OBA
-ஜஹங்கீர்-
அரச நிருவனங்கள் திணைக்களங்கள் என்றால் அங்கே சட்டதிட்டங்கள் சுற்று நிருபங்கள் இருக்கும். அதன்படிதான் அங்கு நிருவாகங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும், அதனை மீறி நடந்தால் நிருவாக முதல்வர்கள் அதற்குப் பொறுப்புக் கூறக் கடமைப் பட்டிருக்கின்றார்கள் என்பது விதியாகும்.
சட்டம் மீறப்பட்டால் அது குற்றமாகின்றது. இது அனைவரும் அறிந்த விடயமாக இருந்தாலும் சில நிருவாகிகள்-ஊழியர்கள் தவறாக நடந்து தங்களது தொழில்களைப் பறிகொடுத்தது மட்டுமல்லாது கம்பி எண்ணவும் வந்திருப்பதை நாம் ஊடகங்களில் பார்த்திருக்கின்றோம்-கேட்டிருக்கின்றோம்.
இப்போது பாடசாலை நிருவாகங்களின் ஒழுங்கு முறை பற்றி நாம் பேச முனைகின்றோம். இதற்குக் காரணம் நாம் அறிந்த சில பாடசாலைகளில் காட்டுப் பஞ்சாயத்துப் பாணியில் கல்லூரி நிருவாகங்களை சிலர் நடாத்திக் கொண்டு செல்கின்றார்கள். அதற்குக் காரணம் நிருவாகிகளது அறியாமை-பலயீனம் அல்லது அவர்கள் நம்புகின்ற ‘சிலர்’ பலயீனமான அதிபர்களைத் தமது தேவைக்கு ஏற்றவாறு பாவித்து தங்கள் நினைக்கின்ற படி நிருவாகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும்.
பாடசாலை நிருவாகம் தொடர்பாக நூற்றுக் கணக்கான சுற்று நிருபங்களும் சட்ட விதிகளும் இருக்கின்றன. அவற்றை அதிபர்கள் கோவைப் படுத்தி முறையாக வைத்திருக்க வேண்டும். அவற்றை முறையாக வாசித்து விளங்கி நிருவாகங்களைச் செய்பவார்களாக இருந்தால் அவர்கள் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.
இப்போது சில இடங்களில் காட்டுப் பஞ்சாயத்துப் பாணியில் செயல்பட்டு வருகின்ற SDS-OBA க்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பேசலாம் என்று கருதுகின்றோம். அதற்காக நாம் பல சுற்று நிருபங்களை படித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்தும், தொடர்பு கொண்டும் பெற்றுக் கொண்ட முக்கியமான தகவல்கள்களை சுருக்கமாக எடுத்து இந்தக் கட்டுரையை வடிவமைக்க முனைகின்றோம்.
பழைய மாணவர் சங்கம்
27/1961
பழைய மாணவர் சங்கம் தொடர்பாக இன்று வரை பல சுற்று நிருபங்கள் வெளி வந்திருக்கின்றது. 1961/27 என்ற சுற்று நிருபம் 1961.11.20 வெளியிடப்பட்டிருக்கின்றது. அதில் பழைய மாணவர் சங்கங்கள் எப்படி அமைய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
1.பெயர்: பழைய மாணவர்கள் சங்கம்
2.அதன் நோக்கம்
3.அங்கத்துவம்
(அ)அந்தக் கல்லூரியில் கற்ற அனைத்து மாணவர்கள் மாணவிகள் அங்கத்துவம் பெறத் தகுதியுடையவர்கள். (சேர்வு இலக்கம், விடுகைப் பத்திரம் மூலம் இதனை உறுதி செய்த கொள்ள முடியும்.)
(ஆ)கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் முன்பு கற்பித்த ஆசிரியர்களும் விரும்பினால் அதில் அங்கத்துவம் பெறலாம்.
