-யூசுப் என் யூனுஸ்-
நிறையவே தலைப்புக்களில் நாம் அரசியலில் விவகாரங்கள் பற்றிப் பேசி வந்திருக்கின்றோம். இந்த முறை அரசியலில் தெரிகின்ற மங்களான காட்சிகள் அல்லது தெளிவற்ற விவகாரங்களை இந்தத் தலைப்பில் கதைக்க எதிர் பார்க்கின்றோம். அரசியல் யாப்பில் முன்னெடுக்க வேண்டிய விவகாரங்கள் தெளிவாக எழுத்து வடிவில் சொல்லப்பட்டிருந்தாலும் உச்ச அரச பதவியில் இருக்கின்ற தலைவர்களே அதற்கு வேட்டு வைக்கின்ற கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். சட்டம் நீதி என்னதான் சொல்லி இருந்தாலும் அது ஆள்ப்பார்த்துத்தான் தனது கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்றது.
இவ்வாறு உயர் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை அனைத்துத் துறைகளிலும் ஒரு தூய்மையற்ற கிறுக்கல் நிலை அரசியலிலும் நிருவாகத்திலும் காணப்படுகின்றது. இதனால் அரசாங்கத்தின் மீதும் நிருவாகத்தின் மீதும் மக்கள் மிகுந்த வெறுப்பிலும் விரக்த்தியிலும் இருக்கின்றார்கள். நாட்டில் பெரும்பான்மை மக்களின் விருப்பின் அடிப்படையில் தான் ஆட்சி அதிகாரத்தில் தலைவர்கள் பதவிகளில் அமர்வது வழக்கம். ஆனால் நமது நாட்டில் நாடாளுமன்றில் ஒரு ஆசனத்தையும் தேர்தலில் வெற்றி கொள்ள முடியாது ஒருவர் இன்று ஜனாதிபதி கதிரையில் அமர்த்தப்பட்டிருக்கின்றார்.
யாரைக் கள்வர்கள் என்று ராஜபக்ஸாக்கள் குற்றம் சட்டினார்களோ அப்படிச் சொன்னவர்களோ தமது பெரும்பான்மை நாடாளுமன்ற வாக்குகளை வைத்து குற்றம் சாட்டப்பட்ட அதே மனிதனை அதிகார கதிரையில் அமர்த்தி இன்று அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் யாப்பின்படி நடைபெற வேண்டிய தேர்தல்களை அரசு அதிகார வன்முறையால் தடுத்து விடுகின்றார்கள்.
நிதி அமைச்சு தேர்தல்களை நடாத்த எங்களுக்கு பணம் இல்லை என்று சொல்கின்றது. பொலிஸ் எமக்குத் தேர்தலுக்கு பாதுகாப்புக் கொடுக்க ஆளணி போதாது என்று முட்டுக் கட்டை போடுகின்றது. தேர்தல்களுக்கான காகிதாதிகளை தயாரிக்க வேண்டிய அச்சகத் திணைக்களமும் தனது இயலாமைகளைச் சொல்லி அந்தப் பணியில் இருந்து விலகி உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்து விட்டது.
தேர்தலை அறிவித்து விட்டு வேட்புமனுவைக் கூட பெற்று தேர்தலுக்கு நாளும் வேட்பாளர்களுக்கான இலக்கங்களும் குறித்த பின்னர் ஜனாதிபதி எங்கே தேர்தல் யார் சொன்னார்கள் அப்படி ஒன்று நாட்டில் இருக்கின்றதா என்று ஏலனமாக ஒரு முறை நாடாளுமன்றத்தில் கோட்டிருக்கின்றார். இந்த வார்த்தை சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதி மன்றத்தில் கூட சுட்டிக்கட்டப்பட்டது. பிரதமர் நீதியரசர் அரசியல் யாப்பில் சொல்லப்பட்ட தேர்தல்களை தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக தள்ளி வைக்கின்ற அதிகாரம் எவருக்கும் இல்லை என்று நீதி மன்றிலே வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார். இவற்றிலிருந்து நாட்டில் அப்பட்டமான ஒரு நிருவாக வன்முறை அரச அனுசரரையுடன் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ரணில் தேர்தலுக்கு வந்தால் அவருக்கு எதிராக எந்த ஒரு வேட்பாளரும் போட்டிக்கு வரக்கூடாது. அவர் களத்தில் தனிக் குதிரையாக ஓடி வெற்றி பெற அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கான வாய்ப்பு அவருக்கு கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் பகிரங்கமாகக் கூறி இருந்தார்கள். 2048 வரை அவருக்கு இப்படி வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.
