எலிசபெத் உடல் அருகே பாதுகாப்பில் இருந்த காவலர் திடீர் மயக்கம்: லண்டனில் பரபரப்பு

மறைந்த பிரிட்டன் ராணியின் உடல் லண்டனில் உள்ள வெஸ்மினிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார்.

ஸ்காட்லாந்தில் உயிரிழந்த ராணியின் உடல், அரச வழக்கப்படி பல இடங்களில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, ராணி நீண்ட காலமாக வாழ்ந்த பக்கிங்ஹாம் அரண்மனையில் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர், இறுதிப் பயணமாக அரண்மனையில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் அடங்கிய சவப்பெட்டியை 24 மணி நேரமும் மெய்க்காப்பாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராணி எலிசபெத்தின் சவப்பெட்டிக்கு அருகில் கண்காணிப்பில் இருந்த காவலர் மேடையில் இருந்து திடீரென மயங்கி விழுந்தார்.

இதனைக்கண்டு அஞ்சலிக்காக வந்திருந்த அனைரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அருகில் இருந்த காவலர்கள் அவருக்கு உதவினர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. வரும் 19ம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் சர்ச்சுக்கு சவப்பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு ராணியின் உடலடக்கம் செய்யப்பட இருக்கிறது.

Previous Story

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில்

Next Story

ரஷ்யாவில் கடும் பரபரப்பு.. புதினை கொல்ல நடந்த பகீர் முயற்சி? திடுக் தகவல்கள்