இலங்கை வந்த மகாராணியின் கோல்!

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் (Queen’s Baton) இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தது.

தேசிய ஒலிம்பிக் குழுவும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கமும் இந்த வரலாற்று முக்கியம்வாய்ந்த மகாராணிகோலை இம்முறை மலையக நகர்களுக்கு கொண்டு சென்று அதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விளக்கவுள்ளன.

இந்நிலையில் பொதுநலவாய அமைப்பு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் மகாராணியின் செய்தி தாங்கிய கோல், மாலைதீவுகளிலிருந்து இன்று முற்பகல் கட்டுநாயக்க விமானம் நிலையத்தை வந்தடைந்தது.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்ற சின்தன வித்தானகே, டினுஷா ஹன்சினி கோமஸ் ஆகியோரால் விமானத்திலிருந்து மகாராணி கோலை பொறுப்பெற்று கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள விசேட பிரமுகர்கள் மண்டபத்துக்கு கொண்டுவந்த நிலையில் அங்கிருந்து மகாராணி கோல் சுதந்திர சதுக்குத்துக்கு கொண்டுவரப்படும்.

அதேவேளை ‘பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு முன்னர் மகாராணியின் கோல் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 72 நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

இவ்வாறான நிலையில் அந்த கோல் இலங்கைக்கு வருகை தருவது மகத்தானதும் வரலாற்று முக்கியம்வாய்ந்ததுமாகும்.

இந்த நிலையில் இலங்கையில் மகாரணியின் கோலை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்’ என தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் இலங்கை பொதுநலாவாய விளையாட்டுத்துறை சங்கத் தலைவர் சுரேஷ் சுப்ரமணிம் தெரிவித்தார்.

ஒலிம்பிக் இல்லத்தில் அமைந்துள்ள பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்க அலுவலகத்துக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து இன்று பிற்பகல் பவனியாக கொண்டு செல்லப்படும் மகாராணி கோல், அதன் பின்னர் பிரித்தாணிய தூதரகம், பிரித்தானிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு கொண்டுசெல்லப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் மகாராணி கோல், நாளைய தினம் கண்டி நோக்கி கொண்டு செல்லப்படும். அங்கு பிரித்தானியரால் நிர்மாணிக்கப்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கம், ரனபிம றோயல் கல்லூரி ஆகியவற்றுக்கும் பின்னர் ஹந்தானையிலுள்ள இலங்கை தேயிலை நிறுவன நூதனசாலைக்கும் கொண்டு செல்லப்படும்.

ஜனவரி 5ஆம் திகதி புதன்கிழமை மகாராணி கோல், பொகவந்தலாவையிலுள்ள கேர்க்கஸ்வோல்ட் தோட்டத் தொழிற்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு கோலின் முக்கியத்தும் குறித்து தோட்ட அதிகாரிகளுக்கும் ஏனையவர்களுக்கும் விளக்கப்படும்.

அன்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சினால் பொறுப்பேற்கப்படும் மகாராணியார் கோல், வியாழனன்று பங்களாதேஷுக்கு அனுப்பிவைக்கப்படும். இதேவேளை மகாராணியார் கோல் 2014இல் கண்டிக்கும், 2018இல் காலிக்கும் வைஸ்ரோய் ரயில் வண்டி மூலம் ஊடகவியலாளர்கள் சகிதம் கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விiளாயட்டு விழாவுக்கான மகாராணி கோல் தொடர் ஓட்டம் பேர்மிங்ஹாம் மாளிகையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இரண்டாவது எலிஸபெத் மகாராணியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பராலிம்பிக் விளையாட்டு விழாவில் நான்கு தங்கம் பதக்கங்களை வென்றவரும் இங்கிலாந்து அணி மெய்வல்லுநருமான கதீசா கொக்ஸ் முதலாமவராக மகாராணி கோலை வைபவரீதியாக பொறுப்பேற்று தொடர் ஓட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.

இதுவரை 24 நாடுகளில் கொண்டுசெல்லப்பட்ட மகாராணி கோல் இன்று 25ஆவது நாடாக இலங்கை வந்தடைந்தது. பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 72 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 294 நாட்கள் பவணியாக கொண்டு செல்லப்படும் மகாராணி கோல், மொத்தம் 140,000 கிலோ மீற்றர்கள் பயணிக்கும்.

மேலும்  ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா, கடல்சூழ்நாடுகள் (ஓஷானியா), கரிபியன் தீவுகள், அமெரிக்காக்கள் ஆகிய கண்டங்களுக்கு கொண்டு செல்லப்படும் மகாராணி கோல், 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆரம்ப வைவத்தின்போது பேர்மிங்ஹாம் அரங்குக்கு ஜுலை 28ஆம் திகதி கொண்டு செல்லப்படும்.

அங்கு கோலிலுள்ள செய்தி  வெளியில் எடுக்கப்பட்டு 2ஆம் எலிஸபெத் மகாராணியில் வாசிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

வாசு இடதுசாரியா?

Next Story

சாதனைப் பெண் சசிந்தா