ஈரானுக்கு திரும்ப கிடைக்க போகும் மிகப்பெரிய சொத்துக்கள்..

அமெரிக்கா சம்மதித்தது ஏன்?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பெரிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரானுக்கு எதிராக தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் நிலைகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

அதேநேரம் அமெரிக்காவிற்கு எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கேயே கைவைத்தது. ஹார்முஸ் ஜலசந்தியை மொத்தமாக மூடியது. இந்த பாதையில் எந்த நாட்டு கப்பலும் கடக்க முடியாத அளவிற்கு ஈரான் தேனீக்கள் போல் கன்னிவெடிகளை பதுக்கி வைத்துள்ளது.

அதனால் அந்த பாதையில் ஈரானை மீறி யாருமே செல்ல முடியாதபடி இருக்கிறது. இதனால் போரில் ஈரானை பணியவைக்க முயன்ற அமெரிக்கா, எப்படியாவது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தால் போதும் என்று பேச்சுவார்தைக்கு இறங்கி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்து வருகிறது.

இதில் அமெரிக்க துணை அதிபர் ஜேடிவான்ஸ் உள்பட் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாக கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பெரிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பேச்சுவார்த்தையில் அவர்கள் கொண்டுள்ள “தீவிரத்தன்மையை” காட்டுவதாக ஈரான் தரப்பு கருதுகிறது. இந்த சொத்துக்களை அமெரிக்கா சும்மா ஒன்றும் விடுவிக்கவில்லை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதோடு நேரடித் தொடர்புடையது என்று ஈரான் அதிகாரி கூறியுள்ளார்.

இது இஸ்லாமாபாத்தில் தொடரும் பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமான விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பொதுவெளியில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஈரான் தரப்பு மட்டுமே கருத்துக்களை தெரிவித்துள்ளது. அமெரிக்கா தரப்பு தெரிவித்தால் தான் உண்மை நிலவரம் தெரியும். ஈரானுக்கு பிரச்சனை வந்தது ஏன் ஈரான் தனது பொருளாதாரத் தடைகளை நீக்கக் கோரி, உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என்று மிரட்டியது.

இது சர்வதேச அளவில் ஈரான் மீதான நம்பிக்கையைக் குறைத்தது. பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கும்போது இத்தகைய மிரட்டல்கள் “ராஜதந்திர ரீதியான தவறு” என்று விமர்சிக்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் அளவை 60 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தியது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

“நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக, அழுத்தத்தை உருவாக்கும் உத்தியை” ஈரான் கையாண்டது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்தாவதற்கு முன்பே, கத்தார் போன்ற நாடுகளில் முடக்கப்பட்டுள்ள அனைத்துச் சொத்துக்களையும் (சுமார் 6 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை) விடுவிக்க வேண்டும் என்று ஈரான் பிடிவாதம் பிடித்தது.

“முதலில் பணம், பிறகு பேச்சு” என்ற ஈரானின் பிடிவாதமான நிலைப்பாடு பேச்சுவார்த்தையை நீண்ட காலம் இழுத்தடிக்கச் செய்திருந்தது.

பேச்சுவார்த்தை நடக்கும் வேளையிலேயே, மத்திய கிழக்கு நாடுகளில் (ஏமன், லெபனான் போன்றவை) உள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு அளிப்பது, அமெரிக்காவை ஒரு முழுமையான ஒப்பந்தத்திற்கு வரவிடாமல் தடுத்திருந்தது.

Previous Story

முறிவடையும் அபாயங்களுடன் ஈரான் அமெரிக்க பேச்சு ஆரம்பம்

Next Story

Hormuzல் நுழைந்தது US போர்க்கப்பல்