உதவிப் பணம்
(1) அங்கத்துவப் பணம்
(2) வருடாந்தக் கட்டணம்
(2)சங்கத்தின் விஷேட தேவைக்காக சேர்க்கப்படும் உதவித் தொகை
கூட்டம்
(1)முன்கூட்டி எழுத்து மூலமாக அறிவித்த பின்னர் வருடாந்தம் பொதுக் கூட்டம் நடாத்தப்பட வேண்டும்.
(2)அங்கத்தவர்களுக்கு முன் கூட்டி நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட வேண்டும்.
(3)அங்கத்தவர்கள் ஆலோசனைகளை முன் வைப்தானால் 7 நாட்களுக்கு முன்னர் இணைச் செயலாருக்கு கையளிக்க வேண்டும்.
(4)அங்கத்தவர்களில் 10 பேர் கையொப்பமிட்டுக் கேட்டுக் கொள்கின்ற போது 21 நாட்களுக்குள் செயலாளர் கூட்டத்தை கூட்ட வேண்டும். (கடிதத்தை கையளிக்கின்றவர்கள் அதில் காரணத்தை சொல்ல வேண்டும்)
நிருவாக சபை
(1)போசகர்கள் (எண்ணிக்கை குறிப்பிட்டப்படவில்லை என்றாலும் 1/3/5என அமையலாம்)
(2)பதவி வழியில் அதிபரே தலைவர்.
(3)உப தலைவர்கள் அங்கத்தவர்களில் இருந்து தெரிவாக வேண்டும். (எண்ணிக்கை குறிப்பிட்டப்பட வில்லை என்றாலும் 1முதல்3வரை அமையலாம்)
(4)செயலாளர் 1
(5)உதவிச் செயலாளர் அல்லது இணைச் செயலாளர் 1
(6)பொருலாளர் 1
(7)உதவி பொருலாளர் அல்லது இணைச் பொருலாளர் 1
(8)ஏனைய நிருவாக சபை உறுப்பினர் 5க்குக் குறையாமலும் 12க்கு மேற்படாமலும் அமைய வேண்டும்.
கணக்காய்வலர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அவரை அங்கத்துவரில் இருந்து தெரிவு செய்யலாம். நிருவாக சபையில் அவர் இருப்பது பெறுத்தமில்லை.
அதன் பின்னர் வெளிவந்த சுற்ற நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற தகவல்கள்
1/1 1995.06.02
கண்டிப்பாக பாடசாலை அதிபரே பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருக்க வேண்டும். இதுவரை அந்த நடைமுறை இல்லாத இடங்களில் இந்த விதி உடன் அமுலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று இந்த சுற்று நிருபம் கட்டளையிடுகின்றது.
அதன் படி அந்த சுற்று நிருபத்தில் பழைய மாணவ சங்கத்தின் பணக் கொடுக்கல் வாங்கள் விவகாரங்களுக்கு அதிபரே பொறுப்புக் கூற வேண்டும். காசோலை-கொடுக்கல் வாங்கள் விவகாரங்களுக்கு அதிபர் கண்டிப்பாக கையெழுத்துப் போட வேண்டும் என்றும் சுற்று நிருபம் வலியுறுத்தியுள்ளது.
2008/41 – 2008.11.03
இந்த சுற்று நிருபம் நிதி மோசடிகளை-சேகரிப்புக்களைச் செய்து பெற்றோரையும் மாணவர்களையும் தொல்லை கொடுப்பதை மையமாக வைத்தே வெளியிடப்பட்டதாக அதிகாரிகள் நமக்கு தகவல் தரும் போது குறிப்பிட்டார்கள்.
01.முன்சொன்ன சுற்று நிருபங்களுக்கு மேலதிகமாக இப்போது இந்த சுற்று நிருபத்தில் என்ன அடங்கி இருக்கின்றது என்று பார்ப்போம்.
02.பாடசாலைகளில் உள்ள பழைய மாணவ சங்கங்களினால் பல்வேறு வேலைத் திட்டங்களுக்காகவும் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் போதும் பாடசாலையில் கல்வி கற்கின்ற பிள்ளைகளிடமிருந்தும் பல்வேறு முறைகளில் பணம் சேர்க்கப்படுவதாக முறைப்பாடுகள் மூலம் தெரிய வந்திருக்கின்றன.
