-நஜீப் பின் கபூர்-
மிகப் பெரிய மக்கள் செல்வாக்குடன் அதிகாரத்தக்கு வந்த கோதாபே ராஜபக்ஸ அதிகாரத்துக்கு வந்த மிகக் குறுகிய காலத்துக்குள் அதே மக்களால் துரத்தியடிக்கப்பட்டதும். அதற்குப் பின்னர் அதே மக்களினால் தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட வெற்றி பெற்றுக் கொள்ள தகுதி இல்லாது போன ஐக்கிய தேசியக் கட்சி தனக்குக் கிடைத்த ஒரு தேசிய பட்டியலுக்காக நாடாளுமன்றத்துக்குள் போய் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி பதவிக்கு ரணில் வந்து 21.07.2023ம் திகதி ஒரு வருடங்கள் நிறைவடைகின்றன. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் நமது ஜனாதிபதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கின்றார்.
இதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்குப் போய் இருந்தார். அதற்குப் பின்னர் அவர் ஜப்பானுக்கும் போய் வந்தார். அந்த விஜயங்கள் எல்லாவற்றையும் விட அவரது இந்தியப் விஜயம் பல்வேறு வழிகளில் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இந்திய நமது மிக நெருங்கிய நாடு பக்கத்து நாடு. அது நமக்கு அண்ணன் போன்ற உறவும் உள்ள நாடும் கூட. அடுத்து வரலாற்று ரீதியில் இங்குள்ள ஒட்டு மொத்த இனங்களும்- மக்களும் கூட இந்தியர்களே என்பது ஒரு வாதமும் கூட. அடுத்து பிராந்திய ரீதியில் இருக்கின்ற வல்லாதிக்கப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் இலங்கை மீது கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருவதும் தெரிந்ததே. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்க இந்திய பக்கம் நிற்பதும் தெரிந்ததே. இதனால் இலங்கை மீதான அவதானம் மேலோங்கி இருக்கின்றது
.
அரசியல் ரீதியில் பார்க்கின்ற போது இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியாவின் அழுத்தம் தொடர்ந்து இருந்த வருகின்றது. என்றாலும் சம காலத்தில் இது வழுவிழந்த நிலையில்தான் காணப்படுகின்றது. என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஜனாதிபதி ரணிலின் இந்தியா விஜயத்தின் போது ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வுகள் வரும் என்று எவராது எதிர் பார்ப்பார்களேயானால் அது பெரும் முட்டால்தனமான எதிர்பார்ப்பாகத்தான் இருக்கவும் முடியும். நாம் இது பற்றி ஏன் நம்பிக்கையில்லாமல் கருத்துக்களைச் சொல்கின்றோம் என்றால், ரணில் வகிக்கின்ற ஜனாதிபதிப் பதவி என்பது அவருக்குச் சொந்தமில்லாத ஒன்று. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆளும் மொட்டுத் தரப்பினர் அவர் வகிக்கின்ற நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதிப் பதவிக்கு ஆப்பு வைத்துவிட முடியும்.
அத்துடன் அவர் இந்தியாவுடன் அதிகார தோரணையிலோ உத்தியோகபூர்வமாகவோ இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை நடாத்துகின்ற நிலையில் அவர் இல்லை. காரணம் நாடாளுமன்றத்தில் அவருக்கு இருக்கின்ற ஒரே ஒரு ஆசனத்தை வைத்து அவர் என்னதான் பண்ண முடியும். அதனால் அவருக்கு யதார்த்த ரீதியில் முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது என்பது நமது வாதம். இதற்கிடையில் ஈழத் தமிழ் அரசியல் வாதிகளும் கட்சிகளும் இனப்பிரச்சனை விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றர்கள். ஆளுக்கொரு கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அதில் கூட அவர்களுக்கு ஒருமித்த கருத்துக்கு வரமுடியாத நிலை. கடிதம் என்பது சராசரி நிகழ்வுகள் சம்பிரதாயம்-விளம்பரம் அவ்வளவுதான். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது போல இனப்பிரச்சினைக்கு இன்றைய நிலையில் தீர்வுதர முடியாது. அதற்கான நடைமுறையிலான அதிகாரம் இலங்கை ஜனாதிபதியிடம் இல்லலை.
