இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் நோக்குடன் கொழும்பு நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கில் மக்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர். இந்த நிலையில், போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர்.
அங்குள்ள பிரதான அறைகள், நீச்சல் குளம் என எல்லா முக்கிய இடங்களுக்கும் போராட்டக்காரர்கள் சென்றனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பொறுப்பு என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு மற்றும் பல முக்கிய நகர்ப்புற பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை காவல்துறை அமல்படுத்தியது.
ஆனால் அத்தகைய நடவடிக்கை சட்ட விரோதம் என்று கூறிய சட்டத்தரணிகள் மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் ஆட்சேபித்தனர். இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் அந்த ஊடரங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
நகரின் பல இடங்களில் கலவரத் தடுப்பு போலீஸாரும் ராணுவத்தினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் ஜனாதிபதியின் அலுவல்பூர்வ இல்லத்தை இணைக்கும் எல்லா சந்திப்புகளையும் போலீஸார் தடுப்புகளைக் கொண்டு அடைத்துள்ளனர்.