சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) உதவி என்பது இலங்கைக்கு வெறும் கனவாகவே இருக்கும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (மே 05) நடைபெற்ற அரசியல், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“வெளிநாட்டுக் கடன்களில் 70 சதவீதத்தை மீள செலுத்த முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது இலகுவான ஒன்றல்ல. இலங்கையைவிட செல்வந்த நாடான கிரீஸ் 2010ஆம் ஆண்டு கடன் நெருக்கடியில் சிக்கியது. எனினும், இன்றுவரையில் அந்நாட்டால் மீண்டுவர முடியவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
“ஓர் அரசாங்கத்தை விரட்டிவிட்டு மற்றுமோர் அரசாங்கத்தைக் கொண்டுவருவதல்ல பிரச்னை. இப்போது முழு ஆட்சியும் வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தனைக்காலம் இலங்கைக் கடைப்பிடித்துவந்த கலாசாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனாலேயே ஜனாதிபதி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டுமென இளைஞர்கள் கூறுகிறார்கள்” என்றார்.