ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பி’ அறிக்கையை மாற்றியமைத்ததாக ரம்புக்கனை பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான உண்மைகளை ரம்புக்கனை பொலிஸார் ‘ஏஆர்’ அறிக்கை மூலம் சமர்ப்பித்திருந்த போதிலும், நீதவான் ‘பி’ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்திருந்தார்.
நீதவான் பணிப்புரைக்கமைய ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டிபெக்ஸைப் பயன்படுத்தி அறிக்கையில் பல மாற்றங்களை நீதவான் அவதானித்தார்.
அதேவேளை போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகளும் ‘பி’ அறிக்கையின் மாற்றங்களை குறிப்பிட்டு நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அத்துடன் அறிக்கையை மாற்றியமைத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
இதையடுத்து, உடனடியாக பொலிஸாரின் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதவான் உத்தரவிட்டார். இந்தத் திருத்த சம்பவத்திலிருந்து பொலிஸார் தவறு செய்திருப்பது உறுப்படுத்தப்படுகின்றது என்றுதான் அர்த்தம்.