-நஜீப் பின் கபூர்-
தேர்தலுக்கான கூட்டணிகளும் அரசுக்கான கூட்டணியும்
நமது குரலின் வாசகர்களுக்கு முதலில் 2024 ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டு, புத்தாண்டில் வருகின்ற அதிரடியான கூட்டணிகள் பற்றி சில தகவல்களை முன்கூட்டி சொல்லி வைக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்தக் கூட்டணிகள் தேர்தலுக்கு முன்னரான கூட்டணி தேர்தலுக்கு பின்னாலான கூட்டணி என்று நாம் அறிமுகம் செய்ய எதிர்பார்க்கின்றோம்.
வருடக் கணிப்பு கி.மு-கி.பி என்று பார்க்கப்படுவது போல தே.மு-தே.பி என்று இதனைச் சுருக்கமாக இங்கு ஆராய்வோம். இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்பு முனையாக எதிர்வரும் நாட்களும் வருகின்ற தேர்தல்களும் அமைய இருக்கின்றன.
தேர்தல்கள் என்று பார்க்கின்ற போது நமது நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் அல்லது தலைவர்கள் என்று முதலில் பார்க்க வேண்டி இருக்கின்றது. இன்று நமது நாட்டில் அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் என்று என்பது (80) வரையில் இருக்கின்றன. இந்தக் கட்சிகள் ஆரம்பம் தொடர்பாக நாம் இதற்கு முன்னர் சொல்லி இருந்தோம்.
துவக்கத்தில் ஜனரஞ்சமாக இருந்த கட்சிகள் இன்று காட்சிப் பொருட்களாக மாறி இருக்கின்றன. அந்தவகையில் நமது நாட்டில் செல்வாக்குடன் இருந்து, பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன முக்கியமாவை. அவற்றின் நிலை இன்று கேள்விக்குறியாகி நிற்கின்றன.
அதே போன்று இன்னும் பல கட்சிகள் சமகாலத்தில் தனது வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு காலமாகவும் 2024 ஆணடு இருக்கின்றது என்பது நமக்குத் தெரிகின்றது. இந்த விவகாரங்களை நேரடியாகப் பேசுவதாக இருந்தால் இன்று நாம் அணுரகுமர திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்பன தற்போது அரசியல் அரங்கில் செல்வாக்குடன் இருப்பதாகத் தெரிகின்றது.
இதனை அனைத்து ஊடகங்களும் பகிரங்கமாகவே பேசியும் வருகின்றன. இதில் மறைப்பதற்கு ஏதும் கிடையாது. அதே நேரம் தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தனது அரசியல் இருப்புத் தொடர்பில் கடுமையான நெருக்கடிகளுக்கு இலக்காகி வருகின்றது.
நாட்டில் உச்ச அதிகாரம் மிக்க பதவியில் இருக்கின்ற ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி திக்குத் தெரியாத காட்டில் தனித்து விட்ட மனிதன் போல பாதை தேடித் தத்தளிக்கின்ற நிலையில் இருக்கின்றது. யாருடன் அணிசேர்வது என்பது அவர்களுக்கே புரியாதா நிலை.! அத்துடன் இன்று ஆட்சி செய்கின்ற மொட்டுக் கட்சி கூட அவர்களைத் தம்முடன் இணைத்துக் கொள்ளத் தயாராக இல்லை.
நமது கணிப்புப்படி வருகின்ற அரசியல் மேடைகளில் ஜனாதிபதி ரணில் தவறுகளைச் சொல்லித்தான் மொட்டுக் கட்சி கரை சேர எதிர்பார்க்கின்றது. இதனை வருகின்ற நாட்களில் பார்க்க முடியும். அதே போன்று செல்வாக்கூடன் இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திராக் கட்சியும் இன்று மைத்திரியின் தன்னல அரசியல் செயல்பாடுகளினால் சந்தியில் நிற்க்கின்றது.
தெற்கைப் பொறுத்தவரை வருகின்ற 2024 தேர்தல்களில் அரசாங்கத்தை அமைக்கின்ற தீர்க்கமான சக்திகளாக நாம் மேற்சொன்ன கட்சிகள்தான் முன்னணியில் இருக்கின்றன. அவற்றின் செல்வாக்கு மற்றும் மக்கள் ஆதரவு தொடர்பான தரவுகளைப் பற்றி நாம் முன்பும் சொல்லி இருந்தோம். தேர்தல் நெருக்கமாக வருகின்ற போது மேலும் இதனை விரிவாகப் பேசலாம்.
