நஜீப் பின் கபூர்
நன்றி: 05.07.2026 ஞாயிறு தினக்குரல்

உலக வரலாற்றில் நிறையவே கிளர்ச்சிகள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. அதில் சில புரட்சிகளாக மாறி பதவியில் இருந்த அதிகார வர்க்கத்தையே தூக்கி எறிந்த நிகழ்வுகளும் உண்டு. இதில் இரத்தக் களரிகள் மனிதப் படுகொலைகள் என்ற அளவுக்குக் கூடப் போன சம்பவங்களும்இருக்கின்றன.
சில கிளர்ச்சிகளும் புரட்சிகளும் பசுமையாக நடந்து முடிந்த வரலாறுகளும் கூட இருக்கின்றன. ஆனால் நாம் இப்போது உள்நாட்டு விவகாரத்துக்கு வருவோம். இந்தப் கிளர்ச்சிகளும் புரட்சிகளும் மன்னர் காலம் தொட்டே நடந்து வந்திருக்கின்றன. அந்த வகையில் பொலன்னறுவைக் காலத்தில் வீரபாகு என்பவன் 1196ல் ஒரு இரவு மட்டுமே அரசனாக பதவியில் இருந்திருக்கின்றான். இப்போது சுதந்திரத்தின் பின் அரசியல் பற்றி பார்ப்போம்.

1948ல் நமக்கு சுதந்திரம். இன்று நமக்கு சுதந்திரம் கிடைத்து 78 வருடங்கள் ஐந்து மாதம் ஒரு நாள். இந்த கால எல்லைக்குள் நமது நாட்டில் பல்வேறு பட்ட அரசியல் முறுகல்கள் தோன்றி இருப்பதை நாம் அவதானிக்க முடியும். அவற்றை தொழிலாளர் போராட்டங்கள் கிளர்ச்சிகள் ஆயுதப் போராட்டங்கள் புரட்சிகள் என்று நாம் வகைப்படுத்த முடியும்.

இதில் 1953ல் நடைபெற்ற ஹர்த்தால் அல்லது தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழிலாளர் கிளர்ச்சியாகப் பார்க்கப்படுகின்றது. அப்போது பிரதமராக இருந்த ட்டலி சேனாநாயக்க அந்தப்போராட்டத்துக்கு அஞ்சி தனது பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்யும் அளவுக்கு நிலமை சென்றது. போராட்டக்காரர்களுக்கு பயந்து கடலில் இருந்த கப்பலில் ஏறிக்கொண்டதாகவும் பதிவுகள்.
இலங்கை சமசமஜக் கட்சியும் இடதுசாரிகளும் சிவில் சமூகத்தினரும் சேர்ந்துதான் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் திகதி இரு தினங்கள்மட்டுமே இந்தப்போராட்டம் நடந்தது. இது தவிர நாட்டில பல தொழிலாளர் போராட்டங்கள்; அவ்வப்போது நடந்து வந்திருக்கின்றன. 1954 ஹர்த்தால் ஒரு துவக்க நிகழ்வு என்பதால் அதனை இங்கு பதிகின்றோம்.
இது தவிர நாட்டில் இன ரீதியான வன்முறைகளும் சிறிதும் பெரிதுமாக இன்றுவரை பல வன்முறைகள் நடை பெற்றிருக்கின்றன. அதில் பலநூறு பொதுமக்கள் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் வந்திருக்கின்றன .1956>1958>1977>1981>1983 களில் இது நடை பெற்றிருக்கின்றன.
ஐரோப்பியர் காலங்களிலும் நாட்டில் இன மொழி ரீதியான முரண்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன. அவை சுதந்திரத்துக்கு முன்னரானவையாக இருப்பதால் அது பற்றி நாம் இங்கு விளக்கமாக எதையும் பேச முனையவில்லை. குறிப்பாக சுதந்திரத்துக்குப் பின்னரான சிவில் சமூகத்தினரின் அமைதியின்மை பற்றியே நாம் இங்கு ஆராய்வதால் அதற்கு முன்னவைகளை நாம் இங்கு தவிர்த்து வருகின்றோம்.

அரசியல் ரீதியிலான போராட்டங்களில் 1971ல் நடைபெற்ற சிங்கள இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் முக்கியமானது. ரோஹன விஜேவீர தலைமையிலான கடும் போக்கு இடதுசாரிகளே இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். சிறுபான்மை சமூகங்களைச்சேர்ந்தவர்கள் மிக மிக குறைந்த எண்ணிக்கையில்தான் இந்த ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டனர்.

