டி 20 உலகக் கோப்பை: நடக்கப் போகவது என்ன?

ஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் மூன்று போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க இருக்கின்றன.
டி20 உலகக்கோப்பை

இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தப் பிரிவில் இருக்கும் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகளாக இருக்கும். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும்.

தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி வங்கதேசத்தையும், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் சந்திக்கின்றன. அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளுமே தத்தமது போட்டிகளில் வென்றுவிடப் போராடும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மூன்று போட்டிகளுமே பரபரப்பாக இருக்கப் போகின்றன.

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா?

பாகிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளிலும் தோல்வியும் அடைந்திருக்கிறது. அதனால் 4 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அணியின் ரன்ரேட் 1.117. அடுத்ததாக அந்த அணி வங்கதேசத்துடன் மோத இருக்கிறது. இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அந்தப் போட்டி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த அணி 6 புள்ளிகளைப் பெறும். ஆனால் அதுமட்டும் போதாது. மற்ற இரு போட்டிகளின் முடிவும் பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைய வேண்டும்.

நெதர்லாந்து அணியுடன் தென்னாப்பிரிக்க அணி மோதும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் அல்லது தென்னாப்பிரிக்க அணி தோற்றால் அது பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமையும்.. ஏனென்றால் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற அடிப்படையில் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவை முந்திவிடும்.

இல்லையென்றால், கடைசியாக நடக்கும் இந்தியா – ஜிம்பாப்வே போட்டியில் இந்தியா தோல்வியடைய வேண்டும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் சென்ற வேண்டும்.

இந்தியாவுக்கு ஜிம்பாப்வேயுடனான போட்டி எந்த அளவு முக்கியம்?

நெதர்லாந்து அணியுடன் தென்னாப்பிரிக்க அணி மோதும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் அல்லது தென்னாப்பிரிக்க அணி தோற்றால் அப்போதே இந்திய அணி அரையிறுதிக்குச் சென்றதாகக் கருதலாம். அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வென்றால் அந்த அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

இந்தியா இதுவரை 4 போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இப்போதைக்கு பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவை முந்திவிடும் நிலை ஏற்படும். அதனால் ஜிம்பாப்வேயுடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் மழைபெய்து ஆட்டம் ரத்தாகி ஒருபுள்ளியையாவது பெற வேண்டும்.

இந்தியா

ஜிம்பாப்வேயுடனான போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கி நடக்க இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு மழையால் ஆபத்து

தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்றும் ஒரு போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டும் 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. அந்த அணியின் ரன் ரேட் 1.441. அடுத்ததாக நெதர்லாந்து அணியுடன் மோதுவதால் அந்த அணிக்கு அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதலாம்.

டி20 உலகக்கோப்பை

ஆனால் மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானால் அது அந்த அணி தொடரை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்துவிடும். ஏனென்றால் தென்னாப்பிரிக்க அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா மூன்று போட்டிகள் ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வெல்லும்பட்சத்தில் மூன்று போட்டிகளில் வென்றுவிடும். அதிக வெற்றி என்ற அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.

அடிலெய்டில் மழை வராமல் இருப்பதுதான் தென்னாப்பிரிக்காவுக்கு நல்லது.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது.

வங்கதேசத்துக்கு வாய்ப்பிருக்கிறதா?

கணக்கீடுகளின்படி இருக்கத்தான் செய்கிறது.

வங்கதேச அணி இப்போது 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி அடுத்தாக பாகிஸ்தானுடன் ஆடவுள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணிக்கு அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான சிறு வாய்ப்புக் கிடைக்கும்.

டி20 உலகக்கோப்பை

நெதர்லாந்துடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டு புள்ளிகளைப் பெற முடியாமல் போய், பாகிஸ்தான் அணியை வங்கதேசம் வீழ்த்தினால், வங்கதேசம் அரையிறுதிக்குச் சென்றுவிடும்.

இந்தியாவை வென்றால் ஜிம்பாப்வேக்கு வாய்ப்பு இருக்கிறதா?

கணக்கீடுகளின்படி இதற்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஜிம்பாப்வே இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணிக்கு 5 புள்ளிகள் கிடைக்கும். அதே நேரத்தில் பாகிஸ்தான் – வங்கதேச ஆட்டம் மழையால் கைவிடப்பட வேண்டும். தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்துடன் தோற்க வேண்டும். ஆனாலும் பெரிய வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுடன் தென்னாப்பிரிக்க அணியும் நெதர்லாந்துடன் பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.

இப்போதைக்கு அரையிறுதிக்கான எந்த வாய்ப்பும் இல்லாத ஒரே அணி நெதர்லாந்து மட்டும்தான்.

இந்தியா – ஜிம்பாப்வே போட்டி

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கும் மெல்போர்ன் மைதானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. ஞாயிற்றுக்கிழமை என்பதும் இந்தியாவுக்கு இது முக்கியமான போட்டி என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

டி20 உலகக்கோப்பை

ஆனால் மெல்பர்ன் மைதானத்தைப் பற்றிய ஒரு சிக்கல் இருக்கிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துப்போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஏதேனும் நடந்து அது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது என இந்திய ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம், அதற்கு சற்று முன்பாக நடந்து முடியும் பாகிஸ்தான் – வங்கதேசம் இடையேயான போட்டியின் முடிவைப் பொறுத்து, இந்தியா கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தைக் கொண்டதாகவும் இந்தியா-ஜிம்பாப்வே போட்டி மாறக்கூடும். ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த வரலாறு உண்டு.

ஆனால் டி20 உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இந்தியாவும் – ஜிம்பாப்வேயும் மோதுவதும் இதுவே முதல்முறை.

இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரைப் போல ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ரஸாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கே.எல். ராகுலும் சிறப்பான தொடக்கத்தை அளிக்கத் தவறிவிடுகிறார்கள். புள்ளி விவரங்களின்படி இந்திய அணியின் தொடக்க இணை இந்தத் தொடரில் அடித்த சராசரி ரன்கள் 13 மட்டுமே.

Previous Story

திலினி வலையில் தண்ணியும்!

Next Story

இலங்கை கிரிக்கெட்   வீரர் தனுஷ்க கைது!