பத்து வருடங்களுக்கு கொடுக்க வேண்டும், என்ற கதைகள் எல்லாம் கடந்து இப்போது அந்தக் கட்சியின் செயலாளர் ரங்கே பண்டார ஐந்து வருடங்கள், குறைந்து இரு வருடமாவது அவருக்கு இன்னும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிக்கின்றார்கள். இத்தனைக்கும் ரங்கே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. இது வேறு மக்களின் விருப்பு என்றும் அவர்களே கூறுகின்றார்கள். இப்படி உலகில் வேறு ஏதாவது நாடுகளில் நடந்திருக்கின்றதா?
ஆளும் தரப்பிலும் எதிரணியிலும் இருக்கின்றவர்களுக்கு கோடி கோடி பணத்தையும் சலுகைகளையும் கொடுத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி ரணிலுக்கு அதிகாரத்தைக் கொடுத்து மேலும் சில காலம் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளத்தான் இந்த ரங்கே பண்டார. வஜிர. நளின் திசாநாயக்க. சமன் ரத்தனப்ரிய போன்றவர்கள் இப்போது இறுதி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள.; இது அரசியல் யாப்புக்கு ஏற்புடையதா இல்லையா என்பதனைக்கூட அவர்கள் கருத்தில் கொள்ளத் தயாராக இல்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வன்முறையாக ஒத்திவைத்தது போல ஒரு முயற்சியைச் செய்து பார்க்கத்தான் இவர்கள் முயன்று கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு வினோதமான செயல்.
இந்த விடயத்தில் எமக்கு ஏதுமே தெரியாது இது ரணிலும் அவரது ஐதேக.வும் பார்க்கின்ற வேலை என்று ஆளும் மொட்டுக் கட்சியில் இருப்பவர்களும் குறிப்பாக ராஜபக்ஸாக்களும் பொது அரங்குகளில் எதிர்ப்புத் தெரிவிப்பது போல காட்டிக் கொண்டாலும், அவர்களும் மறைமுகமாக இவ்வாறான யாப்பு விரோத வன்முறைகளின் பின்னால் இருக்கின்றார்கள் என்றுதான் நமக்குத் தோன்றுகின்றது. இதற்கு நல்ல உதாரணம் சில வாரங்களுக்கு முன்னர் அரசு சொத்துக்களை தனியாருக்கு விற்பதற்கு தாம் எதிர்ப்பு என்று எழுத்து மூலமாகத் தனது கண்டனங்களை வெளியிட்டிருந்தார் மஹிந்த ராஜபக்ஸ. நாமல் ராஜபக்ஸா கூட இந்த்த தனியார் மயமாக்களுக்கு ஒரு பெரும் இடதுசாரித் தலைவர் போல எதிர்ப்பத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் நாடாளுமன்த்தில் நடந்த அரச பங்குகளை வெளி நாடுகளுக்கு -தனியார்களுக்கு கொடுக்கின்ற மின்சார மசோதாவுக்கு ஆதரவாக மொட்டுக் கட்சியினர் பேசியதுடன் வாக்களிப்பிலும் கைகளை உயர்த்தி தமது ஆதரவை வழங்கி இருக்கின்றார்கள். இது என்ன அரசியல் கலாச்சாரம்.? அத்துடன் நாமல் ராஜபக்ஸ மற்றும் மஹிந்த போன்றவர்கள் வாக்களிப்பு நடக்கின்ற இது போன்ற நேரங்களில் சபையில் இருந்துசபையில் இருந்து தலை மறைவாகி விடுவார்கள். இப்படித்தான் கடந்த காலங்களில் இவர்கள் செய்தும் வந்திருக்கின்றார்கள். இது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு அரசியல் நாடகம் அன்றி வேறு என்ன?
மஹிந்த ராஜபக்ஸ எழுத்து மூலம் தனது தனியார் மயமக்களுக்கு அல்லது சொத்துக்களை விற்க்கின்ற நடவடிக்கைகளுக்கு தமது எதிர்ப்புக்களை வெளியிட்டிருக்கின்ற இந்த நேரத்தில் அவர் எதிர்க்கின்ற ஒரு மசோதாவுக்கே மொட்டுக் கட்சியினர் ஆதரவாக வாக்களிக்கின்றார்கள் என்றால் அவர்கள் இப்போது ராஜபக்ஸாக்கள் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு ஜனாதிபதி ரணிலைத் திருப்திப்படுத்துகின்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அல்லது ரணிலும் ராஜபக்ஸாக்களும் மக்களை ஏமாற்றிக் கொண்டு காலங் கடத்துக்கின்றார்கள் என்றுதான் இந்த தெளிவில்லாத அரசியல் செயல்பாடுகளினால் நாம் அவதானிக்க முடியும்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டும் சர்வசன வாக்குரிமையும் இதற்கு நடத்த வேண்டும் என்றவர்கள், இப்போது ஒரு வருடங்கள் இருந்தால் போதும் என்று மைத்;திரி குனரத்தன என்று ஒரு சட்டத்தரணி கூறி இருப்பதுடன் அதற்கு சர்வசன வாக்குறிமையும் கூடத் தேவை இல்லை. இதற்கு வரலாற்றுப் பதிவுகளும் இருக்கின்றன என்று ஒரு நியாயத்தை முன் வைத்து மக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணி இருக்கின்றார்.