அதே போன்று 1987-1989களிலும் மீண்டும் இதே ஜேவிபி அணிஅரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். சிங்கள இளைஞர்களில் இந்த இரு போராட்டங்களிலும் ஏறக்குறைய 60000-70000 வரையிலானவர்கள் பலியாகி இருக்கின்றார்கள். அதே போன்று வடக்குக் கிழக்கில் தமிழ் இளைஞர்கள்1983 முதல் 2009 வரையிலான காலப் பகுதியில் நடாத்திய அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கொல்லப்பட்டனர்.

இது ஒரு தனி நாட்டுக்கான போரட்டமாகவே அமைந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான அந்தக் குழுவினர் வடக்கு கிழக்கில் பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் சில தசாப்தங்கள் வரை வைத்திருந்ததும் தெரிந்ததே. அரச படைகளைப் போல விடுதலைப் புலிகள் இராணுவம் கடற்படை விமானப்படை உளவுப் பிரிவுகளையும் வைத்து வடக்கு கிழக்குக்கு வெளியிலும் தாக்குதல் நடாத்தி முழு நாட்டையும் அச்சுறுத்திக் கொண்டிருந்தனர்.
மேற்சொன்ன சிங்கள-தமிழ் இளைஞர்களின் இரு ஆயுதப் போராட்டங்களும் இலங்கையில் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்திய போராட்டங்களாகும்.இந்தப் போராட்டத்தில் ஜேவிபினர் தனது தலைவர் விஜேவீரவை இழந்தனர்.

ஆனால் அந்த இயக்கம் தலைமறைவாகவும் பிற்காலத்தில் பகிரங்கமாகவும் தொடர்ச்hக செயல்பட்டு வந்ததால் இன்று அரசியல் அதிகாரத்தைக் கூட கைப்பற்ற முடிந்தது. அதே போன்று பிரபாகரன் 2009 கொல்லப்பட்டதுடன் தமிழ் இளைஞர்களின் தனிநாட்டுக்கான ஆயுதப்போராட்டமும் முடிவுக்கு வந்தது. அந்த இயக்கத்தில் இருந்த அனைத்துப் போராளிகளும் போல கொல்லப்பட்டுவிட்டனர்.

