கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதில், ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் உள்ள பிற உறுப்பு நாடுகளை விட, இந்தியா அதிகமாக மீட்சியடையும் என, ‘பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் – 2021’ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் – 2021 அறிக்கையை நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்தும் உறுப்பு நாடுகளாக உள்ளன.
இவற்றின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.இந்த உறுப்பு நாடுகளில், இந்தியாவின் பொருளாதார மீட்சி அதிகமாக இருக்கும் என அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் கணிசமான விரிவாக்க நிதி முயற்சிகளை மேற்கொண்டு, அவற்றை செயல்படுத்தி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.