-நஜீப் பின் கபூர்-
(நன்றி: 20.10.2024 ஞாயிறு தினக்குரல்)
நம்முடன் நெருக்க உறவு வைத்திருந்த ஒரு அரசியல் தலைவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சமூகத்துக்கு ஒரு கணக்குப் பாடம் கற்றுக் கொடுத்து அதில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரவுக்கு எந்த வகையிலும் வெற்றி வாய்ப்பும் கிடையாது இது பச்சைக் குழந்தைக்கும் தெரியும். ஒரு எளிமையான கணக்கு என்று மேடைகள் தோரும் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
மூன்று சத வீதம் தான் அவரது சூத்திரமாக இருந்தது. அதே ஆள் கருப்பை கதை ஒன்றையும் சொல்லி பின்னர் அதில் பல்டியும் அடித்திருந்தார்-மூக்குடைபட்டிருந்தார் என்பதனை நாம் இதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசி இருந்தோம். அது போல முட்டிக் குனிதல் மற்றும் முட்டிப் பார்த்தல் முடியாமல் போனால் கட்டிப்பிடித்தல் என்றும் ஒரு முறை நயவஞ்கர்களிடத்தில் காணப்படுகின்றது.
இதனை நாம் ஏன் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம் என்றால் நமது அரசியலும் இன்று அப்படி ஒரு பிரவேசம் எடுத்திருக்கின்றது. வன்முறையாக சாதிக்க முயன்று முடியாது போனால் நேசமாக நெருங்கி காரரியம் சாதிக்கின்ற சந்தர்ப்பவாதிகள் கூட்டத்தினரும் நமது அரசியலில் நிறையவே இருக்கின்றார்கள்.
இவர்கள் விடயத்தில் தற்போதய ஜனாதிபதியும் அவரது அரசியல் இயக்கமும் நல்லபுரிதலில் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் சராசரி மனிதர்களும் இவர்கள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது என்று நாம் நம்புகின்றோம். இப்போது ஜனாதிபதி அனுராவுடன் இணக்க அரசியலுக்கு கட்சிகள் பச்சைக் கொடி என்ற நமது தலைப்புப்பற்றிப் பார்ப்போம்.
நாம் முகப்பில் சொல்லி இருந்தது போலத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான ஏன் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் போல மூன்று வேண்டுமானால் ஆறு ஆகலாம் ஆறு வேண்டுமானால் பண்ணிரெண்டு ஆகலாம் அது ஒரு போதும் நற்பது ஐம்பதாக வாய்ப்பே கிடையாது என்பதுதான் அனுரவுக்கு எதிராக அரசியல்வாதிகள் மேடைகளில் உச்சரித்த மந்திரமாக இருந்தது.
ஆனால் நாம் துவக்கம் முதல் அடித்துச் சொல்லி வந்ததுபோல இந்த நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான வாக்களர்கள் என்பிபி. வேட்பாளர் அனுரவை ஜனாதிபதி கதிரையில் அமர்த்தி விட்டார்கள்.
அப்படித் தெளிவான ஒரு வெற்றியை அவருக்கு மக்கள் கொடுத்திருந்தாலும் அதில் நொந்து போன அதே கூட்டம் இந்த வெற்றியில் குறை கண்டு கொண்டு தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். எவருக்கும் விமர்சிக்கின்ற உரிமை இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அதில் வன்முறையும் வஞ்சகமும் கலந்திருந்தால் அதுபற்றி கண்டும் காணாமலும் இருப்பதும் நல்லதல்ல என்ற எமது நிலைப்பாட்டின் படி சில கேள்விகளை இங்கு எழுப்பலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதி அனுராவின் வெற்றி பெரும்பான்மை மக்களின் விருப்பம் அல்ல என்று ஒரு விமர்சனம் அரசியல் எதிரிகளினால் முன்வைக்கப்படுகின்றது. இலங்கை அரசியல் யாப்பில் படி அதற்கு சட்ட ரீதியில் அங்கிகாரம் இருக்கின்றது என்றால் கதை அத்தோடு முடிகின்றது என்பதனை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒட்டு மொத்த கூட்டல் கழித்தல் தரவுகளின் படி அனுரவுக்குப் பெரும்பான்மை இல்லை என்றால் நீங்கள் ஆதரிக்கின்ற தலைவர்கள் பெற்ற வாக்குகளுடன் இதே கணக்கை செய்து பார்த்தால் உங்களுக்கு யார்த்தம் புரியும்.