ஈழ விடுதலைப் போரில் இரு தரப்பிலும் இரண்டு இலட்சம் பேர்வரை பலியாகி இருப்பார்கள் என்று சொல்லப்படுகின்றது. போராட்டம் காரணமாக இலட்சக் கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் குடியேற நேர்ந்தது. அதனால் உலகம் பூராவிலும்தனி ஈழத்துக்கு ஆதரவான பல்லாயிரம் பேர் இன்று சிதறிப்போய் இருக்கின்றனர்.
இப்போது சமகால அரசியலுக்கு வருவோம். சுதந்திரத்துக்குப் பின்னர் நடைபெற்ற ஆட்சியில் சிங்கள இளைஞர்கள் அதிருப்தியில் இருந்திருக்கின்றனர். அதே போன்று சிறுபான்மை மக்களும் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியில் இருந்ததால் அது ஆயுதப் போராட்டம் அளவுக்கு போனது.
சுதந்திரத்துக்குப் பின்னர் துவக்க காலத்தில் ஏறக்குறைய மூன்று தசாப்தங்கள் நாட்டில் ஓரளவுக்கு இயல்பான ஆட்சி முறையொன்று இருந்தது என்று சொல்ல வேண்டும். இந்த நாட்டில் ஜேஆர். ஜெயவர்தனஅதிகாரத்துக்கு வந்த பின்னர் நாடு ஒரு அடக்கு முறைக்குள் பிரவேசித்தது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கு ஜேஆர். கொடுத்த அச்சுறுத்தல் இதற்கு நல்ல உதாரணம்.
அத்துடன் அவர் 1978 கொண்டு வந்த அரசியல் யாப்பு இதற்கு முக்கிய காரணம் என்றும் பார்க்கப்படுகின்றது.ஜே.ஆருக்கு பின்னர் குறிப்பாக ஆர்.பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ போன்றவர்கள் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதிகளாக அமர்ந்திருந்தனர்.
உடதலவின்ன நிகழ்வும்
மெதமூலன பிரவேசமும்!
2004 பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்த ஒரு சமயத்தில் நமக்கு ஜனாதிபதி சந்திரிக்காவிடமிருந்து வந்த ஒரு தனிப்பட்ட அழைபைத் தொடர்ந்து கண்டி-ஜனாதிபதி மாளிகையில் நாம் ஒரு சில சகாக்களுடன் போய் அவரை சந்தித்த போது முஸ்லிம் அரசியல் செயல்பாடுகள் பற்றிப் பேசியதுடன் மு.கா. தலைவர் ஹக்கீமை ஜனாதிபதி சந்திரிக்கா அன்று நம்மிடம் கடும் வார்த்தைகளால் விமர்சித்தார்.
அத்துடன் தனக்குப் பின்னர் பொதுசன முன்னணி தலைமை மஹிந்த ராஜபக்ஸ போன்ற ஒருவருக்கு சென்றடைவதை அவரால் ஜீரணிக்க கஸ்டமாகவே இருந்தது. நம்முடன் நடந்த கலந்துரையாடலில்இதனை அவதானிக்க முடிந்தது.
அதற்கு முன்னர் நடந்த பொதுத் தேர்தலில் உடதலவின்ன படுகொலையில் அவரது உறவினரும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அனுருத்த ரத்வத்தை தனது பெயரைக் கெடுத்துக் கொண்டிருந்ததால் மஹிந்த ராஜபக்ஸாவுக்கு களம் வாய்ப்பாக போய்விட்டது. இந்த சந்திப்பு பற்றி நாம் அன்றே ஊடகங்களுக்கு சில தகவல்களைச் சொல்லி இருந்தோம்.
உடத்தலவின்ன சம்பவம் நிகழ்ந்திருக்காவிட்டால் இந்த வாய்ப்பு மஹிந்தாவுக்குப் போய் இருக்குமா என்ற சந்தேகம்நமக்கு இருந்து வந்திருக்கின்றது. செல்வாக்கான மஹிந்தாவுக்கு ஜனாதிபதி சந்திரிக்கா மீன்பிடி அமைச்சைக்கூடஒரு காலத்தில் கொடுத்து ஆளைக் கொச்சைப்படுத்தி வைத்திருந்ததும் தெரிந்ததே.
இதனை ஒரு சந்தர்ப்பத்தில் மஹிந்தவும் சுட்டிக்காட்டி இருந்தார். எனவே சந்திரிக்கா ராஜபக்ஸாக்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருந்து வந்திருக்கின்றார் என்பதும் இது எவ்வளவுதூரம் நியாயமான தூரநோக்குப்பார்வை என்பதை தற்போதய அரசியல் நிகழ்வுகளில் அவதானிக்க முடிகின்றது.
ஜேஆர் தனக்குப் பின்னர் பிரேமதாச ஐதேக.வுக்கு தலைமை தாங்குவதையும் ஜனாதிபதியாக வருவதையும் விரும்பவில்லை என்பது பகிரங்க இரகசியம். அது போல ஒரு நிலைதான் மஹிந்த விவகாரமும்.
சில தினங்களுக்கு முன்னர் கூட ராஜபக்ஸாக்களின் மிகப் பெரிய கொள்ளைகள்-மோசடிகள் பற்றி பட்டியலொன்றை ஊடகங்களில் வெயிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவற்றின் பெறுமதி இலட்சக்கணக்கான கோடிகள் என்றும் அவர் அதில் குற்றம் சாட்டி இருக்கின்றார்.
