கெஜ்ரிவாலை சிறையிலேயே கொல்ல சதி : ஆம் ஆத்மி

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின், மருத்துவ ஆலோசனைகள் மறுக்கப்படுவதன் வாயிலாக, அவரை மெல்ல மெல்ல கொல்ல சதி நடக்கிறது’ என, ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, வரும் 27 வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு வீட்டில் சமைத்த உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து ஜாமின் பெறும் வகையில், உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்க, கெஜ்ரிவால் இனிப்புகள் மற்றும் மாம்பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதாக சமீபத்தில் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

Latest Tamil News

இந்த குற்றச்சாட்டை அவரது ஆம் ஆத்மி கட்சி மறுத்தது. இந்நிலையில், சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டு, அங்கேயே அவரை மெல்ல மெல்ல கொல்ல சதி நடப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரம் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:கெஜ்ரிவால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ‘டைப்-2’ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளர்.சிறையில் அவருக்கு இன்சுலின் வழங்குமாறும், குடும்ப மருத்துவரிடம் ‘வீடியோ கான்பரன்சிங்’ வாயிலாக ஆலோசனை கேட்க அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதன் வாயிலாக, சிறையிலேயே அவரை மெல்ல மெல்ல கொல்ல சதி நடக்கிறது. இந்த விவகாரத்தில் திஹார் சிறை நிர்வாகம், பா.ஜ., மற்றும் மத்திய அரசின் பங்கு உள்ளது. நீரிழிவு நோயால், கெஜ்ரிவாலின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம்அடைந்து வருகிறது.

உடலில் சர்க்கரை அளவை பரிசோதிக்க இயந்திரத்தை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சிறை நிர்வாகம் அதை மறுக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் வெளியே வரும் போது, சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் பாகங்களுக்காகவே அவர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Previous Story

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறதா இரான்? 

Next Story

வாராந்த அரசியல் (21.04.2024)