(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சில பிரதிவாதிகளுக்கு, சிறைச்சாலைக்குள் புனித அல் குர்ஆனை பயன்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக நீதிமன்றில் முறையிடப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு வந்த போதே இந்த விடயம் விசேட ட்ரயல் அட்பார் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. பிரதிவாதிகள் இருவரின் சட்டத்தரணிகள் இதனை நீதிமன்றில் தெரிவித்தனர்.
அத்துடன் ஏற்கனவே பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகைகளின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகள் தயாராக இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக சட்டமா அதிபர் சார்பில் விசேட ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர இதனை நீதிமன்றுக்கு தெரிவித்தார்.
இந் நிலையில் 25 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் மார்ச் 3 ஆம் ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
16 பிரதிவாதிகளுக்கு மட்டும் சட்டத்தரணிகள் ஆஜர் :
மன்றில் இவ்வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது, தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த, பிரதிவாதிகளுக்கான அரசாங்க செலவில் சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தினார்.
இதன்போது 25 பேரில் 9 பேருக்கு சட்டத்தரணிகளின் பிரசன்னமாகியிருக்கவில்லை.
மன்றில் 7,8,11,12,17,18,19,20,21 ஆம் பிரதிவாதிகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் ஆஜரானார். 9 ஆம் பிரதிவாதிக்காக சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைனும், 13 ஆவது பிரதிவாதிக்காக சட்டத்தரணி ஜி.கே. கருனாசேகரவும், 22,23,24 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணி விஜித்தாநந்த மடவலகமவும், 25 ஆவது பிரதிவாதிக்காக சட்டத்தரணி சுரங்க பெரேராவும் ஆஜராகினர். 3 ஆம் பிரதிவாதி மில்ஹானுக்காகவும் நேற்று சட்டத்தரணி ஒருவர் பிரசன்னமானார்.
மன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் தரப்பு:
இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்வன டி சில்வா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும் சட்டத்தரணிகள் இருவரைக் கொண்ட குழாம் பிரசன்னமாவதாக அறிவிக்கப்பட்டது.
சட்டத்தரணிகள் இல்லை:
இந் நிலையில் பிரதான பிரதிவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட நௌபர் மௌலவி உள்ளிட்ட 9 பேர் சார்பில் சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருக்கவில்லை. சட்டத்தரணிகள் ஆஜராகாத பிரதிவாதிகள் அனைவருக்கும் அரசின் செலவில் சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பில் விருப்பமா எனவும் இல்லையேல் கட்டணம் செலுத்தி சட்டத்தரணிகளை நியமிக்க சந்தர்ப்பம் வேண்டுமா எனவும் தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த நீதிமன்ற உரை பெயர்ப்பாளரின் ஊடாக பிரதிவாதிகளிடம் கடந்த தவணையின் போது (2021 ஒக்டோபர் 4) வினவியிருந்தார்.
இதன்போது பிரதிவாதிகள் ஒவ்வொருவராக, தமக்கு தமிழ் தெரிந்த சட்டத்தரணி ஒருவரை அரசாங்க செலவில் நியமிக்குமாறு கோரியிருந்தனர்.
சட்டத்தரணிகள் சங்கம் பட்டியல் கையளிப்பு:
இதனையடுத்து, பிரதிவதிகள் சார்பில் ஆஜராவதற்காக தமிழ் தெரிந்த சட்டத்தரணிகளின் பட்டியலொன்றினை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸுக்கு, நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி அறிவித்திருந்தது.
இந் நிலையில் நேற்று அச்சங்கம் குறித்த பட்டியலை வழக்கை நெறிப்படுத்தும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தரவுக்கு கையளித்திருந்தது.,
அதன்படி முதல் பிரதிவாதி நௌபர் மௌலவி மற்றும் 10 ஆவது பிரதிவாதிக்கு சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் அரச செலவில் நியமிக்கப்பட்டுள்ளார். 2,14 ஆம் பிரதிவாதிகளுக்காக சட்டத்தரணி ரிஸ்வான் ஹுசைனும், 4,15 ஆம் பிரதிவாதிகளுக்கு சட்டத்தரணி அசார் முஸ்தபாவும், 5,16 ஆம் பிரதிவாதிகளுக்கு சட்டத்தரணி இம்தியாஸ் வஹாபும், 6 ஆம் பிரதிவாதிக்கு சட்டத்தரணி சச்சினி விக்ரமசிங்கவும் அரச செலவில் சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டனர்.
குற்றப் பத்திரிகை மொழி பெயர்ப்பு :
இந் நிலையில், முழுமையாக சிங்கள மொழியில் இருந்த குற்றப் பத்திரிகை தொடர்பிலும் தலைமை நீதிபதி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி பிரதிவாதிகளிடம் வினவியிருந்தார்.
அதன்போது, 7 பிரதிவாதிகளைத் தவிர ஏனைய 17 பிரதிவாதிகளில் 16 பேர் தமக்கு குற்றப் பத்திரிகை தமிழில் வேண்டும் எனவும் 25 ஆவது பிரதிவாதியான மொஹம்மட் அக்ரம் அஹக்கம் தமக்கு ஆங்கில மொழியில் குற்றப் பத்திரிகை வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இதனையடுத்து பிரதிவாதிகள் கோரும் குற்றப் பத்திரிகையின் தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்களை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சட்ட மா அதிபர் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் நேற்றும் அந்த மொழி பெயர்ப்புகள் வழங்கப்படவில்லை.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா கோரிய கால அவகாசம் :
இது தொடர்பில் மன்றுக்கு தெளிவுபடுத்திய, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மொழி பெயர்ப்பு அச்சுப் பணிகளுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என அறிவித்தார். அடுத்த தவணையில் அவற்றை வழங்க முயற்சிப்பதாகவும் அதற்குப் முன்பதாக கிடைக்கப் பெற்றால் இடையீட்டு மனு ஊடாக அதனை மன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
9, 23 ஆம் பிரதிவாதிகளின் முறைப்பாடு :
இதன்போது 9 ஆவது பிரதிவாதிக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன், தனது சேவை பெறுநருக்கு சிறையில் குர்ஆன் பிரதியை வைத்திருக்க சிறைச்சாலைகள் அதிகாரிகள் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் புனித குர்ஆன் பிரதியை வைத்திருக்க தடை இல்லை எனவும், அவ்வாறிருக்கையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும், அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்ட உரிமையை மீற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
23 ஆவது பிரதிவாதிக்காக ஆஜரான சட்டத்தரணி மடவலவும், தனது சேவை பெறுநருக்கும் பூசா சிறையில் குர்ஆன் பிரதியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்தும் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறும் கோரினார்.
இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் பொதுவான உத்தரவைப் பிறப்பித்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்துக்கு அமைய, புனித அல் குர் ஆன் பிரதியை வைத்திருப்பது தொடர்பில் அனுமதியளிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டது.