“அமெரிக்கா- இஸ்ரேலை வீழ்த்திவிட்டோம்..”

விடிய விடிய கொண்டாடிய ஈரான் மக்கள்

அமெரிக்கா ஈரான் இடையேயான மோதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இரு வாரப் போர் நிறுத்தம் செய்ய இரு தரப்பும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கிடையே இந்த போர் நிறுத்த அறிவிப்பை ஈரான் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அமெரிக்கா, இஸ்ரேல் படைகளை ஈரான் வீழ்த்திவிட்டதாகச் சொல்லி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் போர் வெடித்தது. அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது. இந்த மோதலில் ஈரானின் சுப்ரீம் லீடராக இருந்த அலி கமேனி முதல் நாளே கொல்லப்பட்டார். இதனால் போர் சீக்கிரமே முடிவுக்கு வரும் என்றே பலரும் நினைத்தனர். ஈரான் தனது தாக்குதல்களை நிறுத்திவிட்டுச் சரணடையும் எனப் பலரும் எதிர்பார்த்தனர்.

Iran Middle east America

வளைகுடா மோதல்

ஆனால், ஈரான் விடாப்பிடியாகப் பதிலடி கொடுத்தது. மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், அமெரிக்க ராணுவ மையங்கள் மீதும் ஈரான் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் வளைகுடா முழுக்கவுமே பதற்றம் அதிகரித்தது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் முடக்கியதால் கச்சா எண்ணெய் விலை எக்குத்தப்பாக உயர்ந்தது. இந்தச் சூழலில் தான் இந்த மோதல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக முதலில் டிரம்ப் அறிவித்தார். முதற்கட்டாக இரு வாரங்கள் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும். அதற்குள் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை உறுதி செய்தது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படுவதாக அறிவித்தது.

போர் நிறுத்தம்

இந்த போர் நிறுத்த அறிவிப்பு ஈரானுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போரால் ஈரான் தான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்நாட்டில் இதுவரை 1,900-க்கும் மேற்பட்டோர் இந்த போரால் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் தங்கள் வாழ்விடங்களை விட்டும் வெளியேறி உள்ளனர். மேலும், போரால் ஈரானின் பொருளாதாரமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டம்

இந்தச் சூழலில் வெளியாகியுள்ள ஈரானின் போர் நிறுத்த அறிவிப்பு ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த போர் நிறுத்த அறிவிப்பை ஈரான் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈரான் நேரப்படி நள்ளிரவில் இந்த அறிவிப்பு வெளியான சூழலில், அந்நாட்டு மக்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்திலும் வேகமாகப் பரவி வருகிறது.

அமெரிக்காவை வீழ்த்திவிட்டோம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தோற்கடித்துவிட்டதாகச் சொல்லி அந்நாட்டு மக்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள். ஈரான் நாட்டின் தேசியக் கொடிகளோடு வீதிகளில் இறங்கியுள்ள ஈரான் மக்கள், தங்கள் நாடு இந்த போரில் வெற்றி பெற்றதாகச் சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Previous Story

போர் நிறுத்தம்: ட்ரம்புக்கு படுதோல்வி...!ஈரானுக்கு பெரும் வெற்றி...!

Next Story

ට්‍රම්ප් හදිසියේ වෙස් මාරු කරේ ඇයි?