இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம்: விகாராதிபதிக்கு கடும் நிபந்தனைகளுடன் பினையில் செல்ல அனுமதி

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுருக்கு பல நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு நேற்று (30.09.2022) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

பிணைகாரர்கள் வருகை தராமை

இதன்போது இரு தரப்பினர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு சந்தேக நபரான பௌத்த மதகுருவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்ட போதிலும் பிணைகாரர்கள் வருகை தராமையினால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் மீண்டும் குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் மாதம் (04.11.2022) ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரான பௌத்த மதகுரு தொடர்புபட்ட 3 வழக்குகளில் தலா 3 பேர் வீதம் 9 பேர் கொண்ட 5 இலட்சம் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல வேண்டும் எனவும் மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல நிபந்தனைகள்

மாதத்தின் 4 வாரம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அருகில் உள்ள கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் இடுதல், குறித்த வழக்கின் சாட்சிகள் குடும்பத்தினரை அச்சுறுத்துதல் வழக்கு தொடர்பிலான தலையீடு செய்யாதிருத்தல் வேண்டும்.

வெளிநாடு செல்வதற்கு தடை அதாவது கடவுச்சீட்டினை மன்றிற்கு ஒப்படைத்தல் வேண்டும். அவ்வாறு தன்னிடம் கடவுச்சீட்டு இல்லை எனின் உரிய தரப்பினரின் உறுதிப்படுத்தி மன்றிற்கு தெரிவிக்க வேண்டும். கிராம சேவகரின் நலச்சான்றிதழ் சமரப்பிக்க வேண்டும். என்ற கடும் நிபந்தனையுடன் குறித்த பௌத்த மதகுரு பிணையில் விடுவிக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை மறுவிசாரணைக்காக முன்னிலையாகுமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் புதிதாக இணைந்த 3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) இறுதி பகுதியில் இளம் பிக்குகளின் பெற்றோரினால் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் குறித்த வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய அம்பாறை பொது வைத்தியசாலையில் உள்ள பிக்குகளுக்கான தனியான சிகிச்சை பிரிவிற்கு 3 இளம் பிக்குகளும் வைத்திய பரிசோதனைக்காக மாற்றப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 இளம் பிக்குகளும் தாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தலைமை பௌத்த துறவியினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாகிதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதனை அடுத்து குறித்த 3 இளம் பிக்குகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியும் தனது வைத்திய அறிக்கை ஊடாக அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு குறிப்பிட்டிருந்தார்.

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம்: விகாராதிபதிக்கு கடும் நிபந்தனைகளுடன் பினையில் செல்ல அனுமதி | Sexual Abuse Of Young Monks Kalmunai

இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் மருத்துவ அறிக்கை பிரகாரம் செப்டம்பர் 01 ஆம் திகதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பின் பேரில் மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் வைத்தியசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் குறித்த சம்பவ விசாரணை அறிக்கை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பிரகாரம் கடந்த செப்டம்பர் (05.09.2022) ஆந் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக தயார்ப்படுத்தபட்டிருந்தது.

இதற்கமைய 3 இளம் பிக்குகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபராக கருதப்படும் பௌத்த மதகுரு தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் (13.09.2022) ஆந் திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றத்திற்கு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் பௌத்த மதகுரு செப்டம்பர் மாதம் (16.09.2022) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் மன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் (30.09.2022) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சகோதரர்களான 08 ,13 ,14 வயது மதிக்கத்தக்க 3 இளம் பிக்குகளும் ஏற்கனவே அம்பாறை புறநகர் பகுதி ஒன்றியில் இருந்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அண்மையில் கல்முனை பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு புதிதாக இணைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Story

ஞானம் கர்ளாவி சவுதி!

Next Story

இந்தியவை கொள்ளையடிச்சு.. ரஷ்யாவை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்-புதின்!