மஹிந்த திருமலை கடற்படை முகாமில் -கமல் குணரத்ன

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இயல்புநிலை திரும்பிய பிறகு அவர் விரும்பிய இடத்துக்கு அனுப்பி வைப்போம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாள்களாக நடந்து வரும் வன்முறையில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுவரை 61 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 41 வாகனங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும், 136 வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய ராணுவம் வருமா?

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டின் ராணுவமும் நாட்டிற்கு வரவழைக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கையின் மூத்த சகோதரன் போன்ற நாடு என்றும், இந்த சிக்கலைக் கடப்பதற்கு இந்தியாதான் உதவி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், ஆனால் இந்தியாவின் ராணுவத்தை அழைக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.

அத்துடன் எந்த சூழ்நிலையிலும் நாட்டில் ராணுவ ஆட்சி வராது என்றும் அதற்கான அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அதே நேரம், இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவது தொடர்பாக வரும் செய்திகளுக்கு இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் தன் ட்விட்டர் பக்கத்தில், “இலங்கைக்கு இந்திய படைகளை அனுப்புவதாக, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் யூகங்களின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளை உயர் ஆணையரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த கருத்துகள் இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஏற்றதாக இல்லை,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு எப்படி நடக்கும்?

வன்முறை நடந்தால் முதலில் பாதுகாப்புப் படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள். பிறகும் யாராவது உயிராபத்தை விளைவிக்கவோ, சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவோ யாராவது முயன்றால் அவர்களை நோக்கி முழங்காலுக்கு கீழே சுடுவார்கள். ஆனால், அது போன்ற சூழ்நிலையில் தவறுதலாக உடலில் மேலே குண்டடி பட்டால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.

“சுடும் உத்தரவு சட்ட விரோதம்” – சுமந்திரன்

இலங்கையில் வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் நேற்றைய தினம் வழங்கப்பட்ட உத்தரவு சட்ட விரோதமானது என்று நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சரவை கலைக்கப்படும் போது, அமைச்சின் செயலாளர்களும் பதவியிழப்பார்கள் என அரசியலமைப்பின் உறுப்புரை 52(3) கூறுவதால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேற்படி உத்தரவை வழங்க முடியாது எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

“கோட்டா பதவி விலகினால் மட்டுமே பதவியேற்பேன்”

இதனிடையே, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மட்டுமே, புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கின்றார்.

இலங்கை எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Previous Story

ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான காரியாலயம் - வீடு தீக்கிரை!

Next Story

வருகின்றது ரிஷ்வி முஃப்தி: சில கேள்விகள்!