03.பழைய மாணவர் சங்கத்தின் மூலம் பாடசாலைக்குள்ளேயும் அதற்கு வெளியேயும் மாணவர்களைப் பாவித்து வேலைத் திட்டங்கள் தொடர்பாக பணமாகவோ பொருளாகவே பெற்றுக் கொள்வது உடனடியாக அமுக்கு வரும் வகையில் தடை செய்யப்படுகின்றது. அதே போன்று மாணவர்களிடமோ பெற்றோர்களிடமோ சேவைகள் என்ற அடிப்படையிலும் எதையும் பெற்றுக் கொள்வதும் இந்த சுற்று நிருபம் மூலம் தடை செய்யப்படுகின்றது. மேலும் வெளியார்கள் பாடசாலைக்கு வந்து மாணவர்களிடம் ஏதேனும் காரணங்களைச் சொல்லிப் பணம் சேகரிப்பதும் தடை செய்யப்படுகின்றது.
04.கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட விடயங்களுக்கு மட்டுமே பணம் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் பாடசாலையின் வேறு தேவைகளுக்காக பணம் சேகரிப்பதாக இருந்தால் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக மட்டுமே அது மேற்கொள்ள முடியும். அதுவும் கண்டிப்பாக சுற்று நிருபங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும். இது பற்றி ED/01/12/07/02/01 இலக்க 2018.06.22 சுற்று நிருபத்தில் தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்றது.
05.இதன் பின்னர் எதிர்வரும் காலங்களில் கல்லூரி அதிபர்களினால் இவ் ஒழுங்கு கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இதற்கு முரனாக அதிபர்கள் எவராவது செயலாற்றி இருந்தால் அந்த அதிபர்களே அதற்குப் பொறுப்பாளிகளாவார் என்று கண்டிப்பான வார்த்தைகளில் சொல்லி இருக்கின்றது அந்த சுற்று நிருபம்.
எனவே இந்த ஒழுங்கு விதி முறைகளில்தானா பாடசாலைகளில் நிதி வசூல்கள்-கொடுக்கல் வாங்கல்கள் நடந்திருக்கின்றது என்பதனை அதிபர்கள் பெற்றோர்கள். பழைய மாணவர்கள் (SDS-OBA) எண்ணிப் பார்க்க வேண்டும். அடுத்தவர்கள் சொன்னதற்காக செய்தேன் என்று சொல்லித் தப்பிக் கொள்ள சட்டத்திலோ சுற்று நிருபத்திலோ இடம் கிடையாது.
(தற்போது ஏதேனும் காரணங்களைச் சொல்லி பணம் சேகரிக்கப்படுமாக இருப்பின் அது பற்றிய SDS பொதுக் கூட்டத் தீர்மானம் அதற்கான அங்கிகாரம், அறிக்கைகள் என்பன பதிவில் இருக்க வேண்டும்.)
பாடசாலைத் தேவைகளுக்குப் பணம் தேவை என்றாலும் அதனை சேகரிப்பதற்கும் செலவு செய்வதற்கும் என ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிருவாகிகள் இவற்றை தெரிந்து வைத்திருப்பது பாதுகாப்பானது.
தேசிய பாடசலைகள் விவகாரம்
ED/01/06/01/01 2019/03
தேசிய பாடசாலைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த சுற்று நிருபப்படி அதிபரை தலைவராகக் கொண்டு இது வரை இயங்காத பழைய மாணவர் சங்கங்கள் சட்டரீதியற்ற பழைய சங்கங்கள் என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
அதிபர் அல்லாதவரைத் தலைவராக வைத்து இதுவரை இங்கி வந்த சங்கங்கள் சட்ட ரீதியற்ற சங்கம் என்று அமையும் போது அவற்றின் நிதி நடவடிக்கைள் பற்றி கேள்விகள் எழுகின்றன. அப்படி சங்கங்கள் வைத்து செயலாற்றி இருந்தால் அதிபர் அது பற்றி முறைப்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.
