வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டம் மிர்ஷாராய் உபாசிலா பகுதியிலிருந்து நேற்று முன்தினம் மாணவர்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஆசிரியர்களை மினி பஸ் ஒன்று ஏற்றிச் சென்றது. இந்தபஸ், டாக்கா நோக்கிச் செல்லும்போது வழியில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றுள்ளது.
அப்போது அந்த வழியே வந்த பிரோவதி விரைவு ரயில், பஸ் ஆகியவை மோதிக்கொண்டன. இதில் 7 மாணவர்கள், 4 ஆசிரியர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பஸ் மீது ரயில் மோதியதில் சில நூறுமீட்டர் தூரத்துக்கு பஸ்ஸை அந்த ரயில் இழுத்துச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிட்டகாங் தீயணைப்புப் பிரிவுஅலுவலகத்தின் துணைஇயக்குநர் அனிசுர் ரஹ்மான் தெரிவித்தார்.