சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். வர்த்தகம், எரிசக்தி, தைவான், ஈரான் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிமர் விளாடிமிர் புதினுடன் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு புதன்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங். அப்போது இருவரும் கொந்தளிப்பான சர்வதேச சூழலுக்கு மத்தியில் உறவுகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த உரையாடல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் இப்போதுதான் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் ஒரு சிறந்த தொலைபேசி உரையாடலை முடித்தேன். அது ஒரு நீண்ட மற்றும் முழுமையான உரையாடல், அதில் வர்த்தகம், ராணுவம், நான் ஏப்ரல் மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் (அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்! குறித்துப் பேசினோம்.
தைவான், ரஷ்யா/ உக்ரைன் இடையேயான போர், ஈரான் உடனான தற்போதைய நிலைமை, அமெரிக்காவிலிருந்து சீனா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது, நடப்புப் பருவத்திற்கு சோயாபீன் அளவை 20 மில்லியன் டன்களாக உயர்த்துவது உட்பட கூடுதல் விவசாயப் பொருட்களை வாங்குவது குறித்து சீனா பரிசீலிப்பது (அடுத்த பருவத்திற்கு அவர்கள் 25 மில்லியன் டன்களுக்கு உறுதியளித்துள்ளனர்!) விமான என்ஜின் விநியோகங்கள் மற்றும் பல இதர விஷயங்கள் உட்பட பல முக்கியமான தலைப்புகள் விவாதிக்கப்பட்டன, அனைத்தும் மிகவும் நேர்மறையானவை!
சீனா உடனான உறவும், அதிபர் ஜி ஜின்பிங் உடன் எனக்குள்ள தனிப்பட்ட உறவும் மிகவும் நல்ல நிலையில் உள்ளது, அதை அப்படியே பேணுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்துள்ளோம்.
அதிபர் ஜி மற்றும் சீன மக்கள் குடியரசு தொடர்பாக, எனது அதிபர் பதவிக் காலத்தின் அடுத்த மூன்று ஆண்டுகளில் பல நேர்மறையான முடிவுகள் எட்டப்படும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேசியுள்ளார். மேற்குலக நாடுகளின் தலைவர்கள் சமீபகாலமாக சீனா உடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு ஜி ஜின்பிங் உடன் பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய ஊடகங்களுக்குப் பேட்டியளித்த புதின், ரஷியா – சீனா நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பு, உணமையான நலன் பேணும் நட்புறவானது எனக் குறிப்பிட்டார். இந்த உரையாடல் நடந்த பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேசியுள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
அண்மையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசி வாயிலாக பேசினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அப்போது, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவேண்டும் எனத் தெரிவித்து, அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்ட நிலையில், இந்தியா மீதான வரியை 18% ஆக குறைப்பதாக அறிவித்திருந்தார் டிரம்ப்.