எனவே அதிபர் இங்கு சொல்லப்பட்ட சட்ட விதிகள்-சுற்று நிருபங்களின் படி வெளிப்படையான தன்மையுடன் தனது தலைமையில் சட்ட ரீதியான சங்கங்களை அமைத்து கல்விக் காரியாலயத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று தேசிய பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் சுற்று நிருபங்கள் (ED/01/06/01/01 2019/03) மூலம் அதிபர்கள் கேட்கப் பட்டிருக்கின்றார்கள்.
பாடசாலை அதிபர்களை ‘சிலர்’ பிழையாக வழி நடத்தி பெரும் நெருக்கடிகளிலும் ஆபத்துக்களிலும் மாட்டி விட்டிருக்கின்றார்கள் என்று நமக்குத் தெரிய வருகின்றது. பிரச்சனைகள் வந்ததும் நான் தலைவர் இல்லை உதவித் தலைவர் என்று சொல்லித் தப்பிக் கொள்ள முடியாது.
அப்படியானால் எந்தகக் கூட்டத்தில் அந்தத் தெரிவு நடந்தது. யார் தன்னைத் தெரிவு செய்தார்கள். அந்தக் கூட்டம் எப்போது எங்கு நடந்தது. பங்கு பற்றிய அங்கத்தவர்கள் யார். பிரேரித்து ஆமோதித்தவர்கள் யார். அந்தப் பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்கள் எத்தனை பேர். அந்தப் பட்டியல் கோவைகள். அவற்றின் அறிக்கைகள். கல்வித் திணைக்களத்துக்கு அது பற்றி அனுப்பி வைக்கப்பட்ட பதிவுகள் என்பன பற்றி கேள்விகள் வரும்.
“இல்லாத பதவிகளுக்கு கிரீடங்களை
மாட்டி மனிதனைக் கோமளியாக்காதீர்”
எனவே இதன் பின்னர் காட்டுப் பஞ்சயத்துக் கூட்டங்களை இரகசியமாகப் போட்டு இல்லாத பதவிகளுக்கு கிரீடங்களை தலையில் சூட்டி மனிதர்களை முறுங்கை மரத்தில் ஏற்றிக் கோமாளிகளாக்க வேண்டாம். மேலும் விவரம் தெரியாத நிருவாகிகளை பிழையாக வழி நடாத்தி அவர்களை ஆபத்தில் மாற்றி விடவும் வேண்டாம்.
முக்கிய குறிப்பு
நாம் இங்கு பதிந்திருக்கின்ற தகவல்களில் ஏதாவது தவறுகள் குறைபாடுகள் சுற்றுநிருபங்களில் இல்லாதவற்றைச் சொல்லி இருந்தால் அதனை சுட்டிக் காட்டி எமது ஈமேல் முகவரிக்கு ஆதாரத்துடன் அனுப்பினால் நாம் அதனை பிரசுரிக்கக் கடமைப்பற்றிருக்கின்றோம்.
அத்துடன் சட்டங்களையும் சுற்று நிருபங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது நிருவாகிகள் கடமை. எனக்குத் தெரியாது அவர்தான் பொறுப்பு இவர்தான் பொறுப்பு. நான் இருக்கவில்லை என்ற பதில்கள் சட்டத்தின் முன் ஏற்புடையதல்ல.
அரசு ஒரு சதக் காசுக்குக் கூட கணக்குக் கேட்கும் என்பதும் நிருவாகிகள் தெரிந்திருக்க வேண்டும். மில்லியன் பில்லியன் கணக்கு வழக்குகள் என்று அமையும் போது அதில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றது.
காட்டு பஞ்சாயத்துக்களுக்கு இதன் பின்னர் முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது அறிவுள்ள சமூகத்தின் பொறுப்பாகும். பெற்றோர்களையும் மாணவர்களையும் சட்டரீதியான முறையில் கையாள வேண்டி இருப்பதை நிருவாகிகள் புரிந்து கொள்ள வேண்டும். கேள்வி கேட்கும் உரிமையும் தகவல் அறியம் உரிமைகளும் குடிகளுக்கு இருக்கின்றது.