இந்நிலையில், துருக்கி தலைமைத் தேர்தல் ஆணையர் அகமத் யீனெர் பத்திரிகையாளர் சந்திப்பில், “அதிபர் தேர்தலில் தற்போதைய நிலையில் யாரும் ஆட்சி அமைக்க தேவையான வாக்குகள் சதவீதத்தை பெறவில்லை. அதிபர் எர்டோகன் 49.51% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கிலிச்டாரோலு 44.88% வாக்குகள் பெற்றுள்ளார். 3வது அணியை சேர்ந்த சினான் ஓகன் 5.17% வாக்குகள் பெற்றுள்ளார்.
35,874 வெளிநாட்டினரின் வாக்குகள் எண்ணப்படவில்லை. அவை அனைத்தையும் சேர்த்தால் கூட எர்டோகனுக்கு 49.54% வாக்குகள் மட்டுமே கிடைக்கும்,” என்று தெரிவித்தார். துருக்கி சட்டத்தின்படி, அதிபர் தேர்தல் வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவரே அதிபராக முடியும். இருவருக்கும் 50% கிடைக்காத நிலையில் வரும் 28ம் தேதி மீண்டும் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், எம்பி.க்களுக்கான தேர்தலில் எர்டோகனின் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் 321 இடங்களிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 216 இடங்களிலும் குர்திஷ் ஆதரவு கட்சி 66 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
20 ஆண்டுகால ஆட்சியை தக்க வைப்பாரா எர்டோகன்?
கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கியில் நேற்று (மே 15) அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன் பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.