கடந்த 10ஆம் திகதி ஏறாவூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் போன்று இனி ஒருபோதும் சரித்திரத்தில் இவ்வாறு இடம்பெற கூடாது என ஏறாவூர் நகர சபையில் நீதி நடவடிக்கைகளைக் கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்கப்பட்டதாக நகர சபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு அச்சபையின் மண்டபத்தில் நேற்று நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
வன்முறை சம்பவங்களை கண்டித்தல்
எமது ஊரிலே கடந்த 10ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட அரசியல் விரோதத் தன்மையின் காரணமாக அருவருக்கத்தக்கச் செயல்களை அரங்கேற்றினார்கள். அது எமது இஸ்லாமிய மார்க்கத்திற்கும் விரோதமான செயல். தீவைப்பு வன்முறை கொள்ளைச் சம்பவங்களை இந்த சபை வன்மையாகக் கண்டிக்கிறது.
அன்று இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக எனது ஆழ்ந்த கவலைகளை இந்த சபை அமர்விலே பதிவு செய்கின்றேன். இந்த அநாகரிக வன்முறைகளைச் செய்தவர்கள், தூண்டுகோலாக இருந்தவர்கள், செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நகர சபை உறுப்பினர் எஸ்.எம்.ஏ.எஸ். எம். சறூஜ்ஜால் கொண்டு வரப்பட்ட அவசர நீதி நடவடிக்கைகளைக் கோரிய பிரேரணை சபையினரால் கட்சி பேதமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனை ஆமோதித்தும் வழிமொழிந்தும் பல நகர சபை உறுப்பினர்கள் பேசினர். அந்த பிரேரணையில் தெரிவிக்கையில்,
அரச, தனியார் சொத்துக்கள் இழப்பு
”கும்பலொன்றின் கட்டுக்கடங்காத செயற்பாட்டின் காரணமாகக் கடைகள் உடைக்கப்பட்டும் தீ வைக்கப்பட்டும் ரூபவ் கொள்ளையடிக்கப்பட்டும் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. இதில் அரச சொத்துக்களும் தனியார் சொத்துக்களும் உள்ளடக்கப்படுகின்றன.
எமது நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட மையப்பகுதியில் இவ்வாறான கேவலமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமையானது முகஞ்சுளிக்க வைக்கிறது. அமைச்சர் நஸீர் அஹமட்டின் அலுவலகமாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டடம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அவ்வலுவலகத்திலிருந்த பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்டன.
இதனால் விதவைகள் வாழ்வாதாரமற்ற ஏழைகள் தொடர்பாக முக்கியம் வாய்ந்த ஆவணங்களும் அழிந்து போயின. இச்செயற்பாடுகளுக்கு மூளையாய் இருந்து செயற்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இவ்வன்முறைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
நகர சபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை வன்முறையாளர்களுக்கெதிராக அவசரச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என்றும் அது பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டும் என்றும் கோரப்பட்டது.