அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இடைக்கால அரசாங்கம் இரவு 8 மணிக்கு பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
யூனுஸ் தலைமையிலான ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று ராணுவத் தளபதி கூறி உள்ளார். இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர் இவர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்தியாவிற்கு நெருக்கம். தற்போது யூனுஸ் உள்ளே வந்திருப்பது இந்தியாவிற்கு ஒரு வகையில் சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இவர் அமெரிக்காவின் சிஐஏவிற்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுவதால்.. இவரை தேர்வு செய்ததற்கு பின் வேறு சில அரசியல் அழுத்தங்கள், சர்வதேச திட்டங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நாட்டின் தற்போதைய பிரச்சனைகளை சமாளிக்க உதவுவதற்கு தயாராக இருப்பதாக இன்று கூறி உள்ளார். நான் என் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன், என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும், நாம் சிக்கலில் இருந்து விடுபட என்ன எல்லாம் செய்யலாம் என்ற திட்டத்துடனும் இருக்கிறேன், என்று கூறியுள்ளார். இன்று காலை அவர் வங்கதேசம் வருவார். அதன்பின் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வார். பின்னர் இரவு பதவி பிரமாணம் செய்வார்.
பதவி என்ன?:
முகமது யூனுஸ் இடைக்கால பிரதமராக பதவியேற்க உள்ளார். இவர் பிரதமர் அதிகாரத்துடன் பதவி ஏற்றாலும் பிரதமர் என்ற பெயர் இவருக்கு இருக்குமா என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அந்நாட்டின் தலைவர், புதிய அரசின் தலைமை ஆலோசகர் என்ற பெயரில் இவர் பதவி ஏற்பார்.
வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். வங்கதேச பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்து உள்ளனர். அங்கே வீட்டை சூறையாடும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஒரே ஒரு இடஒதுக்கீடு சட்டம்தான் அங்கே இந்த போராட்டம் நடக்க முக்கிய காரணம் ஆகும்.
வங்கதேசத்தில் நடக்கும் போராட்டம் மற்றும் கலவரத்தில் குறைந்தது 498 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பிரதமர் ஹசீனா பதவி விலகக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் அங்கே ஒரு வாரத்திற்கும் மேலாக போராடினர். கடந்த ஜூலை 19 கொண்டு வரப்பட்ட அரசு வேலைகளுக்கான இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.
போராட்டம்
கடந்த மாதம் பிற்பகுதியில் தொடங்கிய போராட்டங்கள் தற்போது நாட்டிலேயே மிகப்பெரிய போராட்டமாக மாறி உள்ளது. டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆர்வலர்கள், பொதுமக்கள் vs காவல்துறை, ஆளும்கட்சி ஆதரவாளர்கள் இடையிலான கலவரமாக இந்த போராட்டம் மாறி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 1971ல் நடத்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதம் வரை இடஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது அப்போது போரில் கலந்து கொண்ட படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்தே அங்கே போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு அமைப்பு பாரபட்சமானது என்றும், பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மாணவர்கள் முதலில் போராட்டத்தில் குதித்தனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்தான் முதலில் போராட்டத்தில் குதித்தனர். .
இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும்.. அதற்கு பதிலாக சாதாரண மெரிட் சிஸ்டம் வேண்டும் என்றும் அறிவித்து இவர்கள் போராட்டம் செய்ய தொடங்கினர். இந்த போராட்டம் தற்போது உச்சம் அடைந்து உள்ளது. இடஒதுக்கீடு மட்டுமின்றி 15 வருடங்களாக ஹசீனா ஆட்சி மீது அதிருப்தியில் இருந்த மக்கள் விலைவாசி தொடங்கி பாதுகாப்பு வரை பல விஷயங்களை குறிப்பிட்டு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் போராட்டம் தற்போது அங்கே அரசுக்கு எதிரான போராட்டாமாக மாறி உள்ளது.