இந்த வார்த்தைகள் எல்லாம் எதனை சுட்டிக் காட்டுகின்றன என்று கேட்கத் தோன்றுகின்றது. அவர்கள் சொல்லி இருப்பது போல ஜனாதிபதியின் பதவி நீடிப்புக்கு ஏதாவது சலுகைகளைக் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். சர்வசன வாக்கொடுப்பில் இந்த விவகாரம் தோற்றுப் போனால் மீண்டும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுக்குப் போய்த்தானே ஆக வேண்டும்.?
அன்று தேர்தல்கள் நடத்த பணம் இல்லை என்றவர்கள் வீண் செலவில் ஒரு அனவசியத் சர்வசன கருத்துக் கணிப்புக்குப் போய் ஆயிரம் வரையிலான கோடிகளை செலவு செய்ய முனைவது எந்த வகையில் நியாயமாக அமைய முடியும். முன்பு ஒரு முறை ஜே.ஆர். ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் இருந்த நாட்களில் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தி தனது பதவிக் காலத்தை நீட்டிக் கொண்டார்.
கடைசியாக நாடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாத ஐக்கிய தேசியக் கட்சி இந்த கருத்துக் கணிப்பில் வெற்றி பெறும் என்று நம்புகின்றவர்களை நாட்டு மக்கள் என்னவென்று சொல்வார்கள்.இது நடக்கின்ற விடயமா? அதனால்தான் இப்போது சர்வஜன வாக்கெடுப்புக்கும் இவர்கள் அப்படிக்கின்றார்கள். அத்துடன் மீண்டும் உதயங்க வீரதுஙஹ போன்றவர்கள் பொதுத் தேர்தல்தான் முதலில் வருகின்றது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படி அரச சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கின்ற கோடிக் கணக்கான பணத்தை நாடாளுமன்ற உறுப்பனர்களின் வாக்குகளைப் பெற்றக் கொள்ள வழங்க முடியும். கடந்த காலங்களில் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. இப்படியாக நாட்டையும் அரச செயல்பாடுகளையும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களும் மொட்டுக் கட்சிக்காரர்களும் சேர்ந்துதான் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
தேர்தல் நெருக்கி வரும் போது அல்லது தேர்தல் நாட்களில் திட்டமிட்டு ஒரு வன்முறையை அல்லது மக்களைக் கொதிப்படையச் செய்கின்ற ஒரு வேலையை செய்து மீண்டும் நாட்டில் அமைதிக் கொண்டுவர வேண்டும் சமாதனத்தை உண்டு பண்ண வேண்டும் அதனால் இப்போதைக்கு எந்தத் தேர்தலும் சாத்தியமில்லை என்று ஒரு நிகழ்ச்சி நிரல் கூட அமுலுக்கு வர இடமிருக்கின்றது. இது தொடர்ப்பில் பல்வேறு மட்டங்களிலும் சமூக ஊடகங்களில் கருத்துப் பறிமாறல்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் உள்ள பல்வேறுபட்ட ஆபத்துக்களைப் பலர் புரிந்தும் வைத்திருக்கின்றார்கள்.
இப்படியாக நமது அரசியலில் இன்று தெளிவில்லாத-அல்லது கசடுபடிந்த பக்கங்கள் குவிந்து கிடக்கின்றன. இதனை சரி செய்ய வேண்டி அரச இயந்திரம் கூட இதில் கீறல்களை தினந்தோறும் உண்டு பண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆட்டுத் தோலுக்கு இடம் கொடுத்தது போல இப்போது மொட்டுக் கட்சியையே செயல்பட முடியாத அளவுக்கு ஜனாதிபதி ரணில் ஸ்தம்பிக்க வைத்திருக்கின்றார் என்று தெரிகின்றது.
இதுவும் ஒரு திட்டமிட்ட ஒரு ஏற்பாடோ தெரியாது? நமக்கு அதிகாரத்துக்கு வர முடியாத ஒரு நிலையில் நாட்டில் ஒரு குழப்பமான அல்லது கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையை வைத்து நாட்களை கடத்தும்கின்ற ஒரு முயற்ச்சியாகவும் இது இருக்கலாம். எப்படியானாலும் இந்த மாதம் நிறைவடைவதற்குள் தேர்தலோ அல்லது நாம் முன்பு சொன்ன அமைதியின்மையையோ நோக்கியே நாடு நகர இடமிருக்கின்றது. எல்லாத் தரப்பினரும் எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது.
நன்றி: 09.06.2024 ஞாயிறு தினக்குரல்