அல்-அக்ஸா மசூதிக்காக முட்டிக்கொள்ளும் முஸ்லிம்களும் யூதர்களும்: என்ன காரணம்?

ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி புதன்கிழமையன்று பட்டாசுகளின் ஒலி, துப்பாக்கிச் சூடு மற்றும் அலறல்களால் அதிர்ந்தது.இஸ்ரேலிய போலீசார் மசூதிக்குள் நுழைந்ததாகவும் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சில வீடியோக்களில், இஸ்ரேலிய போலீசார் பாலஸ்தீனியர்களை அடிப்பது தெரிகிறது.

சமீபத்திய வன்முறைக்குப் பிறகு மசூதிக்குள் நாற்காலிகள், தரை விரிப்புகள் சிதறிக் கிடப்பதை மற்றொரு வீடியோவில் பார்க்க முடிகிறது.

பாலஸ்தீன எதிர்ப்பாளர்கள் பட்டாசுகள், தடிகள் மற்றும் கற்களை ஏந்தியபடி மசூதிக்குள் தங்களைத் தாழிட்டுக் கொண்டதாக இஸ்ரேல் போலீசார் கூறுகின்றனர்.

இஸ்ரேலிய போலீசாரின் பலப்பிரயோகத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர். போலீசார் சிலரை கைகளைக் கட்டி வெளியே அழைத்துச் செல்வது வீடியோவில் தெரிகிறது.

இஸ்ரேலிய போலீசார் ஸ்டென் கையெறி குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர். இதன்போது காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒன்பது ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

ஐந்து ராக்கெட்டுகள் வழியில் அழிக்கப்பட்டன என்றும் நான்கு ராக்கெட்டுகள் திறந்த பகுதிகளில் செயலிழக்கச் செய்யப்பட்டன என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

இந்த மசூதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சை பழையதாக இருக்கலாம். ஆனால் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் தீவிர வலதுசாரி தலைவருமான இட்மர் பென் கிவிர் கடந்த ஜனவரி மாதம் மசூதி வளாகத்திற்குச் சென்றபோது அல்-அக்ஸா மசூதி தொடர்பான பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.

பெஞ்சமின் நேதன்யாகு பிரதமராக பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் இந்தப் பயணம் நடந்தது. இது பாலஸ்தீனிய நிர்வாகத்தால் “ஆத்திரமூட்டும் நடவடிக்கை” என்று அழைக்கப்பட்டது.

பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரம்

மோதலுக்குப் பிறகு அல் அக்ஸா மசூதிக்கு வெளியே நிற்கும் பாதுகாப்புப் படையினர்.

பதற்றம் அதிகரிக்க காரணம்

கடந்த காலங்களிலும் அல்-அக்ஸா மசூதி தொடர்பான சர்ச்சை காரணமாகவே பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையே பல மோதல்கள் தொடங்கியுள்ளன.

ரமலான் மாதம் நடைபெற்று வரும் இந்த வேளையில் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் ஏற்கெனவே பல மாதங்களாக பதற்றம் உச்சத்தில் உள்ளது.

இந்தப் புனித தலத்தில் இருந்து மிகவும் உணர்ச்சிகரமான நேரத்தில் புதிதாக வன்முறை வெடிப்பது தொடர்பாக, அதிகாரிகளும் தூதாண்மை துறையினரும் ஏற்கெனவே அச்சத்தில் இருந்தனர்.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை 1948இல் இருந்து 1967இல் நடந்த ஆறு நாள் போர் வரை ஜோர்டன் ஆட்சி செய்தது.இந்த போருக்குப் பிறகு இஸ்ரேல் இந்தப் பகுதியில் மேலாதிக்கத்தை நிறுவியது.

இருப்பினும், ஜோர்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின்கீழ், ஜெருசலேமின் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தலங்களைக் கண்காணிக்க ஜோர்டனுக்கு உரிமை கிடைத்தது.

கடந்த ஆண்டு மே மாதம், இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் நெஃப்தாலி பென்னட், அல்-அக்ஸா மசூதியின் நிர்வாகத்தில் வெளிநாட்டு தலையீட்டை நிராகரிப்பதாகக் கூறினார். இந்த அறிக்கைக்குப் பிறகு, ஜோர்டன் மற்றும் பாலஸ்தீனியர்கள் கோபமடைந்தனர்.

புனிதத் தலங்களில் உள்ள ‘பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமிக்கும்’ திட்டத்தின் ஒரு பகுதி இது என்று ஜோர்டன் அழைத்தது. தற்போது, ​​அதன் நிர்வாகப் பொறுப்பு ஜோர்டன் வக்ஃப் வாரியத்திடம் உள்ளது.

