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்ததுடன், கோட்டாபய ராஜபக்ஸவை மீள நாட்டிற்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுத்திருந்தார்.

சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து சென்று அங்கு வாழ்ந்து வந்த கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் நாட்டிற்கு வருகைத் தந்ததுடன், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் நாட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து தமது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்

இந்த போராட்டம் காரணமாக ராஜபக்ஸ குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் அமைச்சராக இருந்த பஷில் ராஜபக்ஸ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருந்தார். அதேபோன்று ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஸவும் பதவி விலகினார்.

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் உறவினரான ஷஷிந்திர ராஜபக்ஸ ஆகியோர் தொடர்ந்தும் நேரடி அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக போராட்டத்தில் வெற்றி கொண்ட போதிலும், ராஜபக்ஸவின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவையும் பதவி விலகுமாறு தொடர்ந்தும் காலி முகத்திடல் போராட்டத்தை நடத்திய தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஜனாதிபதிக்கு பகிரங்க அழைப்பு!

Next Story

மேற்குக் கரையில் கொடூரம்!