அந்த வகையில் நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் என்று பார்க்கின்ற போது ஜனாதிபதி ரணில் மொட்டுக் கட்சித் தலைவர்களான மஹிந்த, பசில், நாமல் எதிர்க் கட்சி தலைவர் சஜித், ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க என்போரைத் தீர்க்கமான பாத்திரங்களாக பார்க்க வேண்டும்.
இவர்களதைத் தவிர முதலில் வருவது ஜனாதிபத் தேர்தல் என்றால் சந்திரிக்க பண்டாரநாயக்க, மைத்திரி, டலஸ், சம்பிக, டலஸ், தம்மிக்க, திலித், பொன்சேக்க போன்றவர்கள் வேட்பாளர்களாகவோ அல்லது அவர்கள் தரப்பில் சில வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களை நாம் உதிரிகள் என்றுதான் தற்போதய அரசியல் களத்தில் வைக்க வேண்டும். தனிப்பட்ட வகையில் இவர்களுக்குப் சொல்லும் அளவுக்கு வாக்கு வங்கி கிடையாது. அத்துடன் விமல், கம்மன்பில, அதுலியே போன்றவர்கள் இருதலைக் கொல்லி எறும்பின் நிலையில் இருக்கின்றார்கள். இவர்கள் மீண்டும் மஹிந்த அணியில் இணைந்து அதற்கு புதுக் கதை சொல்லவும் இடமிருக்கின்றது.
மேலும் சம்பந்தன், விக்ணேஸ்வரன், பொண்ணம்பலம் மற்றும் ஹக்கீம், ரிசாட், அதவுல்ல, ஜீவன், திகா, மனோ, ராதா போன்றவர்கள் சமூகத்தின் பேரில் கட்சிகளை வைத்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் கட்டுப்பாட்டில் வருகின்ற தேர்தல்களில் மக்கள் எந்தளவுக்குக் கட்டுண்டு தீர்மானங்களை எடுப்பார்கள் என்பதிலும் சிக்கல்கள் இருக்கின்றன.
தெற்கில் அரசியல் களம் நெருப்பாகி வரும் நிலையில் சிறுபான்மை தலைமைகள் கோமாவில்தான் இருக்கின்றார்கள். சமூகத்தின் பேரில் இவர்கள் அரசியல் செய்வதாக இருந்தால் அவர்கள் களத்தில் இப்படி இருக்க முடியாது. தமது தனிப்பட்ட அரசியல் மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்- வியாபாரங்கள் மட்டுமே இவர்களுக்கு முக்கியம் அதனால்தான் அவர்கள் அரசியல் அப்படி.
ஆளும் மொட்டுக் கட்சி எதிர்வரும் நாட்களில் தமது கூட்டாளிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும். நாம் அறிந்த வரையில் அவர்களுடன் செல்வாக்கான அரசியல் கட்சிகள் ஏதும் இணைந்து கொள்ளத் தயாராக இல்லை. ஆனாலும் இவர்களிடம் அரச அதிகாரமும் பணப் பலமும் இருப்பதால் அதனை வைத்துத்தான் அவர்கள் தமது நகர்வுகளை முன்னெடுக்க வேண்டி வரும்.
கடந்த காலங்களைப் போன்று பௌத்த விகாரைகள் மற்றும் செல்வாக்கான பௌத்த தேரர்களோ இவர்களுக்கு துணைக்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் காசுக்கு இவர்களை விலைக்கு வாங்க இடமிருக்கின்றது. அதே போன்று சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பிராச்சரங்களும் வருகின்ற தேர்தல்களில் விலைபோகாது.
ஜனாதிபதி ரணிலிலும் அவருக்கு நெருக்கமான ஐதேக. உறுப்பினர்களின் கதைப்படி அவர்களுக்கு தேர்தலிகளில் நம்பிக்கை கிடையாது. எனவே தான் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எவரும் ரணிலுடன் போட்டிக்கு வரக்கூடாது. போட்டியில்லாமல் அவர் தெரிவு அமைய வேண்டும். மேலும் தேர்தலே இல்லாம் ரணிலுக்கு இன்னும் பத்து வருடங்கள்(10) கொடுக்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன்னர் குறைந்தது இன்னும் இரு வருடங்களாவது தேர்தல் நடத்தாமல் ரணில் நாட்டை ஆள வேண்டும் என்று வஜிர அபேவர்தன கோட்டிருக்கின்றார். அப்படிக் கூறும் வஜிர தேர்தல் நடைபெற்றால் ரணில் நூறு இலட்சம் (100) வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்றும் கூறி இருந்தார். இப்படியான கதைகளை வைத்துப் பார்க்கின்ற போது நாட்டு மக்களை வஜிர அபேவர்தன மந்த புத்திக்காரர்கள் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றார் போலும்.