அப்படித்தான் ஏதாவது தீர்மானங்கைள இந்தியாவும் இலங்கையும் எடுத்தாலும் அது இந்திய இலங்கையுடன் செய்து கொண்ட உடன்பாடு போலத்தான் இருக்கும். எனவே 13 வது திருத்தம் மற்றும், மாகாணசபைத் தேர்தல் பற்றி இந்திய அழுத்தம் கொடுத்தாலும் ரணிலால் அதனை இன்றைய நிலையில் இலங்கையில் அமுல்படுத்த முடியாது என்று நாம் அடித்துக் கூறுகின்றோம். எனவே ஈழத் தமிழர்கள் ஜனாதிபதி ரணில் இந்தியா விஜயம் தொடர்பில் பெரிய நம்பிக்கைகள் எதனையும் வைத்துக் கொண்டு ஏமாறக்கூடாது என்பதுதான் நாம் அவர்களுக்குச் சொல்கின்ற ஒரு செய்தியாக இருக்கின்றது. ஜனாதிபதி ரணில் இந்திய விஜயத்தின் போது இருதரப்பு சம்பந்தப்பட்ட சராசரி பேச்சு வார்த்தைகள் இணக்கப்பாடுகளுக்கு வரலாம். அது இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பொதுவான பிரச்சிகைகள் சார்ந்த விவகாரங்கள் மட்டுமாகவே இருக்கும்.
இந்தியா விஜயத்திற்கு முன்னர் இலங்கை இந்தியாவுக்கு சில வாக்குறுதிளைக்; குறிப்பாக மாகாணசபைத் தேர்தல் விவகாரத்தில் கொடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக சில ஊடகங்கள் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் அப்படி ஏதும் இது வரை நடக்கவில்லை. இந்திய இராஜதந்திரிகள் சிலர் ஜனாதிபதி ரணிலின்; இந்தியா விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை செய்வதற்காக இங்கு சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்திருந்தனர். ஆனால் நாம் அறிந்த வரை மாகாணசபைத் தேர்தல் பற்றிய வாக்குறுதிகள் எதனையும் நாம் அவற்றில் காணவில்லை. நம்மை விட இலங்கையில் தற்போதய அரசியல் அதிகாரங்கள், மற்றும் அவற்றை கையாள்வதில் உள்ள நெருக்கடிகளை இந்திய தெளிவாக அறிந்துதான் வைத்திருக்கின்றது. எனவே இலங்கை ஜனாதிபதியுடன் தீர்க்கமான பேச்சுவாhத்தைகளில் எடுக்கப்படுகின்ற முடிவுகளில் இந்தியாவுக்குப் பெரிய நம்பிக்கைகள் இருக்க மாட்டாது என்றுதான் நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கேற்றவாறுதான் இந்தப் பேச்சுவார்தைகள்- தீர்மானங்கள் அமையும்.
தான் இன்னும் சில மாதங்களுக்கு அல்லது கூடியது ஒரு வருடத்துக்குத்தான் அதிகாரத்தில் இருக்க முடியும் என்பது ரணிலுக்குத் தெரியும். அதுவரை எப்படிச் சமாளிப்பது அடுத்து அடாவடித்தனமாக மேலும் அதிகாரத்தில் இருக்க முனைவதாக இருந்தாலும் இந்தியாவின் இணக்கப்பாடும் உதவியும் ரணிலுக்குத் தேவை. இலங்கையின் தற்போதய ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸாக்களின் கட்டளைப் படிதான் தீர்மாங்களை எடுக்கின்றார். அவர்களைத் திருப்திப்படுத்தும் வரையில்தான் அவர் ஜனாதிபதிக் கதிரையில் அமர முடியும். எனவே இருதரப்பு நல்லுறவு இருக்கும் வரையில்தான் இந்தப் பயணம் போகும் என்பது அரசியல் புரிகின்றவர்களுக்குத் தெரியும்.
