–நஜீப்–
ஜனாதிபதி கோட்டா அழைப்பை ஏற்று சஜித் பிரதமர் பதவி ஏற்க வாய்ப்பு என்று ஒரு செய்தி வருகின்றது. அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மையை நாம் இன்னும் உறுதி செய்து கொள்ளவில்லை. அப்படி நடந்தால் அது சஜித்தின் அரசியல் தற்கொலை என்றுதான் நாம் பார்க்கின்றோம்.
கோட்டா பதவி விலகி பின்னர் அவர் பிரதமராக பதவி ஏற்க்கின்றார் என்றால் அதில் ஏதோ நியாயம் காணலாம். ஆனாலும் அந்தப் பிரதமர் பதவியும் நிலைக்காது. இது பற்றி செய்தியை இப்போது பார்ப்போம்:-
இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் மீண்டும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடத்தி சஜித் ஆலோசனை பெற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்வாராயின், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முன்வைத்த 13 அம்ச ஆலோசனைக் கோவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தை நடை முறைப்படுத்த அரசாங்கத்துடன் பேச இணக்கம் காணப்பட்டுள்ளது.
மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்ப்பித்த ஆலோசனை வழங்கியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது, தற்போதைய தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கான அடிப்படைத் தேவையாகக் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.