அடுத்த ஏறக்குறைய இருபது சதவீதமானவர்கள் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கணக்கையும் தமது வரவில் வைத்து சிலர் விளக்கம் கொடுக்கின்றனர். இது அவர்களின் மனதில் உள்ள வஞ்சகத்தையும் வலியின் தாக்கத்தையுமே காட்டுகின்றது. இந்த நாட்டில் மாட்டுமல்ல எந்த நாட்டிலும் கூட இப்படியான ஒரு எண்ணிக்கையான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விடுவது வழக்கம்.
சில ஐரோப்பிய நாடுகளில் வாக்களிப்பு வீதம் என்றும் சராசரியாக முப்பது நாற்பது என்று எண்ணிக்கையைத் தண்டுவது கிடையாது. ஆனால் அங்கு இப்படியான கீழ்தரமான விமர்சனங்களையும் கணக்குகளையும் எவரும் செய்வது கிடையாது. நமது நாட்டில் மட்டுமல்ல பொதுவாக என்பது சதவீத வாக்களிப்பு என்பது மிக உச்சகட்ட வாக்களிப்பு வீதமாகும்.
அடுத்து நமது நாட்டில் அதிகூடிய வாக்குவித்தியாசத்தில் 1994ல் ஜனாதிபதியான சந்திரிக்க தேர்தலில் நின்ற போதுகூட நூறுசதவீத வாக்கு இங்கு பதிவாகவில்லை என்பதும் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றும் ஏறக்குறைய முப்பது சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை.
அதே போன்று 1988 ரணசிங்ஹ பிரேமதாச தேர்தலில் நின்று வெற்றி பெற்ற போது அவர் பெற்ற வாக்குகள் ஐம்பத்து இரண்டு சதவீதம் (52) ஸ்ரீமா அம்மையார் பெற்ற வாக்கு நற்பத்து ஆறு சத வீதம் (46) அந்தத் தேர்தலில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்கள் நாற்பத்து நான்கு (44) சதவீதம் என்ற பெரும் எண்ணிக்கையாக இருந்தது.
அப்படியாக இருந்தால் ஆர்.பிரேமதாசவுக்கு எதிரான வாக்குகள் தொன்னூறு சதவீதம் (90) என்று எவராவது அன்று தர்க்கம் பண்ணி இருந்தார்களா என்று நாம் கேள்வி எழுப்ப விரும்புகின்றறோம்.
இதற்குப் பெயர்தான் குதர்க்கம். இது ஒரு வஞ்சகத்தனமான ஒரு வாதம் அல்லது புத்தி கூர்மை இழந்த மனிதர்களின் கணக்கு என்றுதான் இதனை நாம் கடும் வார்த்தைகளில் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கின்றது. இப்படியான வாதங்களை பாமர மக்கள் பேசினாலும் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அரசியல் தலைவர்களும் அரசியல் விமர்சகர்களும் என்று சொல்லிக் கொள்வோரும் பேசுவதுதான் நமக்கு ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது.
எப்படியோ நாம் முன்பு சொன்னது போல மூக்குடைபட்டவர்கள் அல்லது முட்டிக் குனிந்தோர். இப்போது அனுரவைக் கட்டிப்பிடிக்க வரும் கதைகளை பற்றி நேரடியாகப் பார்ப்போம். இதில் முதலாவதாக நாட்டில் இன்று இரண்டாவது பெரும் கட்சியாக இருக்கும் சஜித்தின் அணியின் நிலைப்பாட்டைப் பார்ப்போம். தனிப்பட்ட ரீதியில் சமகால அரசியலில் சஜித் நிலை மிகவும் பரிதபமாக இருக்கின்றது.
