கொரோனா காலகட்டத்தின்போது, பிரித்தானிய மகாராணியார் முதல் பொதுமக்கள் வரை பொதுமுடக்கம் என்ற பெயரில் அவரவர் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வீட்டிலோ தொடர்ச்சியாக மதுபான பார்ட்டிகள் நடந்தன. இந்த விடயம் புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகி நாட்டையே குலுங்க வைத்தது.
மேலும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு போரிஸ் ஜான்சன் பதவி உயர்வு அளித்த ஒரு விடயமும் பத்திரிகைகளில் வெளியாக, போரிஸ் ஜான்சனுக்கு கெட்ட நேரம் துவங்கியது எனலாம்.
அதைத் தொடர்ந்து சுகாதாரச் செயலர் சாஜித் ஜாவித் தான் ராஜினாமா செய்வதாக அறிவிக்க, ஒன்பதே நிமிடங்களுக்குப் பிறகு ரிஷி சுனக்கும் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து வரிசையாக ராஜினாமாக்கள், போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்யவேண்டிய ஒரு கட்டாயம்!
பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது போல, போரிஸ் ஜான்சனுடைய தவறுகள் அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைய, அவரது ஆதரவாளர்களோ, ரிஷி அவரது முதுகில் குத்திவிட்டார் என்ற தோரணையில் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் தொடர்ந்து முன்னணி வகித்துவந்த ரிஷி, இப்போது பின்தங்குவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிடத் துவங்கியுள்ளன.
ரிஷியே, கருத்துக்கணிப்புகள் நான் போட்டியில் பின் தங்குவதாக கூறியுள்ளது எனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான பென் வாலேஸ், வெளிப்படையாக, தான் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
லிஸ் உண்மையானவர் மற்றும் நேர்மையானவர் என்று கூறியுள்ள வாலேஸ், நான் கேபினட்டிலும், இருதரப்பு கூட்டங்கள் மற்றும் சர்வதேச உச்சி மாநாடுகளிலும் லிஸ் ட்ரஸ்ஸுடன் இருந்திருக்கிறேன், அவர் உறுதியானவர், உண்மையானவர், ஆகவேதான் அவருக்கு நான் ஆதரவளிக்கிறேன் என்று கூறியுள்ளதுடன், போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்வதற்கு காரணமாக இருந்ததாக ரிஷி மீது குற்றமும் சாட்டியுள்ளார்.
பென் வாலேஸ், லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவளித்துள்ளது, ரிஷிக்கு பிரதமர் தேர்தலில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மக்கள் நலனில் அக்கறை:ரிஷி சுனக் சறுக்கல்
பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டவர் லிஸ் டிரஸ் என சுமார் 40% கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளதால், ரிஷி சுனக் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
குறித்த கேள்விக்கு 18% கட்சி உறுப்பினர்கள் மட்டுமே ரிஷி சுனக் ஆதரவாக வாக்களித்துள்ளனர். தனியார் செய்தி ஊடகம் ஒன்று முன்னெடுத்த நேரலை விவாதம் மற்றும் கருத்துக்கணிப்பில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விவாதம் பாதியில் கைவிடப்பட, கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு, அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொதுமக்களின் பிரச்சனைகள் மீது அதிக அக்கறை கொண்டவர் லிஸ் டிரஸ் என 38% கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்துள்ளனர்.
ஆனால் 18% உறுப்பினர்கள் மட்டுமே ரிஷி சுனக்கை தெரிவு செய்துள்ளனர். மேலும் வரி குறைப்புக்கு ஆதரவாக 44% கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அரசாங்கம் மக்களுக்காக செலவிடும் தொகையை அதிகரிக்க வேண்டும் என 22% பேர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு கேள்வியாக பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு, பொதுமக்களில் 41% பேர்கள் ரிஷி சுனக் ஆதரவாகவும் 33% மக்கள் லிஸ் டிரஸ் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.
இதில் தொழிலாளர் கட்சி தலைவர் Sir Keir Starmer 38% ஆதரவுடன் இரண்டாவது இடத்தை கைப்பற்றினார். முன்னதாக எரிசக்தி கட்டணத்தின் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைப்பதாக ரிஷி சுனக் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதனால் பிரித்தானிய குடும்பங்கள் ஆண்டுக்கு 156 பவுண்டுகள் வரையில் சேமிக்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால் அரசாங்கத்திற்கு 4.3 பில்லியன் பவுண்டுகள் இதனால் இழப்பு ஏற்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.