சராசரி பொது மக்கள் ஊடகங்கள் சொல்கின்ற செய்திகளை பார்த்தும் கேட்டும் அந்த நம்பிக்கையில் இருப்பார்கள். ஆனால் சம கால ஊடகங்கள் அரசியல்வாதிகளைப் போலவே தமது வருமானம் இருப்புத் தொடர்பாக உண்மையான தகவல்களை மக்களுக்குச் சொல்லத் தயங்குகின்றன. நமது ஜனாதிபதி ரணிலின் இந்திய விஜயத்திலும் இப்போது இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. இந்திய இலங்கை மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள். பொருளாதார நலன்கள் சார்ந்த விவகாரம். இங்குள்ள மலையக மக்கள் நலன்கள் சார்ந்த விவகாரங்களில் சில இணக்கப்பாடுகள் வரலாம். இந்தியா விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் சீனாவுக்கும் போக இருக்கின்றார். எனவே சீனா உயிர் நண்பன். இந்தியா உற்ற நண்பன் என்றுதான் வழக்கம் போல இந்த இரு நாடுகளையும் இலங்கை இந்தச் சுற்றிலும் சமாளிக்க முனையும்.
பொதுவாக இலங்கையின் இந்த நிலைப்பாட்டில் அது இதுவரையிலும் வெற்றியும் பெற்றுத்தான் வருகின்றது. தமிழக அரசியலிலும் ஈழத் தமிழர் விவகாரம் கருவப்பிள்ளை நிலையில்தான் இருந்தது. இன்று அந்த நிலைகூட அங்கு கிடையாது. அத்தோடு ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகள் ஆளுக்கொரு தீர்வையும் திட்டத்தையும் பேசுவதால் இது இலங்கை அரசியல்வாதிகளுக்கு அது நல்ல வாய்ப்பாகவும் அமைந்திருக்கின்றது. ஜனாதிபதி ரணிலின் இந்திய விஜயத்தின் போது ஈழத் தமிழர் விவகாரத்தில் ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்புகின்றவர்களை அல்லது அதற்கான நம்பிக்கைகளை வெளியிடுகின்றவர்களை வழக்கம் போல அவர்கள் இளவ மரத்தில் காவலுக்கு நிற்க்கின்றார்கள் என்றுதான் அடையாலப்படுத்த வேண்டும்.
இதற்கிடையில் ஜனாதிபதி ரணில் இந்தியா வரும் போது அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்தியா பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும் என்றும் தலைவர் சம்பந்தன் ஐயா இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவை கொழும்பில் சந்தித்துக் கோரிக்கை விடுத்திருக்கின்றார். ஏற்கெனவே பத்திரத்தில் கையெழுத்துப் போட்டவற்றையே தரவே மாட்டோம் என்று பகிரங்கமாக பேசித்திரியும் அரசியல் வாதிகளிடம் அர்த்தமுள்ள என்று ஒன்றை எப்படி எதிர்பார்க்கின்றீர்கள் என நாம் பெரியவர் சம்பந்தரிடம் கேட்க்கின்றோம்.
