இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டாம் என இந்தியா தன்னிடம் பெரிய கோரிக்கை ஒன்றை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோபூர்வ இல்லத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடம் உரையாடும் போது முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட தகவலை வெளியிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மாலைதீவில் இருக்கும் போது இந்திய விடுத்த கோரிக்கை
“ நான் மாலைதீவில் இருந்த போது இந்தியா ரணிலை ஜனாதிபதி நியமிக்க வேண்டாம் என என்னிடம் பெரிய கோரிக்கையை விடு்த்தது. நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் இணங்கியது போல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை ஜனாதிபதியாக நியமிக்குமாறு இந்தியா என்னிடம் கோரியது.
எனினும் ரணிலை ஜனாதிபதியாக நியமிக்குமாறு எனக்கு பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ரணிலை ஜனாதிபதியாக நியமிக்குமாறு எங்களவர்களே என்னிடம் வந்து கூறினர்.
எனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக நான் ஜனாதிபதி பதவியை ரணிலுக்கு வழங்கினேன். இதன் காரணமாவே இந்தியா என் மீது கோபம் கொண்டிருக்கும் என்று நான் நினைக்கின்றேன்” என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.