அல்-அக்ஸா மசூதி ஏன் மிகவும் முக்கியமானது?

பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரம்

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே சர்ச்சை ஏற்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டும் இங்கு பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மோதல் தொடங்கியது.

அல்-அக்ஸா மசூதி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

அல்-அக்ஸா மசூதி ஏன் இவ்வளவு முக்கியம்?

அல்-அக்ஸா மசூதி கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள யூதர்களின் புனிதமான இடம். மேலும் இது இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது.

யூதர்களால் ‘டெம்பிள் மவுண்ட்’ என்றும், முஸ்லிம்களால் ‘அல்-ஹராம் அல்-ஷரீஃப்’ என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் ‘அல்-அக்ஸா மசூதி’ மற்றும் ‘டோம் ஆஃப் தி ராக்’ ஆகியவை உள்ளன.

‘டோம் ஆஃப் தி ராக்’ கிற்கு யூத மதத்தில், அனைத்தையும்விட புனிதமான தலம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. முகமது நபியுடன் இணைந்திருப்பதால், இதை ஒரு புனித இடமாக முஸ்லிம்களும் கருதுகின்றனர்.

இந்த மத தலத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகம் ஜோர்டனின் வக்ஃப் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, பாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

நீண்ட காலமாக இங்கு முஸ்லிம்கள் மட்டுமே தொழுகை நடத்த முடியும். குறிப்பிட்ட நாட்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் இங்கு பிரார்த்தனை செய்ய முடியாது.

100 ஆண்டுகள் பழைமையான சர்ச்சை

முதல் உலகப் போரில் உஸ்மானியா சுல்தானின் தோல்விக்குப் பிறகு, மத்திய கிழக்கில் பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

சிறுபான்மை யூதர்களும் பெரும்பான்மை அரேபியர்களும் இந்த நிலத்தில் இருந்து வந்தனர்.

யூத மக்களுக்கு பாலஸ்தீனத்தை ‘நேஷனல் ஹோம்’ என்ற வகையில் நிறுவுமாறு சர்வதேச சமூகம் பிரிட்டனை பணித்தபோது இருவருக்கும் இடையே பதற்றம் தொடங்கியது.

யூதர்களை பொருத்தவரை இது அவர்களின் மூதாதையர் வாழ்ந்த பகுதி. அதே நேரத்தில் பாலஸ்தீன அரேபியர்களும் அந்தப் பகுதி தங்களுடையது என்று சொல்லி இந்த நடவடிக்கையை எதிர்த்தனர்.

1920 மற்றும் 1940க்கு இடையில் ஐரோப்பாவில் துன்புறுத்தல் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது இனப்படுகொலையில் இருந்து தப்பிய பின்னர் ஏராளமான யூதர்கள் ஒரு தாயகத்தைத் தேடி இங்கு வந்தடைந்தனர்.

இந்த நேரத்தில் அரேபியர்கள், யூதர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு இடையேயும் வன்முறை தொடங்கியது.

பாலஸ்தீன் - இஸ்ரேல் விவகாரம்

1948க்கு பிறகு நிலைமை

1947 இல் ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை யூதர்கள் மற்றும் அரேபியர்களின் தனி நாடுகளாகப் பிரிக்க வாக்களித்தது. மேலும் ஜெருசலேம் ஒரு சர்வதேச நகரமாக மாற்றப்பட்டது.

இந்தத் திட்டம் யூத தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரபு தரப்பு அதை நிராகரித்தது மற்றும் அது ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை.

பிரச்னையைத் தீர்க்க முடியாமல் 1948இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதாக அறிவித்தனர்.

இதற்கு பல பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போர் தொடங்கியது. அரபு நாடுகளின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வீடுகளில் இருந்து பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதை அவர்கள் அல்-நக்பா அதாவது ‘பேரழிவு’ என்று அழைத்தார்கள்.

பிற்காலத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நேரத்திற்குள் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.

ஜோர்டனால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மேற்குக் கரை என்றும் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் காஸா என்றும் அழைக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஜெருசலேமின் மேற்குப்பகுதி இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும் கிழக்குப்பகுதி ஜோர்டனிய பாதுகாப்புப் படைகளுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.

Previous Story

புதிய எல்லை நிர்ணயம் தெற்கில் இனச்சுத்திகரிப்பு உறுப்புரிமைக்கும் ஆப்பு!

Next Story

விஜேவீரவுடன் முஸ்தபா இணைவு!