அவரது ஆளுமையில் இருக்கும் பலயீனங்கள் காரணமாக அவரை பலர் பிழையான வழிகளில் கூட்டிச் சென்று தடுக்கி விழவைக்கின்றார்கள். அவரது கட்சிக்காரர்களில் பலர் தமது பெயர் வேட்பு மனுவில் இருந்தாலும் தாம் இந்த முறை தேர்தலில் வாக்குக் கேட்க விரும்பவில்லை என்று பகிரங்கமாக தேர்தலில் இருந்து ஒதுங்கி வருகின்றார்கள். இதற்கு கட்சிக்குள் நடக்கின்ற வெட்டுக்குத்துக்கள்தான் காரணம்.
இன்னும் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலைவர் சஜித்தை கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகின்றார்கள். இந்த அணியில் இருக்கின்ற பல தலைவர்கள் தேர்தலுக்குப் பின்னர் தாம் அனுரவுடன் இணக்க அரசியலுக்குத் தயாரக இருப்தை மேடைகளில் பகிரங்கமாகப் பேசியும் வருகின்றார்கள். இதில் மனோ திகா ஹிஸ்புல்லாஹ் ரிசாட் போன்ற முக்கிய தலைவர்கள் பகிரங்கமாகவும் நேரடியாகவும் இப்போது அனுரவை புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது ஏன் என்று புரிந்து கொள்ளக் கூடியதே.
அத்துடன் கடுமையாக அனுரவை எதிர்த்து மேடைகளில் பேசி சுஜிவ ஹிருணிகா போன்றவர்கள் அனுரவிடம் மன்னிப்புக் கோட்டு ஊடகச் சந்திப்புக்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் ஹக்கீம் திஸ்ஸ போன்றவர்கள் சஜித்துக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கின்றது என்று கதை சொல்லி மீண்டும் ஒரு முறை குடி மக்களை ஏமாற்ற முயன்று கொண்டிருக்கின்றார்கள். எப்படி இருந்தாலும் அனுர ஜனாதிபதியுடன் தாம் இணக்க அரசியலுக்குத் தயார் என்பது சஜித் அணியின் நிலைப்பாடாக இருக்கின்றது.
ஜனாதிபத் தேர்தலில் ஒரு கோடி வாக்குகளைப் பெறுவதாக கதை விட்ட ரணில் தரப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாம் நிலைக்கு வந்திருக்கின்றார்கள். அந்த அணியில் இருந்த பலர் தமக்கு வேட்பு மனுக்கிடைக்காத காரணத்தால் பல இடங்களில் சுயேட்சைகளாக களத்தில் குதித்திருக்கின்றார்கள்.
குறிப்பாக இது மொட்டு மற்றும் யானைகளுக்கிடையிலாக லடாயாக இருக்கின்றது. அவர்களும் கூட ஜனாதிபதி அனுராவுடன் இணக்கிப் போக தயாராக இருக்கின்றார்கள். அனுரவை கடுமையாக விமர்சித்து வந்த ராஜித் இப்போது இந்த நாட்டில் இருக்கின்ற மிகச் சிறந்த அரசியல் செயல்பாட்டுக்காரரும் நல்ல தலைவரும் அனுரதான் என்று சன்றிதழ் கொடுத்திருக்கின்றார்கள்.
வடக்குக் கிழக்கில் ஜனாதிபதி அனுரவின் நிலை பற்றி நாம் பிரிதொரு இடத்தில் சொல்லி இருப்பதால் இங்கு சுருக்கமாக அது பற்றிப் பார்ப்போம். இதுவரை கொழும்புத் தலைவர்களுடன் நெருக்க உறவுகளை வைத்துக் கொண்டு இருந்தவர் அமைச்சர் டக்லஸ் சம்மந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் தான்.