வருவது பொதுத் தேர்தலாக இருந்தாலும் ஜனாதிபத் தேர்தலாக இருந்தாலும் ரணிலுக்கோ ஐதேக. வுக்கோ தன் எந்த அணி என்பது அவர்களுக்கே தெரியாது. ஜனாதிபதி கதிரையில் இருக்கும் வரை ரணில் என்ற ஒரு மனிதன் அரங்கில் இருப்பார். அதன் பின்னர் அரசியல் அரங்கிலிருந்து அவர் காணாமல் போய்விடுவதற்கே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பதினைந்து இருபது (15-20) வரையிலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோது அவர்களுக்கு ஒரு ஆசனத்தைகூட வென்றெடுக்க முடியவில்லை. (இரண்டரை இலட்சம்) அதே நேரம் ராஜபக்ஸாக்கள் ஓடிப்போன போது அவர்கள் சார்பில் பதவியேற்று இன்று மக்களின் மிகப் பெரிய வெறுப்பிற்கு ரணில் ஆளாகி இருக்கின்றார். இந்த நிலையில் மீண்டும் ஐதேக. தேர்தலுக்கு நின்றால் கடந்த பொதுத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த வாக்குகளை விடக் குறைவான வாக்குககைள்தான் கிடைக்க வேண்டும். இதுதான் அரசியல் விஞ்ஞான ரீதியினலான கணக்கு.
இப்போது களத்தில் பிரதான அணியாக இருக்கின்ற அணுர தலைமையிலான என்பிபி. அரசியல் ரீதியில் தான் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை. தனி நபர்கள் மற்றும் சிவில் சமூகங்களுடன் மடடும்தான் எமக்குக் கொடுக்கல் வாங்கள் என்ற கண்டிப்பான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். ஜனாதிபதி தேர்தலானாலும் பொது தேர்தலானாலும் அவர்களது நிலைப்பாடு இதுதான். அவர்கள் சிவில் சமூகங்களை ஒன்றிணைக்கின்ற முயற்சியில் நம்பிக்கையுடன் தொழில்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதில் அவர்கள் கணிசமான முன்னேற்றங்களையும் கண்டு வருகின்றார்கள்.
இப்போது ஐக்கிய மக்கள் சக்தி பற்றி பார்ப்போம். 2024 பொதுத் தேர்தலாக இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் இந்த அணி ஒரு தீர்க்கமான சக்தியாக இருக்கும். சஜித் தன்னை முன்கூட்டியே ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவித்திருக்கின்றார். ஆனால் வருகின்ற நாட்களில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி. புதிய கூட்டணியை ஒன்றை அமைக்க இருக்கின்றது.
இதில் நாம் முன்பு சொன்னது போல ஆளும் தரப்பில் அதிர்ப்தி கொண்டவர்கள் பலர் இணைந்து கொள்ள இருக்கின்றார்கள். தேர்தல் அறிவிப்புடன் இன்னும் பலர் மொட்டுத் தரப்பிலிருந்து வந்து இதில் இணைந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் இவர்களுக்கு இருக்கின்றது. அத்துடன் சிறுபான்மை அரசியல் தலைமைகள் ஆதரவு தமக்கு என்று சஜித் அணி எதிர்பார்க்கின்றது அது யதார்த்தமும் கூட.
அதே நேரம் ரிசாட், மனோ போன்றவர்கள் விமல் கம்மன்பில அதுருலியே போன்ற இனவாதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டால் தாம் சஜித் அணியில் இருக்காப் போவதில் என்று எச்சரித்திருக்கின்றனர். இதற்கு முன்னர் விமல் தரப்புடன் சஜித் அணி பேச்சுவர்த்தைகள் நடதத்திக் கொண்டிருப்தை நாம் ஆதாரபூர்வுமாக சொல்லி இருந்தோம்.
