ஒரே நாளில் மாறிய நிலைமை
எதுவும் நிரந்தரமில்லை, நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக வங்கதேச அரசியல் சூழலையும், அங்கு ஏற்பட்டுள்ள கலவரத்தையும் கூறலாம். நேற்று வரை பிரதமர், இன்றோ உயிருக்கு பயந்து தமது சகோதரி ஷேக் ரேஹானாவுடன் நாட்டைவிட்டே ஓட்டம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஷேக் ஹசீனா.
லண்டனில் தஞ்சம்?
ஷேக் ஹசீனா லண்டனில் தஞ்சம் அடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இனி அரசியலுக்கு அவர் திரும்ப மாட்டார் என்று அவரது மகனும், ஹசீனாவின் அரசியல் ஆலோசகராக பணியாற்றியவருமான சஜீப் வசத் ஜோய் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
அதிருப்தி
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது; வங்கதேசத்தில் நிலவி வரும் சம்பவங்களினால் அவர் மிகவும் அதிருப்தியுடன் உள்ளார். நாட்டையே ஹசீனா தலைகீழாக மாற்றினார். அவர் வரும்போது, ஏழை நாடாக இருந்த வங்கதேசம் இப்போது வளரும் ஆசிய நாடுகளில் ஒன்றாக உள்ளது.
13 போலீசார் உயிரிழப்பு
கலவரத்தினால் நேற்றைய தினம் மட்டுமே 13 போலீசார் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் மக்களை கொல்லும் போது போலீசார் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? என்று கூறினார்.