மேலும் பாரிய அபிவிருத்திப்பணிகள் அனைத்திலும் இந்த ராஜபக்ஸாக்கள் இருபது சதவீத கொமிஸ் தமக்கு வேண்டும் என்று பகிரங்கமாக கேட்டிருக்கின்றார்கள் என்றும் குற்றம் சாட்டுவதுடன் இதனால் பல மூதலீட்டாளர்கள் தமது திட்டங்களை கைவிட்டு நாட்டிலிருந்து வெளியேறி இருக்கின்றார்கள் என்றும்; சந்திரிக்கா பகிரங்கமாக அதில் சாடி இருக்கின்றார்.
தற்போதய அரசு ஊழலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை சந்திரிக்கா ஆதரிப்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது. மேலும் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளையடியுங்கள் என்று ஒரு முறை மஹிந்த ஆதரவாலர்களுக்கு கொடுத்த ஆலோசனையையும் அவர் அங்கு நினைவு கூர்ந்தார்.
மக்கள் கிளர்ச்சியுடன் ரணிலை ராஜபக்ஸாக்கள் ஜனாதிபதியாக நியமித்து அவர்களது ஆட்சி ஆதிகாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தனர். இது மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டு பண்ணி இருந்தது.
ராஜபக்ஸாக்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ரணிலும் ஊழலுக்கும் மோசடிகளுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்த ஒரு தலைவர். ஒரு காலத்தில் அவரை மிஸ்டர் கிளீன் என்றார்கள் இன்று அவர் மிக மோசமான கிள்ளடி என்பதும் தெரிய வருகின்றது. பிணைமுறிவிவகாரத்தில் இது மேலும் உறுதியாகி இருக்கின்றது. பொருளாதார ரீதியில் மட்டுமல்ல கொலைகள் கொள்ளைகள் மோசடி கப்பம் போதை வியாபாரம் என்பவற்றில் அரசியல்வாதிகள் பின்புலத்தில் இருந்து வந்திருக்கின்றனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தாம் அதிகாரத்தில் நிலைக்க வேண்டும் என்பதற்கு நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான தொந்தரவுகள் வன்முறைகள். ஈஸ்டர் படுகொலைகள் இதில் சம்பந்தப்பட்டவர்களை கொன்று சாட்சிகளை அழிக்கின்ற நடவடிக்கைகள் என்றெல்லாம் கொடூரமான செயல்பாடுகள்.
விஐபி.க்களுக்கு சலுகையா?
குடிகள் வீதிக்கு வருவார்கள்!
தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கம் தேச சமூக விரோத இந்த அட்டகாசங்களை பண்ணிய கும்பல்களுக்கு அவர்களின் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை என்று வரும் போது அதில் குற்றம்சாட்டப்பட்டு கைதாகி வருபவர்களும் எதிர்காலத்தில் தாமும் இதில் மாட்டில் கொள்ள இருக்கின்றோம் என்று அறிந்தவர்களும் சுரேஸ் சலே கோடாபே ராஜபக்ஸாக்களுக்கு நடவடிக்கை என்று வரும் போது அப்படி எல்லாம் செய்யக் கூடாது அவர்கள் எல்லாம் தேசபக்தர்கள் என்று வீதிக்கு இறங்கி போராட்டங்களை-சத்தியக்கிரகங்களை நடாத்தி வருகின்றார்கள்.
ஆனால் பொது மக்களிடத்தில் இதற்கு ஆதரவு கிடைக்காததால் எந்தவழிகளில் எல்லாம் இந்த விசாரணைகளை நடவடிக்கைகளைத் தடுக்க முடியுமோ அந்த முயற்சிகள்தான்இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் ராஜபக்ஸாக்கள்-ரணில் அவர்களது கையாட்கள் இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட பல்வேறுதரப்பினர் மட்டுமல்லாமல் ஐமச. தலைவர் சஜித் கூட இந்த நியாயமற்ற கோரிக்கைகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைத்து வருவது அந்தக் கட்சிக்குள்ளும் வெளியிலும் இப்போது நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதை நாம் அவதானிக்க முடிகின்றது.
இப்படி சட்டம் ஒழுக்கு முறையாக அமுல்படுத்தக் கூடாது விஐபிக்களுக்கும் பிரபுக்களுக்கும் சட்டத்தில் விஷேட சலுகைகள் வேண்டும் என்று நியாயமற்ற அநியாயமான கோரிக்கைகள் தொடர்ச்சியாக வருமாக இருந்தால் கோடா காலத்தில் நடந்தது போல நீதி அனைவருக்கும் சமமாக கருதப்பட வேண்டும் கொலைகாரர்களுக்கும் ஊழல் பேர்வழிகள் யாராக இருந்தாலும் ஒரே நீதி ஒரே சட்டத்தை துரிதப்படுத்து.!
யாருக்கும் சலுகை காட்டாதே என்று குடிமக்கள்அரசை கட்டாயப்படுத்த வீதிக்கு வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று நமக்கு உணர முடிகின்றது. இது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் கருத்துப் பறிமாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் நமக்குத் தகவல்கள்.