இப்போது அதற்கு ஆப்பு என்றுதான் தெரிகின்றது. அதனால் இப்போது கூட்டணிகள் அமைப்பது தொடர்பாக தீர்மானிக்கின்ற அதிகாரம் தலைவர் சஜித்துக்கு அந்தக் கட்சி கொடுத்திருக்கின்றது. எனவே அங்கு தேர்தலுக்கு முன்னாலான கூட்டணிகளுக்கு கதவு திறந்துதான் இருக்கின்றது.
ஜனாதிபத் தேர்தலில் இந்த முறை முக்கோணப் போட்டி அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் நமது கணிப்புப்படி அப்படியான ஒரு நிலை இல்லை. அணுர, சஜித், ராஜபக்ஸாக்கள் தரப்பு (பசில் தம்மிக்கு வாக்குறுதி. இந்தியாவின் அங்கிகாரமும் அவருக்கத்தான்), மேலும் ரணில், டலஸ், மைத்திரி, விமல், ரொசான், தமிழ் தரப்பு என்று டசன் கணக்கானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களாக வந்தாலும். பிராதான வேட்பாளர் நெருக்கமான இடைவெளியில் தனது இலக்கை அடைவார்.
புதிய அரசுக்கான கூட்டணி
இதுவரை தேர்தலுக்கு முன்னாலான பிரதான கூட்டணிகள் பற்றிப் பார்த்தோம். இப்போது தேர்தலுக்குப் பின்னாலான கூட்டணிகள் பற்றிப் பார்ப்போம். பொதுவாக தேர்தல்களுக்கு முன்னாலான கூட்டணிகள் பின்னாலான கூட்டணிகள் என்று ஒன்று வருவது ஜனநாயக அரசியலில் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
வருகின்ற தேர்தலிலும் இப்படியான ஒரு கூட்டணிக்கு வாய்ப்புக்கள் பிரகாசமாகவே இருப்பதாகவே நமக்குத் தெரிகின்றது. இதனைத்தான் நாம் தே.பி. கூட்ணி என்று உச்சரிக்கின்றோம். தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற மொட்டுக் கட்சி வெற்றி பெற்றாலும் சஜித் அணி வெற்றி பெற்றாலும் அணுர அணி வெற்றி பெற்றாலும் நிச்சயமாக அரசமைக்கத் தேர்தலுக்கு பின்னாலாளன ஒரு கூட்டணி வரும்.
இது அரசாங்கத்தை முன்னெடுக்கத் தேவையான பெரும்பான்மைக்கான கூட்டணியாக அமையும். பொதுத் தேர்தல் முடிவுகளின் படி மொட்டு, தொலைபேசி திசைகாட்டி அல்லது மற்றும் ஏதாவது அணிகளாக முன்னணியில் இருந்தாலும் தனிப் பெரும்பான்மைக்கான வாய்ப்புக்கள் சமையாது.
அதனால் அரசாங்கத்தை அமைக்க தேர்தலுக்கு பின்னாலான ஒரு புதிய கூட்டணி வரும். அணுர தலைமையிலான அணி அதிக ஆசனங்களை வெற்றி கொண்டாலும் சஜித்-மஹிந்த மற்றும் சிறுபான்மை அல்லது சிறு கட்சிகளை இணைந்த ஒரு கூட்டணி அரசுக்கான வாய்ப்புக்கும் இடமிருக்கின்றது.
ஆனால் இப்படி ஒரு கூட்டணி அமைப்பதில் பெரும் நெருக்கடிகள் வரும். அதே நேரம் அணுர தலைமையிலான அணிக்கு அதிக ஆசனங்கள் தேர்தலில் கிடைத்தாலும் அவர்களுக்கும் தேர்தலுக்கு பின்னாலான ஒரு கூட்டணிக்குச் செல்ல வேண்டி தேவை வரும்.
அப்போது அவர்கள் தமது முன்னைய உடும்புப் பிடியைத் தளர்த்தி விட்டுக் கொடுப்பார்களாக? அல்லது தமது கொள்கையுடன் செல்ல விரும்புவோருடன் இணைந்து கூட்டரசு அமைப்பார்களா என்பது அந்த நேர அரசியல் இராஜதந்திரி நகர்வுகள் சம்பந்தப்பட்ட தீர்மானங்களாக அது அமையும். இது சமகால அரசியலை மையப்படுத்திய எமது பார்வை. அதே நேரம் அதிரடியான அரசியல் நிகழ்வுகள் களத்தில் மாற்றங்களைக் கொண்டு வரவும் இடமிருக்கின்றது.
நன்றி: 31.12.2023 ஞாயிறு தினக்குரல்