ஆனால் இப்போது சிறீதரன் கூட ஜனாதிபதியை அண்மையில் சந்தித்து அவருக்கு தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்திருப்பதுடன் இணக்க அரசியலுக்கு தான் தயார் என்றும் நேரடியாக அவருக்கு வாக்குறுதியும் வழங்கிவிட்டு வந்திருக்கின்றார். இதே நிலைப்பாட்டில்தான் வடக்குக் கிழக்கில் இருக்கின்ற ஏனைய அனைத்து அரசியல்வாதிகளும் இருக்கின்றார்கள்.
இவை அனைத்தையும் தவிர இன்று நாட்டில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் நாம் சில்லறைகள் என்றுதான் இந்தப் பொதுத் தேர்தலில் பார்க்கின்றோம். அங்கு என்ன நடக்கின்றது என்று இப்போது பார்ப்போம். சுதந்திரக் கட்சி இன்று குரங்கு நிறுத்த அப்பத்தின் நிலையில் இருக்கின்றது. தலைவர் மைத்திரியின் அவல நிலை ஒரு பக்கம்.
மூத்த தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த நிமல் சுசில் விதுர தயாசிரி டலஸ் போன்றவாகள்; எங்கெல்லாம் சந்தியில் நின்று கொண்டிருக்கின்றார்கள் எப்பதனை சற்றுப் பாருங்கள். சம்பிரதாய இடதுசாரிகள் இதுவரை நமது அரசியலில் காட்சிப் பெருட்களாக இருந்தனர். தேசிய பட்டியலில்தான் அவர்கள் அனேகமாக நாடாளுமன்றம் பிரவேசித்திருந்தனர். இன்று அவர்கள் அரசியல் அங்கில் இருந்தது முற்றாகக் காணாமல் போய் இருக்கின்றார்கள்.
சிங்கள இனத்தின் பெரும் வீரர்களாக தம்மைக் காட்டிக் கொண்ட ஞானம் அதுருலியே சம்பிக்க விமல் போன்றவர்களின் அவல நிலை இந்த நாட்டில் இருக்கின்ற இனவாதிகளுக்கு நல்லதொரு படிப்பிணையும் தண்டனையுமாகவும் அமைந்திருக்கின்றன. இது தவிர வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் பெரும் எண்ணிக்கைளான அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பொதுத் தேர்தலில் நிற்க்கின்றன.
இதனாhல் பெரும் எண்ணிக்கையான வாக்குகள் சிதறடிக்கப்படுகின்ற ஒரு நிலையும் தேர்தல் களத்தில் தென்படுகின்றன. ஆனால் ஒட்டு மொத்தமாக அனைவரும் போல ஜனாதிபதி அனுரவுடன் இணக்க அரசியலுக்கு இன்று பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
வருகின்ற பொதுத் தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான அணி நூற்று முப்பது (130) வரையிலான ஆசனங்களுடன் தனிப் பெரும்பான்மையை எட்டக் கூடும். அவர் எடுக்கின்ற ஆரோக்கியமான திட்டங்களுக்கு தமது ஆதரவை வழங்குவதற்கும் இப்போதே எதிரணியில் இருக்கின்ற பெரும் எண்ணிக்கையானோர் முன்டியடிப்பதால் அவருக்கு பிரதான விடயங்களில் தீர்மானம் எடுப்பதில் மூன்றில் இரண்டு ஒரு பிரச்சினையாக இருக்கப் போவதில்லை என்பது நமது கணக்கு.
தேர்தல் முடிந்ததும் கூட்டணிகள் சின்னாபின்னமாகும் என்பதனை நாம் முன்கூட்டியே சொல்லி வைக்கின்றோம். ஆற்றைக் கடக்கும் வரைதான் இந்த அண்ணன் தம்பி உறவு. இதற்கு முன்னரும் இந்தக் காட்சியை நாம் பலமுறை பார்த்திருக்கின்றோம்.
இப்படிப் பச்சைக் கொடி காட்டுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தர்ப்பவாதிகள் நயவஞ்சக அரசியல் செயல்பாட்டுக்காரர்கள் என்பதனை ஜனாதிபதியும் இந்த நாட்டில் இருக்கின்ற பொதுமக்களும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் மீண்டும் ஒரு முறை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.