காஸாவில் உள்ள ஹமாஸ் குழுவைக் குறிவைத்துத் தனது தரைப்படை தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.காஸாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியதால், அங்கு பெரிய குண்டுவெடிப்புகள் காணப்பட்டன.
ஆனால், இது எதிர்பார்கப்பட்ட தரைவழிப் படையெடுப்பா என்பதைத் தெளிவுபடுத்த மறுத்துவிட்டது.அதேவேளை காஸாவில் இணைய மற்றும் தகவல் தொலைதொடர்பு சேவைகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (சனிக்கிழமை, அக்டோபர் 28) அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கின.
இஸ்ரேலிய ராணுவம், காஸாவில் தனது நடவடிக்கைகளை ‘விரிவாக்குவதாக’ கூறியிருக்கிறது. ஆனால் இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட காஸா மீதான தரைவழிப் படையெடுப்பு தாக்குதலின் தொடக்கமா என்பதைத் தெளிவுபடுத்த மறுத்துவிட்டது.
இந்நிலையில், காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. இதில் இந்தியா உட்பட 45 நாடுகள் பங்கேற்கவில்லை.
தரைவழிப் படையெடுப்பா என்பதை உறுதி செய்ய மறுப்பு
பிபிசியிடம் பேசிய இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எய்லோன் லேவி இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் எதிர்பார்க்கப்பட்ட தரைவழிப் படையெடுப்பா என்பதைக் கூற மறுத்துவிட்டார்.
லேவி, “காஸா பகுதியில் இஸ்ரேல் தரைவழிச் செயல்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதற்கு அப்பால், செயல்பாட்டு விஷயங்கள் பற்றி நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
அதேபோல், நியூ யார்க் டைம்ஸ் இதழிடம் பேசிய இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் மஜ் நிர் தினார் இஸ்ரேலின் சில துருப்புகள் காஸா பகுதிக்குள் நுழைந்ததை உறுதிப்படுத்தினார். ஆனால் இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தரைவழிப் படையெடுப்பின் தொடக்கமா என்று கூற மறுத்துவிட்டார்.
“எங்கள் துருப்புகள் மற்றும் டாங்கிகள் காஸா பகுதிக்குள் உள்ளன. அவர்கள் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்,” என்று தினார் கூறியிருக்கிறார். இதற்கு ஒருநாள் முன்னரும் இஸ்ரேலிய துருப்புகளும் டாங்கிகளும் காஸாவிற்குள் இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், ஹமாஸின் ராணுவப் பிரிவு, வடக்கு காஸாவின் இரண்டு பகுதிகளில் அதன் போராளிகள் இஸ்ரேலிய படைகளுடன் மோதலில் ஈடுபட்டதாக முன்னர் கூறியிருந்தது.
இணைய, தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம்
இந்நிலையில் காஸாவில் இணைய சேவைகளும் தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இது அங்கிருக்கும் சுமார் 23 லட்சம் மக்களிடையே பெரும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காஸாவில் இருக்கும் பொதுமக்களுக்கு உதவி வரும் மருத்துவ உதவி அமைப்புகள், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) அங்குள்ள இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகள் செயலிழந்ததால், களத்தில் உள்ள தங்கள் குழுக்களுடன் பேச முடியவில்லை என்று கூறுகின்றன.
தொலைத்தொடர்பு மொத்தமாக முடக்கப்பட்டிருப்பது ‘மிகப்பெரும் அட்டூழியங்களை’ மறைக்க உதவக்கூடும் என்று மனித உரிமை கண்காணிப்பகம் என்ற அரசு சாரா அமைப்பு எச்சரித்துள்ளது.
அந்த அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளரான டெபொரா பிரௌன், இந்தத் தகவல் இருட்டடிப்பு ‘பெருமளவிலான மனித உரிமை அட்டூழியங்களை மறைக்கவும், மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை கிடைக்காமல் தப்பிக்க வைக்கவும் உதவும்,” என்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், இது காஸா பகுதி மக்களை உலகத்தோடு இணைக்கும் முக்கியமான வழியை அடைத்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
‘மத்தியக் கிழக்கு முழுவதும் பெரும் விளைவுகள் ஏற்படலாம்’
இந்நிலையில், தாக்குதல் மேலும் வலுவடைந்தால், அதன் விளைவுகள் மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதும் எதிரொலிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜெருசலேமில் இருக்கும் பிபிசியின் ராஜ்ஜீய செய்தியாளர் பால் ஆடம்ஸ், மேற்கத்திய ராஜதந்திரிகள் இஸ்ரேலிடம் ஒரே மூச்சில் காஸா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என்றார்.
ஏனெனில், ‘லெபனானில் உள்ள ஹெஸ்புலா, இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஷியா போராளிகள், மற்றும் ஏமனில் உள்ள ஹுத்திகள் போன்ற பிராந்திய வீரர்களின் இந்த மோதலில் நுழையாமல் இருப்பதறகாக இந்த அறிவுரை வழங்கப்பட்டது,’ என்கிறார் அவர்.
மாறாக, தாக்குதலை படிப்படியாக அதிகரிக்குமாறு அவர்கள் இஸ்ரேலை வலியுறுத்துகிறார்கள் என்கிறார் அவர்.
“மோதல் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் மத்திய கிழக்கு முழுவதும் தென்படுகின்றன,” என்கிறார் அவர்.
மேலும், “இஸ்ரேலும் ஹெஸ்புலாவும் தினமும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலும் அமெரிக்காவும் சமீப நாட்களில் சிரியாவில் இலக்குகளைத் தாக்கியுள்ளன. ஏமனில் இருந்து ஏவப்பட்டதாகக் கருதப்படும் ஏவுகணைகள், இரண்டு எகிப்திய செங்கடல் நகரங்களை வெள்ளிக்கிழமை தாக்கின. அவை நிச்சயமாக இஸ்ரேலை இலக்காகக் கொண்டிருந்தன,” என்கிறார்.
ஆனால், இஸ்ரேல் இந்த அறிவுரைகளுக்கு செவிசாய்க்கும் மனநிலையில் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
காஸா மீதான ஐ.நா தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா!
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
காஸாவில் பொதுமக்களின் பாதுகாப்பு, அங்கு சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஆதரவாக இந்தத் தீர்மானம் அமைந்திருந்தது. ஆனால் இந்தியா இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தது.
காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. இதில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் பதிவாகின. 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்தியாவை தவிர, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இராக், இத்தாலி, ஸ்வீடன், யுக்ரேன், ஜிம்பாப்வே போன்ற நாடுகளும் இதில் பங்கேற்கவில்லை.
அரேபிய குழுவின் சார்பாக ஜோர்டானால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம் பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான அனைத்து வன்முறைச் செயல்களையும் கண்டித்தது.
இந்த வாக்கெடுப்பு சட்டப்பூர்வமாக இஸ்ரேலை பிணைக்காதபோதும் இதன் உலகளாவிய தன்மை காரணமாக தார்மீக எடையைக் கொண்டுள்ளது.
ஆனால் மறுபுறம், ‘ஹமாஸின் தீவிரவாத தாக்குதலைக்’ கண்டித்து கனடாவின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
எனினும், இந்த வரைவுத் தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் ஐ.நா பொதுச் சபையில் தோல்வியடைந்தது.