மேலும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட அனைத்தையும் ஒன்று விடாமல் பெற்றுத் தருமாறும் இந்தியப் பிரதமரிடம் நீங்கள் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அதனைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் அவர் தூதுவரிடம் மண்றாடி இருக்கின்றார். சம்பிரதாயத்துக்கு தூதுவரும் சரி ஓகே நான் உங்கள் கோரிக்கைகள் எல்லாவற்றையும் ஒன்றும் தவறாமல் அப்படியே பிரதமருக்கு சொல்லி விடுகின்றோன் என்றும் கூறி இருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவர் சம்பந்தர் கோரிக்கை விடுத்துவிட்டார். இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து தட்டில் வைத்து அவர்கள் கேட்டதை எல்லாம் தந்து விடுவார்கள் என்று முன்பள்ளிக் குழந்தைகூட நம்புமா என்று நாம் பெரும் தலைவரிடம் கேட்கின்றோம்.
மாமனார் ஜே.ஆர். ஜனாதிபதியாக இருக்கும் போது இன்றைய ஜனாதிபதி ரணில் அமைச்சராகவும் இருந்திருக்கின்றார். அதனால் இந்தக் கதைகள் அனைத்தும் அவருக்கு நன்றாகத் தெரியும் என்று சுமந்திரன் வேறு தூதுவருக்கு சுட்டிக் காட்டி இருக்கின்றார். இப்படி இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவர்கள் இந்த வண்டியை ஓட்ட முடியும்?
‘இந்த நாடகத்தைப் பாருங்கள்’
இன்று மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இராஜங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்ஹ ஜனாதிபதியுடன் மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டு வருவதும் தெரிந்ததே. அவர் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு விடயத்தில் அதாவது சமஸ்டியா எவரும் வாய்திறக்கக் கூடாது நாம் ஒரு போதும் அதனை தரமாட்டோம் என்று பகிரங்கமாகவும் உறுதியாகவும் சில தினங்களுக்கு முன்னர் கூறி இருக்கின்றார்.
அதே போன்று வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பான யோசனையை ஜனாதிபதி பேசி வருகின்றார். இதனை மொட்டுக் கட்சியில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். இது தொடர்பாக மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் மஹிந்தானந்த ஜனாதிபதியைச் சந்தித்து இந்த பொலிஸ் காணி அதிகாரம் தொடர்பான அவரது கதைக்கு விளக்கத்தை நேரடியாகக் கேட்டிருக்கின்றார்.
அப்போது அதற்கு ஜனாதிபதி ரணில் இப்படி ஒரு பதிலைக் கொடுத்திருக்கின்றார். நாடாளுமன்றத்தில் இது முன்வைக்கப்படும். அப்போது அது தொடர்பாக நீங்கள் என்ன செய்வது என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். இதனை சமர்ப்பிப்பது மட்டும்தான் என்னுடைய வேலை. அமுல்படுத்துவதும், அமுல்படுத்தாமல் இருப்பதும் உங்களைப் பொருத்தது என்று மஹிந்த அலுத்கமயிடம் கூறி இருக்கின்றார்.
மேற்சொன்ன இரு தகவல்களையும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள் இது தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கில்லும் விளையாட்டு என்பது உங்களுக்குப் புரிய வேண்டும். எனவே ஜனாதிபதி இப்படி எல்லாம் நடந்து கொள்வதும் அவரது கையாட்கள் அவருக்கு மாற்றமாகப் பேசுவதும் எதைக் காட்டுகின்றது.
இந்தியாவுக்கு ஜனாதிபதி ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கத் தயாராக இருக்கின்றார் என்பதனைப் போல ஒரு படத்தைக் காட்சிப்படுத்தும் அதே நேரம், அதற்கு எதிராக வைக்க வேண்டிய ஆப்பையும் கையாட்களிடம் ரணில் கொடுத்துத்தான் வைத்திருக்கின்றார். எனவே ஜனாதிபதி இந்தியா விஜயத்தின் போது தமிழர்களுக்கு ஏதாவது கிடைக்குமா என்ற எமது விர்சனங்களுக்கு-கேள்விகளுக்குப் பதிலை நீங்களே இப்போது கண்டு கொள்ள முடியும்.
நன்றி: 16.07.2023 ஞாயிறு தினக்குரல்