சும்மா இருந்த ஈரானை உசுப்பி விட்டுவிட்டு, தற்போது ஈரானுக்கு எதிராக எங்களுடன் இணையுங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

உலக நாடுகளை இணைந்து ஈரானை அழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலின் ஆராட் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்ட நெதன்யாகு, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரான் இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் ஒரு ஆபத்தான நாடு என்பதை கடந்த 48 மணி நேர நிகழ்வுகள் நிரூபித்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். ஈரான் தங்கள் நாட்டின் புனித தலங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஜெருசலேமில் உள்ள மூன்று முக்கிய மதங்களின் (யூதம், கிறித்தவம், இஸ்லாம்) புனிதத் தலங்களான மேற்குச் சுவர், திருக்கல்லறை தேவாலயம் மற்றும் அல்-அக்ஸா மசூதி ஆகியவற்றைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுமட்டுமல்லாது, ஈரான் வேண்டுமென்றே பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்கியிருப்பதாக நெதன்யாகு கூறியுள்ளார். ஆராட் மற்றும் டிமோனா இந்த இரு நகரங்களில் ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
“யாரும் கொல்லப்படவில்லை என்பது நமது அதிர்ஷ்டமே தவிர, ஈரானின் எண்ணம் அதுவல்ல. அவர்களின் நோக்கம் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதுதான்” என்று நெதன்யாகு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை போன்ற சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி வழித்தடங்களை மறித்து உலக நாடுகளை மிரட்டுவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கடுமையான நிலைப்பாட்டை நெதன்யாகு வரவேற்றுள்ளார்.
கசப்பான உண்மை: என்னதான் இஸ்ரேல் இப்படி சொன்னாலும், உண்மையில் இந்த போரில் இஸ்ரேல்தான் ஏராளமான மக்களை படுகொலை செய்திருக்கிறது.
இதுவரை ஈரானில் 1500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேலில் இந்த எண்ணிக்கை 200 என்கிற அளவில்தான் இருக்கிறது. மட்டுமல்லாது ஈரான் இந்த போரால் ஏராளமான பொருளாதார பாதிப்புகளை சந்தித்திருக்கிறது.



